15 December 2012

திரிபுநிலை


உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர்  தாக்குகிறார்களே...நீங்கள்  திருப்பியடிக்க வேண்டாமா ?

தேவையில்லை.

நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம்  கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய்   மாறியே தீருகிறோம்.

பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ்  என்ற உணர்வுகளுக்கு ஆட்ப்படும் போதெல்லாம்  பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.

தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே  திரும்ப வந்தால் ,அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால் அது திரிபுநிலை.

கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக்  குற்றமன்று . குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது.

-வைரமுத்து 

11 December 2012

உற்ற நண்பன்


  • 'தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.
  • ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்...இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.
  • 'மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது' என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றார் தந்தை பெரியார்.
  • ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றார் நெல்சன் மண்டேலா.
  • 'பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்' என நாடு கேட்டபோது 'புத்தகங்கள் வேண்டும்' என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
  • குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவார் சார்லிசாப்ளின்.
  • ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
  • 'ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தார் மகாத்மா.
  • 'விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்' என்று வினவியபோது 'பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது' என பதிலளித்தார் அறிஞர் அண்ணா.
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர் கிங்.
  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது 'எது நூலகத்திற்கு அருகில் உள்ளது' என கேட்டார் டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தார்  பகத்சிங்.

# முகநூலில் காணக் கிடைத்தது

04 December 2012

நான் மகான் அல்ல



மனிதன் எப்போது மகான் ஆகிறான்?

புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன.துய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப் போகிறது. துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும் போது , ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.

பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகி விடுகிறது. 

புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான். 

-வைரமுத்து

25 November 2012

ECSTASY !!!




உங்கள்  குழந்தைகளை  தினமும் அழ வையுங்கள் , இப்படி !!!!!!!


21 November 2012

ஒற்றைப் பனை


ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்  பணி புரிய நேரிட்டிருக்கிற    இன்றைய பொருளாதாரச் சூழலில் ,பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பது பொதுக்கருத்தாக இருப்பினும், கடந்த சில வாரங்களுக்கு  முன்பான 'நீயா- நானா'  நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்து  கவனிக்கத்தக்கது.

''என் தாத்தாவிற்கு  பத்து  பிள்ளைகள்....என் தகப்பனாருக்கு ஆறு பேர்...ஆகவே ,அந்தக் காலத்தில்   தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளில் பெற்றோர்களின் தலையீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்  இப்போது ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு ,நன்றாக வளர்க்கிறேன் பேர்வழி என்று அதீத கவனம் செலுத்தி,பலவந்தமாகப்  பலவற்றைத்   திணித்து,அக்குழந்தையின் இயல்பைச் சிதைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள் " என்று ஆதங்கப்பட்டார். அதற்கு எதிர்வாதம் செய்த சிலர் 'குழந்தையை எப்பொழுதும்  engage செய்வதென்பது  நல்லது தானே'  என்றனர். இந்த வாதம் சரியாகத்  தோன்றினும்  , இதை  நான் மற்றொரு
கோணத்தில் பார்க்கிறேன்.

குழந்தைகள்  இந்த உலகைப் பார்க்கின்ற விதம், தங்களுக்குள் சிருஷ்டித்துக்
கொள்கிற உலகம்,பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் அவர்களின் எதிர்பார்ப்பு என அத்தனையும் பரிசுத்தமானது. அவர்கள்  தனித்தன்மையோடு வளர்வதற்குரிய சூழலை நாம் உருவாக்கித் தரலாமே தவிர  , பெற்றோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது எந்நேரமும்  ஆதிக்கம் செலுத்துவதென்பது  எதிர்மறை விளைவுகளையே  ஏற்படுத்தும். இருப்பது ஒரே பிள்ளை என அளவுக்கதிகமாக  செல்லம் கொடுக்கும் பெற்றோர்தான் குழந்தைகளை அதிகம் அடிக்கின்றனர் என்பது நகைமுரண். 'உனக்கு வேண்டியதை நான் கொடுக்கிறேன்; நான் சொல்வதைக் கேள் ' என்ற குணம்தான் இங்கு ஓங்கி நிற்கிறது. நாம் ஏன் குழந்தைகளை அடிக்கிறோம் ?அவர்களால் திருப்பி அடிக்க முடியாது என்ற  காரணத்தினால் தானே ! ஒப்பீட்டளவில்  வலு குறைந்த அவர்களின் தவறைத் திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களை அடித்து நம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?!

