15 February 2012

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். புறம் ஏற்படுத்தும் தாக்கங்களும் , அகம் உணரும் உணர்வுகளும் அனாயாசமான வார்த்தைகளில் வந்து விழுகின்றன கல்யாண்ஜி அவர்களுக்கு. மிக எளிமையான ஒப்பீடுகளின் வாயிலாக வாழ்க்கையின் பின்னே மறைந்து கிடக்கும் பேருண்மைகளை வெளிக்கொணர்வது அவருக்கு எளிதாகக் கைகூடுகிறது. மனம் சஞ்சரிக்க விரும்பும் உலகத்திற்கும் , நாம் தினம் எதிர்கொள்ள நேரிடும் எதார்த்த வாழ்வின் சிக்கல்களுக்கும் இடைப்பட்ட தொலைவை இவரது கவிதைகள் பிரயத்தனம் ஏதுமின்றிக் கடக்கின்றன.



நூலிலிருந்து ...
********************************************************
தலைப் பிரட்டைகள்
நீயும் பிஸ்கட் தின்னென்று
பேபி சொல்லும்
ஆயாவோ
மீதித் துட்டைச் சரி பார்த்து
வாங்க நிற்பாள்.
பேக்கரியின் அடியில் பழம்பேப்பர்க்
கிழிசலோடு விளையாடி
பூனைக்குட்டி தரையெலாம்
புரண்டு கொஞ்சும்
எலி வேட்டை
இன்னும் தெரியாது
என்பதனால்.
******************************************
சூரியனை -
ஆற்றங்கரை மணலை -
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை -
பட்டாம் பூச்சியைத்
தொலைத்து விட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை .
*********************************************
நறுக்கென்று
ஒரு சிறு கவிதை
எழுத முயல்கிறேன்.
கொப்பரைத் தண்ணீரைக்
கவிழ்ப்பதை விட
எப்போதும் சிரமமாகத்தான்
இருக்கிறது
பேனாவுக்கு மை அடைப்பது.
********************************************
சிறுவனாகப்
பென்சில் சீவும் போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்து விட்டது வயதுடன் .
எஞ்சியது என்ன ?
காயம் படாத கைவிரல்.
நிஜம் கசியாத கவிதை.
***************************************

14 February 2012

காதல் எனப்படுவது ...

பால்யம் :
இதுதானெனத் தெரியாது
அதுவாவெனப் புரியாது
எதுவாயிருப்பினும் மனதுக்கு
ஏதுவாயிருக்கும் அதுதானது !

பதின்மம் :
இதுவானதாகவும் தெரியும்
அதுவானதாகவும் தெரியும்
எதுதானதுவெனப் பருவம்
அறியாது அதுதானது !

மத்திமம் :
இதுதானெனத் தெளியும்
அதுதானெனவும் புரியும்
எதுதானதுவெனத் தேடும்
தேடிக் காணும் அதுதானது !

அந்திமம் :
இதுவுமல்ல அதுவுமல்ல
எதுவுமல்ல அதுவென
உயிர் அடையும் உணர்வு
உண்மையில் அதுதானது !