29 November 2009

இன்னும் ....

கால் ஒடிந்த காக்கைக்கு
எப்படி நேர்ந்தது
இந்த விபத்து?
அடை மழை பெய்யும் போது
அணில்கள்
எங்கே உறையும்?
நடுநிசியிலும் குரைக்கும்
நாய்கள் எப்போதுதான்
உறங்கும்?
எல்லார் வீட்டிலும்
விரட்டப்படும் பூனைக்கு
யார்தான் சோறு இடுகிறார்கள்?
ஏழெட்டு எறும்புகள்
ஏலேசா பாடி
தூக்கிச் செல்லும் பருக்கை
கூட்டை சென்றடைகிறதா?
சின்ன வயதில்
தோன்றிய கேள்விகள்...
இன்னும்
விடை கிடைக்க வில்லை.
என்ன, இப்போது
இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள்
தோன்றுவதில்லை!

-கே.பி.ஜனா

19 November 2009

நிலா கேட்கும் குழந்தை


இரண்டு குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒரு குழந்தையின் கையில்
நட்சத்திரங்கள்
இன்னொரு குழந்தையின் கையில்
வெண்ணிலாக்கள்
நட்சத்திரங்கள் வைத்திருந்த குழந்தை
நிலவை கேட்டது.
' ஒரு நிலவுக்கு
ஐந்து நட்சத்திரங்களைக் கொடு'
என்று கேட்டு
பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கும்
ஆசை வந்து கேட்டேன்
'சூரியனைக் கொடுத்தால்
நிலாவையும் நட்சத்திரத்தையும்
தருகிறோம் ' என்றார்கள்
என் கைகளைப் பாத்தேன்
அதில் சூரியன் இல்லை.
சிறு வயதில்
வைத்திருந்ததாக ஞாபகம்
பெரியவன் ஆனதும்
தொலைத்து விட்டேன்!

-தி. ஐயப்பன்

மிச்ச கருணை



                             
                           எறும்பை நசுக்கி விட்டாய்
                            வாயில் இருந்த சிறு தீனி
                            தன் குழந்தைகளுக்கு
                            எடுத்துப் போனதோ
                            என்னவோ?

 
                           -முத்து வேல்