நிற்க.  நான் சொல்ல நினைத்தது குழந்தை வளர்ப்பு பற்றியல்ல;

 எந்தவித முன் தீர்மானமுமின்றி  அணுகும் குழந்தைகளின் உலகில் பிரதான இடமென்பது அவர்கள் வயதொத்த பிள்ளைகளுக்கானதே ! அதில்  நாம் சிறிது   பங்காற்றலாமே  ஒழிய , எந்த விதத்திலும் பங்கேற்க  முடியாது. அக்கம்பக்கத்து குழந்தைகளிடம் நட்பு பாராட்ட  முந்தைய தலைமுறைக்குக் கிடைத்த  வாய்ப்பு  இன்றைய குழந்தைகளுக்கு அறவே இல்லை. தெருவில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கால் வலிக்க வேண்டிய பிள்ளைகள் , இன்று கணினியில் விளையாடி கை வலித்துக் கிடக்கிறார்கள். ஆக , பெற்ற முதல் குழந்தைக்குத்  துணையாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே  ஏற்புடைய  வழி என்பது என்னுடைய கருத்து.

வளர்ப்பதற்கு வசதியில்லை, கவனிப்பதற்குப் பெரியவர்கள் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் தயவு செய்து உரிய இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பரிபாலனம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றை மீறிக் கிடைக்கும் சந்தோஷத் தருணங்கள் உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.   தங்களுக்குள்  சண்டையிட்டும் , சமாதானமாகியும் , வாழ்வின் நியாய அநியாயங்களை அவர்களே இயல்பாகப் புரிந்து கொள்வார்கள். சுக துக்கங்களை தங்கள் மொழியில் பகிர்ந்து ஆசுவாசம் கொள்வார்கள்.  சொந்த பந்தங்களைத்  தொந்தரவாகக் கருதும் நம் சமூகச்சூழலில் ,பிற்காலத்திலும் ஒருவொருக்கொருவர் துணையாக இருப்பார்கள்.

நேற்று இரவு அலைபேசியில் ஒரு அழைப்பு. பெங்களூரிலிருந்து  சுச்சு பேசினான். எங்கெங்கோ சுற்றிய பேச்சு இறுதியில் குழந்தைகளைப் பற்றி வந்த போது ,   இயந்திரகதியில் இயங்கும் தினப்படி வாழ்க்கையில், ஒரு குழந்தையையே பராமரிக்க சிரமமாயிருப்பதால் , இன்னொரு குழந்தையைப் பெற்று அதைக் கஷ்டப்படுத்தும் விருப்பம் இல்லை என்றான். அவனுடைய நிலையிலிருந்து பார்த்தால் அதுவும் சரிதான்.இது பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றோ, கண்டிப்பாக இன்னொன்று பெற்றுக்கொள் என்றோ நான் அவனிடம்   சொல்லவேயில்லை.

இதை தட்டச்சு செய்து கொண்டிருந்த போது , ஓடிப்பிடித்து  விளையாடிக் கொண்டிருந்த புவனும், சந்துவும் ,  அழுதபடி என்னிடம் வந்தனர்.

'அப்பா...புவன் என்னை அடிக்கிறான்.'

'இல்லப்பா ...அவன்தான் என்னை முதல்ல அடிச்சான் '

நான் அவர்களின்  பேச்சுக்கு சற்று காது கொடுத்தேன்.  தீர்ப்பு அளிக்கும்  நோக்கில் அல்ல; அவர்களுக்கிடையேயான காழ்ப்பு அழிக்கும் நோக்கில்.

