01 November 2011

பெய்வதெல்லாம்.....


I std புவனேஷ் : அப்பா....it is raining pa...சீக்கிரம் டிவியை போடுங்க...ஸ்கூல் லீவான்னு பார்க்கணும்.

என் மனைவி : ஏம்ப்பா...through out night மழை இருந்திருக்குமோ...பாவம் , வீடில்லாதவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் !

நான் : Actually , farmers are the ultimate sufferers , you know. இப்படி அறுவடை சமயத்தில பெய்ஞ்சு நாசம் பண்ணுது.

Pre-kGசந்தோஷ்: (தூறலில் நனைந்தவாறு மழை நீரில் குதித்துக் கொண்டிருக்கிறான்)

புரிதல் : பெய்வதெல்லாம் மழையே...மழையைத் தவிர வேறொன்றுமில்லை!

30 October 2011

இவற்றுக்காகவாவது...


நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி...

என் மூச்சு தொடும்
நமது அறைக் காற்று
நீயின்றித் தவித்து
பெருமூச்சு விடும்.

உடல் துடைத்த கைத்துண்டின்
ஈரம் படிந்த அணைத்தலை
இன்று இழந்த ஏக்கத்தில்
கிரீச்சிடும் கட்டில் முனை.

அறை விளக்கற்ற அரை வெளிச்சத்தில்
கிடைக்கும் உன் விரல் ஸ்பரிசம்
இன்றில்லை யென சுவர் ஏங்கும்.

உன் முக அழுத்தம் பிரிந்தறியா
தலையணை யிரண்டும்
கண்ணீர் விட்டுக் கனத்துப் போகும்.

உன்னைப் பிரிந்த அரற்றலை
அலாரம் வைக்காமலேயே
அலறிக் காட்டும் கடிகாரம்.

அறையோடு சேர்ந்து
பிறை போலத் தேயும்
என் மனதும்.

நானில்லா நாட்களின்
உனதான தவிப்பை
நினைந்து நினைந்து
இவற்றோடு நானும்
புலம்பிக் கொண்டதால்
நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி....

வந்து விடேன் சகியே...
எனக்காக இல்லையெனினும்
இவற்றுக்காகவாவது.

20 October 2011

சூப்பர் சிங்கர் ஜூனியர்


அடுத்த வதை ஆரம்பமாகி விட்டது. வதைக்கான கூடமும், வதைபடப் போகும் ஜீவன்களும் தயார். நாட்டாமைகளும் கோட் சூட் சகிதம் வந்து விட்டார்கள்.


பயிற்சி என்ற பெயரால் உடல் வருத்தமும் , விமர்சனம் என்ற பெயரால் மன அழுத்தமும் பெற்று துயரப்பட போகும் இந்த ஜீவன்களை ஈன்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றுகிறது.
'ஏம்ப்பா (சற்று காரம் கூட்டி 'ஏண்டா' என்றும் விளிக்கலாம்)...தங்கறதுக்கு இடமும் , திங்கறதுக்கு சோறும் கொடுத்துட்டா ஒரு ஜீவனை, அதாம்ப்பா.... நீ பெத்த பிள்ளையை எப்படி வேணும்னாலும் கொடுமைப்படுத்துவியா ? பிள்ளைகளுக்கு அந்தந்த வயசுக்கு உண்டான சுதந்திரத்தையும் , சந்தோசத்தையும் கொடுங்கப்பா...'

Red Cross, Blue Cross மாதிரி இந்த சிறார்களைக் காக்க ஏதாவது ஒரு அமைப்பை சீக்கிரம் தொடங்கினால் தேவலாம்.

13 October 2011

சம்சார சாகரம்

மனைவியின் அன்புத் தொல்லை.
உறவினரின் உரிமைத் தொல்லை.
செல்வங்கள் தான் என்றாலும்
பிள்ளைகள் தொல்லையோ தொல்லை.

