11 November 2011

ஏன்..எதற்கு..எப்படி 2

#அத்தகைய தோற்றம் கொண்டதால் அவர்கள் அரசாங்க அலுவலகத்தில் குமாஸ்தாவாக உள்ளனரா அல்லது இத்தனை வருடம் அரசாங்கத்தில் வேலை பார்த்தால் அத்தகைய தோற்றம் வந்து விடுமா?

#தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் நடைபெறும் சுவிஷேசப் பிரசங்கங்களில் பேசப்படும் விவிலியத் தமிழை விட ஆங்கிலம் தான் எனக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானா?

#நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்களை தற்போது எங்கேனும் காண நேரிட்டால் மிகுந்த மரியாதையும் அதை விட மிகுதியாக அனுதாபமும் ஏற்படுகிறது.ஏன்?

08 November 2011

குழந்தைகளின் உலகம்


நேற்றிரவு வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைத் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.பாதுகாப்பான தற்போதைய நமது நிலை கடவுளின் பரிசு என்பதை புவனுக்கு உணர்த்த விரும்பிய நான் பின்வருமாறு பேச்சை ஆரம்பித்தேன்.

"புவன்...அப்பா உன்னை மாதிரி குட்டிப்  பையனா இருந்தப்போ இது மாதிரி சின்ன  வீட்டுல தான் இருந்தேன். பெரிய மழை பெய்ஞ்சுதுன்னா வீட்டுக்குள்ள இப்படித்தான் எல்லா தண்ணியும் வந்துரும்.ஆனா இப்ப...."

புவன் இடைமறித்து குதூகலமானான். " நீங்கல்லாம் அப்ப ரொம்ப ஜாலியா இருந்திருப்பீங்க இல்ல , வீட்டுக்குள்ளேயே நீச்சல் எல்லாம் அடிச்சுக்கிட்டு ...."

நான் அதற்கு மேல் பேசவில்லை.

மெய் நிகர் உலகம்


தொலைபேசியில் உன்
ஒற்றை சொல்லுக்காய்
காத்திருந்த சுகம்
மணிக்கணக்காய் நீளும்
காணொளி அரட்டையில்
கிடைப்பதேயில்லை.

வழி மேல் விழி வைத்து
பின் கிடைக்கப் பெற்ற
மடல் வாசிப்பின் ஆன்ம ஸ்பரிசம்
உன்னால் அனுப்பப்பட்ட
எண்ணிலா மின்னஞ்சலில்
கிடைப்பதேயில்லை.

பண்டிகை நாட்களின்
கையெழுத்திட்ட வாழ்த்தட்டைகள்
என்னில் பரப்பும் பரவசம்
123greetings.com ல்
நீ அனுப்பும் மின்னட்டைகளில்
கிடைப்பதேயில்லை.

*******************************************

நாள் முழுவதும்
கால் பந்து விளையாடி
கை வலிக்கிறது
என் பிள்ளைக்கு...
அவன் விளையாடியது
கணினியில் என்பதால்!

******************************************

ஆடாமல் அசையாமல்
ஆள்காட்டி விரல் சொடுக்கில்
online ல் பொருள் வாங்கும் நான்
அப்பாவிடம் கேட்டேன்-
'ரேஷன் கடை நமக்கு
இன்னமும் அவசியமா?'
அப்பா சொன்னார்-
"இங்கிட்டு வாங்கினால்
இருபத்தி சொச்சம்
ரேஷனில் வாங்கினால்
ரெண்டு ரூபா மிச்சம் !"

******************************************

தொலைந்து போன என்
அலை பேசியைத் தேடி
அலைந்து களைத்த வேளையில்
ஆலோசனை சொன்னான் பிள்ளை-
' Google ல்ல தேடுங்கப்பா! '

*******************************************

02 November 2011

ஏன்..எதற்கு..எப்படி..1

தலைப்பைப் பார்த்து விட்டு இது சுஜாதா பாணியிலான அறிவியல் விளக்கக் கட்டுரையோ என நுழைந்தீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வப்போது தோன்றும் விடை தெரியாத ( தெரியா விட்டாலும் பரவாயில்லை போன்ற)வினாக்களை இங்கு பதிவதாக உத்தேசம். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

# பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்தால் , தேநீர் விலை குவளைக்கு ஒரு ரூபாய் உயர்வதை just like that சகித்துக் கொள்கிறோம் . எப்படி?

# 1 ரூபாய்க்கு பேரம் பேசுகிறவர்கள் 30 ரூபாய் அனுமதிச் சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கி திரைப்படம் பார்க்கின்றனர். எப்படி?

# பெரும்பாலான two wheeler mechanics செல்வம், குமார், பாண்டி , சேகர் போன்ற பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

# கி.பி.1800 ல் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து , கருத்தடையின் முக்கியத்துவம் உணரப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 200கோடி அதிகரித்துள்ளது. எப்படி?

# scooty ஓட்டும் பெண்களை ஒரு போதும் overtake செய்ய முடிவதேயில்லை.ஏன்?

# மன நிம்மதி வேண்டி நாம் கோவிலுக்கு செல்வது போல் , அங்கிருக்கும் குருக்கள் மனக்கிலேசமென்றால் எங்கு செல்வார்?

# பேசும் போது நாக்கு வெளியே தெரிவதில்லை என்றாலும் , பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ' இப்ப பாத்தீங்க நாக்க , இப்ப பாத்தீங்க நாக்க' என்று சொல்கிறார்கள். ஏன்?

# தவறு என்று தெரிந்தும் அதை அடிக்கடி செய்யவும், சரி என்று தோன்றுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் விரும்பும் மனதின் உளவியல் பின்னணி என்ன?


01 November 2011

பெய்வதெல்லாம்.....


I std புவனேஷ் : அப்பா....it is raining pa...சீக்கிரம் டிவியை போடுங்க...ஸ்கூல் லீவான்னு பார்க்கணும்.

என் மனைவி : ஏம்ப்பா...through out night மழை இருந்திருக்குமோ...பாவம் , வீடில்லாதவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் !

நான் : Actually , farmers are the ultimate sufferers , you know. இப்படி அறுவடை சமயத்தில பெய்ஞ்சு நாசம் பண்ணுது.

Pre-kGசந்தோஷ்: (தூறலில் நனைந்தவாறு மழை நீரில் குதித்துக் கொண்டிருக்கிறான்)

புரிதல் : பெய்வதெல்லாம் மழையே...மழையைத் தவிர வேறொன்றுமில்லை!