இவர்களின் சிறு சண்டை  பெரும் போராக உருவெடுக்கும் போது நான் ஏங்கிப் போவதுண்டு  , நமக்கு ஒரு  பெண் குழந்தை இல்லையே என்று .

ம்ம்ம்ம்...எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் கொடுப்பினையிருக்கிறதா , என்ன ?!

12 November 2012

புத்தம் புது காலை

இசை ஞானியின்  ஆகச் சிறந்த இசைக்கோர்வைகளுள்  ஒன்று.  No doubt, one of his best compositions !!!!!!!  அதிலும் , இரண்டு சரணங்களுக்கிடையில் வரும் இரண்டாவது இடையிசையையும் ( second interlude) , Humming ஐயும்  கவனியுங்கள். Devine  !!!!




ராஜாவின் ரசிகர்கள்


இசை ஞானியின்  இசை பற்றி சிலாகிக்கிறார் எழுத்தாளரும், இயக்குனருமான  சுகா அவர்கள்.


இவர் விகடனில் எழுதிய 'மூங்கில் மூச்சு'  அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. தூய தமிழ் தாண்டி வட்டார வழக்கில் எழுதுவதென்பது  சுலபமானதல்ல. முழுக்க முழுக்க நெல்லைத்  தமிழ் துள்ளி விளையாடும் இவரின் எழுத்து நம்மையும் இவரையும்   கண்ணுக்குத் தெரியாத கண்ணியால் இணைக்கும். இசை ஞானியின் தீவிர ரசிகர். இசைஞானி பற்றி இவரிட்ட பல பதிவுகளில் நான் மிகவும் ரசித்தது இது. 

09 November 2012

வினை முடித்தன்ன இனியள்


Madurai to Trichy - 150 km ; Trichy to Madurai - 150 km
but Monday to Friday - 5 days ; Friday to Monday - 2 days 
CHEATING ?!!

வேலை நாட்களில் துக்கத்தையும் , விடுமுறைகளில் மகிழ்ச்சியையும் தருவித்துக் கொள்ளும் மன நிலையின் வெளிப்பாடான மேற்கண்ட ஹாஸ்யம் அண்மையில்  முகநூலில் காணக் கிடைத்தது.

திங்கள் முதல் வெள்ளி  வரையிலான வேலை நாட்களுக்கும் , சனி ஞாயிறு முதலான விடுமுறை நாட்களுக்கும் வெவ்வேறு முகங்கள் உண்டு என்பது நம்மில் பெரும்பாலனோரின் அனுபவமாய் இருக்கும். அடிப்படையில் , உழைப்பு மற்றும் ஓய்வு என்ற வார்ப்புகளினால் ஆன  இந்த மாறுபட்ட முகப்பிம்பங்கள் தான்  'திங்கள் கிழமை காலை என்பது வெள்ளிக் கிழமை மாலையை நோக்கிச் செல்வது' போன்றதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. உழைப்பையும், ஓய்வையும் வெவ்வேறு தளங்களில் வைத்திருக்கும் இந்த மனோ நிலைதான் monotonocity , stress , frustration  போன்ற பல்வேறு காரணிகளுக்கான ஊற்றாக விளங்குகிறது என்று நினைக்கிறேன். வார இறுதி நாட்களில் relaxation  என்ற பெயரில் வஸ்துக்களால் உடம்பை இம்சிப்பதும், தன்னுணர்வு மறந்து கிடப்பதும் இன்றைய இளைஞர்களிடையே பழக்கமாகி வருவதற்குக் காரணம் உழைப்பு என்கிற வார்த்தையின் மீதான கண்ணோட்டமே.