நம் நேரம் நமதில்லை.
கண நேரம் ஓய்வில்லை
புறம் செல்ல வழியில்லை.
புறம் கூற இடமில்லை.

அச்சிறைப்பட்டோர் என்றேனும் மீள்வர்.
இச்சிறைப்பட்டோர் மாளாது மாள்வர்.
அச்சாகரம் கரை சேர்க்கும்.
இச்சாகரம் நுரை தள்ளும்.

ஆத்திகன் நாத்திகனாவான்.
நாத்திகன் ஆத்திகனாவான்.
சத்தம் சமாதானம் பேசும்.
சாத்வீகம் சண்டை போடும்.

ஏற்க நேரும் பாத்திரம் சில.
தோற்க நேரும் பாத்திரம் சில.
இல்லறத்தில் கவலைகள் பல
எனினும்
பிரம்மச்சரியத்தில் மகிழ்ச்சியே இல !

26 August 2011

வாழ்வின் உக்கிரம்

கடந்த ஒரே வாரத்தில் , ஒரு மனிதனின் அதீத மகிழ்ச்சியையும் , அவன் அடைந்த அதீத துக்கத்தையும் மிக அருகிலிருந்து கண்டேன். அடைந்த மகிழ்ச்சியும் , துக்கமும் ஒரே விஷயம் தொடர்பானதுதான்.

"என்னது , உன் பையன் ஒண்ணாவதுதான் படிக்கிறானா...ஒரு நாலாவது வகுப்பு படிப்பான்னு நினைச்சேன்... நீ தான் ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டியே , மேடேஸ் ?"

திருமண அழைப்பிதழ் கொடுக்க வீட்டிற்கு வந்த என் நண்பரின் கேள்விக்கு நான் அளித்த பதில் , "இல்ல பாஸ்... நீங்க தான் ரொம்ப லேட்...!"

உடன் பிறந்த தங்கைகள் அனைவருக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வேளையில் நல்ல வரன் அமைந்து , சென்ற வியாழனன்று நடந்தது என் நண்பரின் திருமண விழா . திருமணத்திற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்பினேன். ஒவ்வொரு கணமும் மிகக் குதூகலமாயிருந்தது. மீனாட்சி அம்மன் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருப்பூட்டு முடிந்து , அனைத்து சந்நிதி வழிபாடு முடிந்து, மண்டபத்தில் அனைவரின் வாழ்த்து பெற்று , அனைவரும் ஆசுவாசப்படும் வரை நண்பரின் அருகிலேயே இருந்தேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக தொடர்பில் இல்லையென்றாலும் ,அதற்கு முன்பு மிக அன்னியோன்யமாகப் பழகியிருக்கிறோம். யாருக்கும் தீங்கு எண்ணாத , யார் மனதையும் மறந்தும் புண்படுத்தாத , கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள அவரின் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியதில் எனக்கு பரம சந்தோசம். " பார்த்தியா....லேட்டானாலும், வெயிட்டா செட்டிலாயிட்டாரு...ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னு ப்ரூவாயிடுச்சுப்பா..." .நான்கு நாட்களாக என் மனைவியிடம் எதைப் பற்றிப் பேசினாலும் இதில் வந்துதான் முடிப்பேன்.


புதனன்று அதிகாலை இறங்கியது இடி ஒத்த செய்தி. நண்பரின் மனைவி இறந்து விட்டார். கேட்ட செய்தியைச் செரிக்க இயலாமல் என்னவென்று விசாரித்ததில் , குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்து , பின் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம். நெடு நாட்களாக இருக்கும் இப்பிரச்சினையை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்ததாலும் , தொடர்ந்து எடுத்து வந்த மருந்து மாத்திரைகளை திடீரென்று நிறுத்தியதாலும் வந்த விபரீத விளைவு , அனைவரையும் புரட்டிப் போட்டு விட்டது. " எல்லாமே மின்னல் மாதிரி நடந்து முடிஞ்சு போச்சு " , ஆற்றாமையுடனும் , அவலத்துடனும் , அழுகையும் குமுறலுமாக நண்பர் பேசியது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. ஆறுதல் சொல்லக் கூடிய இழப்பா இது ? பத்து நாள் பசியோடிருப்பவனிடம் அறுசுவை உணவில் ஒரு விள்ளலைக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லி விட்டு , அவன் எதிரிலேயே அதைக் குப்பையில் கொட்டினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் ? நான் அதிகம் பேசாமல் அவர் கையைப் பிடித்து சிறிது நேரம் இருந்து விட்டு எழுந்தேன்.