எனக்குள்ளும் பல தருணங்களில் 'உழைப்பு - ஓய்வு' என்பது பற்றிய குழப்பங்கள் சுழன்று கொண்டுதானிருக்கும். உழைப்பு என்பதன் அள்வுகோல் என்ன? நாம் நமது திறமை முழுதும் வெளிப்படும் வகையில் சரியானபடி உழைக்கிறோமா ?  கடின உழைப்பு என்பது மிக அவசியமா ? நமது உழைப்பும், நாம் எடுக்கும் ஓய்வும் சீராக இருக்கிறதா ? ஓய்வு என்பது வெறுமனே சும்மா இருத்தலா? அவ்வப்போது எழும் இது போன்ற  வினாக்களுக்கான விடையை புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ' ஓய்வு என்பது இன்னொரு வேலை பார்த்தல்' என்பார். சங்க இலக்கியம் 'வினை முடித்தன்ன இனியள்' என்று கூறுகிறது. நவீன நிர்வாகவியலாளர்கள் ' No hardwork; only smart work' என்கிறார்கள். ஆனால் , உழைப்பைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கதை, கட்டுரைகளை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகள் தருகிற உற்சாகம் , செயல்படுத்த முனையும் போது வடிந்து விடுகிறது என்பதே நிதர்சனம்.  படிக்கும் போது உத்வேகமும் , நடைமுறைப்படுத்தும் போது சுணக்கமும் தருகிற  இந்த விசயம் பற்றி  நிறைய பேருக்கு நான் அறிவுறித்தியிருந்தாலும் என்னளவில் வெற்றி கண்டதாக நினைக்கவில்லை.

எங்கள் வீட்டிற்கு அடுத்ததாக உள்ள வாடகை வீட்டில் சமீபமாக ஒரு குடும்பம் குடி வந்திருக்கிறது. ஆட்டோ ஓட்டும் கணவன், பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகள் என அந்தக் குடும்பத் தலைவிக்கு அளவான குடும்பம். குடிசை வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படும் கிடுகுத்தட்டி செய்வதுதான் அந்தப் பெண்ணுக்கு வேலை. எப்போது நான் மாடிக்குச் சென்றாலும் , மிக அருகிலிருக்கும் அவர்களது மாடியில், வேய்ந்து கொண்டிருக்கும் கிடுகுகளுடன் அந்தப் பெண் என்  கண்ணில் படுவாள். காலை ஏழு மணி பொழுதிலும் சரி, மதியம் 3 மணி வெயிலிலும் சரி, வெளிச்சம் குறையத் துவங்கும் அந்தியிலும்  சரி, இரவு 9 மணி இருளிலும் சரி , அந்தப் பெண் கிடுகு பின்னிக் கொண்டிருப்பாள். தான் பிறந்ததே கிடுகு வேயத்தான் என்பது போல , அவள் பேயாய் வேலை செய்வது பார்த்து பல முறை விக்கித்து நின்றிருக்கிறேன். மின்சாரம் வந்தாலென்ன, போனாலென்ன....சுட்டெரிக்கும் வெயிலானால் என்ன, சில்லென்ற பனியானால் என்ன...ஏதோ தவம் செய்வது போன்ற பாவனையில் ஒரே வேலை, வேலை , வேலை தான் !  அவ்வப்போது அந்தக் குழந்தைகளும் அருகிலிருப்பார்கள்.

அந்தப் பெண் வேறு வேலை செய்து நான் பார்த்ததேயில்லை. அவள் எப்போதுதான் ஓய்வெடுப்பாள்? எனக்குத் தெரிந்து, தன் பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும் பணிவிடை செய்யும் நேரம் தான் அவளுக்கான ஓய்வு நேரமாக இருக்கக் கூடும்; இல்லை , அந்த வேலைகளை அவள் ஓய்வாகக் கருதக் கூடும். 

வாழ்க்கை நிர்பந்திப்பதால் தான் , சிந்தனை சிதறாமல்  இவ்வாறு  உழைக்கிறாளா? அல்லது அவள் இயல்பே இதுதானா? இடும் உழைப்பிற்கு ஈடான மதிப்பு அவளுக்குக் கிடைக்கிறதா?வாழ்வின் இலட்சியமாக எதைக் கொண்டிருப்பாள் ?அல்லது, வாழ்வதே ஒரு இலட்சியமாக இருக்குமோ?   கிடுகு வேய்வதைத் தவிர வாழ்வில் வேறு இன்பங்களும் உண்டு என்பதை அறிவாளா? ஓய்வு நாட்களில் வாழ்வைத் தேடும் நாமும்,  தேடலே இல்லாமல் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் 'வாழ்ந்து' கொண்டிருக்கும் அவளும் ஒன்றா?

யோசித்தவாறே பண்பலையில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 'நீங்கள் கேட்டவை' படத்திலிருந்து ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி வரிகளைக் கேட்டவுடன் இதுவரையான அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து மனம் துடைத்து விட்டாற் போலிருந்தது. 

பாடல் வரிகளும் அதற்கான காணொளியும்  கீழே :

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருக்கின்ற தென்பது மெய்தானே.
ஆசைகளென்ன ஆணவமென்ன
உறவுகள் என்பதும் பொய்தானே.
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே !

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி 
போனது போக எது மீதம்
பேதை மனிதனே,
கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்!

இந்தப் பாடலை அந்தப் பெண் ஒரு தடவையாவது கேட்டிருப்பாளா?!






08 November 2012

காலத்தை இசைத்தவன்

இசை ஞானி பற்றி  கவிஞர்  பழனிபாரதியின் கவிதை : 

உலகத்தை ஆள
செங்கோல் தேவையில்லை
ஒரு புல்லாங்குழல் போதுமென்று
நிரூபித்தவன் நீ

சூரியனும் சந்திரனும்
உனது இசைத் தட்டுகள்
உன் ஆர்மோனியத்தின்
கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கிடையில்தான்
கட்டுண்டு கிடக்கின்றன
எங்கள் இரவும் பகலும்

வானில்
பறவைகள்
சிறகுகளால் எழுதும்
உனது இசைக்குறிப்புகளை
பூமியில்
பூக்கள் இசைப்பதைத்தான்
நாங்கள்
வசந்தகாலம் என்கிறோம்

இங்கே
சருகுகளில்
சப்திப்பதும்
உன் சங்கீதம்தான்

உன் ஆரோகணம்
மேகம்
உன் அவரோகணம்
மழை

நீயின்றி அமையாது உலகு

நீ இசைக்கத் தொடங்குகிறாய்
உன் ஆர்மோனியத்தின்மேல்
காட்டு மரங்கள் அசைகின்றன
காதல் பறவைகள் கூடுகின்றன
ஒழுகும்
உன் இசையின் ஜீவநதியில்
கடவுள்
குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்

என்ன அழகான
ஒரு பின்னணி இசை இது...

நீ கடவுளைப் பார்த்துக்கொண்டிருக்க
நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க


-பழநிபாரதி

05 November 2012

ஏன்..எதற்கு..எப்படி 4

# கன்னடப் பட கதாநாயகர்கள்  மட்டும் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்  ?!

# உலக இலக்கியம் மட்டும்தான் படிப்பதாகப் பீற்றிக் கொள்பவர்கள் , தமிழ் இலக்கியமும் உலக இலக்கியங்களுள் ஒன்றுதான் என்று தெரியாதவர்களா ?

# போட்டித் தேர்வு எழுதுபவர்களில் முக்கால்வாசிபேர்  கைகடிகாரம் அணிந்து வராமல், மணிக்கு இருமுறை கண்காணிப்பாளரிடம் மணி கேட்கிறார்களே , ஏன் ?

# மேடை நிகழ்ச்சிகளில் தங்களின் புகழ் பெற்ற பாடலைப் பாடும் பிரபல பாடகர்கள் extra சங்கதிகளைப் போடும் போது  கொலைவெறி உண்டாகிறதே ......அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா?

# Traffic Signal ஐ ,  நாம் நெருங்கும் போது  மட்டும் சொல்லி வைத்தாற் போல் red signal விழுவதைத் தவிர்ப்பது எப்படி ?

#  இனிப்பிற்கு பிரபலமான கடையில்  அதிக விலை கொடுத்து காரம் வாங்குவது தவறு என்ற எனது எண்ணம் சரியா , தவறா ?

#  லிட்டருக்கு ஒரு ரூபாய் விலையேறும்  நள்ளிரவுக்கு முன்பாகவே ,வண்டியில் பெட்ரோல் நிரப்ப, traffic jam ஆகும் அளவுக்கு பங்குகளில் அலைமோதும் மக்களின் சிக்கனத்தன்மையை  பாராட்டுவதா, நொந்து கொள்வதா? 


22 October 2012

விடாது நெருப்பு




'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்பதாக நடக்கிறவர்களை விட , 'தான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம்என்று  நினைப்பவர்கள் அதிகம் போற்றப்பட வேண்டியவர்கள் என்பது என் எண்ணம். தான் ரசித்து மகிழ்ந்த  திரைப்படத்தை பிறருக்கு பரிந்துரைப்பது நல்ல குணம் என்றாலும்தான் கீழே விழக் காரணமாயிருந்த பள்ளத்தில்  பிறர் விழுந்து விடாத வண்ணம் குச்சியை ஊன்றிவிட்டுச் செல்வது அதை விட மேலான குணம்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை , அவற்றைக் கடைபிடிக்கும் வழிமுறைகளோடு, சுவாரசியமான கதைப் போக்கினூடாக நமக்குக் கற்றுக் கொடுத்தது போலவேவாழ்வின் முற்பகுதியில் தான் இழைத்த ஒரு தவறு, எவ்வாறு தன் வாழ்வின் பிற்பகுதியைச் சின்னாபின்னமாகச் சிதைத்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக  நம் முன் வைக்கிறார். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள கட்டுரையைப் படியுங்கள்இந்தக் கட்டுரைப் பொருளுக்கும்உங்களுக்கு சம்பந்தம் இருக்கும் பட்சத்தில்யார் கண்டது...இந்த நாள் உங்கள் அந்திம காலத்தின் தினசரி வாழ்க்கைப் போக்கை செம்மைப்படுத்தக்கூடிய நாளாக அமையக்கூடிய வாய்ப்பிருக்கிறது


19 October 2012

இறுதிச் சுற்று


கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது  சொல்வாள்
நான்  எழுத்தாளராகி விடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப் போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக்  கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்படக் கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியனின் மனைவியாகிவிட்டாள் .


- சூ .ஜூலியட் மரியலில்லி 

16 October 2012

சுக போஜனம்



கலியுகத்தின் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது வாழ , நாம் சாப்பிடும் பொருட்களை மட்டுமல்ல , (நாம் மறந்து போன) சாப்பிடும் முறையையும் புனரமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சாப்பிடும் போது குறைந்த பட்சம் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து வந்தால்நோய் எதுவும் நம்மைப் பீடிக்காது என்பது திண்ணம். 'இதெல்லாம் சும்மாஎன்று சொல்லி அலட்சியப்படுத்துவீர்களேயானால் , சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்று அர்த்தம்.

உணவு உண்ணும் முறை
1)குளித்தவுடன் தவிர்த்தல்
2)கை,கால்,முகம் கழுவுதல்
3)காலை மடக்கி அமருதல்
4)உணவில் அறுசுவை
5)முதலில் இனிப்பு
6)சாப்பாட்டில் கவனம்
7)வாய் மூடி மெல்லுதல்
8)எச்சில் கலத்தல்
9)பற்களால் அரைத்தல்
10)ரசித்து ருசித்தல்
11)சுவை திகட்ட உண்ணுதல்
12)சுவை அற்று விழுங்கல்
13)பேச்சைத் தவிர்த்தல்
14)தண்ணீரைத் தவிர்த்தல்
15)தொலைக்காட்சி தவிர்த்தல்
16)புத்தகம் தவிர்த்தல்

12 October 2012

மின்சார கனவு



தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களையும் ,  தீர்வு முறைகளையும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பைச்  சேர்ந்த  திரு.கோவை. சா.காந்தி அவர்கள் முன்வைக்கிறார். 


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.  இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்ற
ு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது. 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். 

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். 

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். 

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது. 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. 

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. 
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை. 

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. 

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது. 

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. 
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும். 

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். 
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும். 
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன. 
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்
கோவை. சா.காந்தி, 
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
9 அக்டோபர் 2012