எழும் போது சொன்னார்... "சாப்பிட்டுப் போ...மேடேஸ் ...."

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை என்னை மீறிப் பீறிட்டது. "உங்களுக்குப் போய் இப்படி நடந்திருச்சே ....." மெதுவாக வார்த்தைகளைப் பிரசவித்தேன்.

மேற்கொண்டு ஏதும் பேச இயலாமல் விடை பெற்றேன்.

இரு தினங்களாக நான் இன்னும் இதிலிருந்து மீள வில்லை. எதைக் கண்டாலும் , யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வருகிறது. வாழ்க்கையின் குரூரம் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் மனச் சுவற்றை அறைந்த வண்ணம் இருக்கின்றன. நான் இயல்பாக இல்லை. தத்துவப் புத்தகங்கள் எத்தனை படித்தாலும் , இத்தகைய பொழுதுகளில் அவை துணை நிற்பதில்லை.

என் நிலை பார்த்து ஒருவர் சொன்னார். " ஏதாவது கோவிலுக்குப் போயிட்டு வாங்க சார்...மனசு நிம்மதியாகும்."

நானும் நினைத்திருக்கிறேன். இந்த வாரம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் , கல்யாண சுந்தரேஸ்வரரிடம் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க .












19 August 2011

தெய்வத் திருமகள்

'தெய்வத் திருமகள்' தொடர்பாக எனக்கும் என் சக ஊழியருக்கும் நடந்த உரையாடல் :
நான் : ரொம்ப நாளாச்சு சார் , இப்படி ஒரு படம் பார்த்து ! நீங்க பார்த்தாச்சா ?
அவர் : கடைசியா சிறுத்தை பார்த்தேன் ...அதை விட சூப்பரா இருக்குமா ?
நான் : இல்ல சார்..இது வேற மாதிரி....படம் முழுக்க கண் கலங்கிப் பார்த்தேன்.
அவர் :ஒ....அழுகைப் படமா ? இப்படித்தான் போன தடவை நீங்க சொன்னீங்கன்னு 'நந்தலாலா' போய்ப் பார்த்தேன்...நல்லாவே இல்ல...
நான் : (அவர் பாஷையிலேயே ) இது அதை விட அழுகைப் படம், சார் ...
அவர் : அப்படின்னா நான் கண்டிப்பா போகல...
நான் : ம்ஹூம்...சோகத்தினால வர்ற அழுகை இல்ல....உணர்ச்சிவசப்பட்டு வர்ற அழுகை...
அவர் : அடப் போங்க சார்...தியேட்டருக்குப் போனோமா , ரெண்டு மணி நேரம் ஜாலியா இருந்தோமான்னு இல்லாம...
நான் : நீங்க போகலேன்னாலும் பரவாயில்லை...நாலு பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துப் பார்க்கச் சொல்லுங்க சார்...இந்த மாதிரி படத்தை எல்லாம் என்கரேஜ் பண்ணனும் ....
அவர்: ஒண்ணு பண்ணுங்களேன்...நீங்களே டிக்கெட் வாங்கிக் கொடுங்க ...நான் வேணா போய் பார்க்கிறேன்.
நான்: எனக்கு இதுவும் வேணும் ...இன்னமும் வேணும்... (அட..மனசுக்குள்ளதாங்க!)

17 August 2011

பசுவின் சிசு

"ஏம்ப்பா....சீக்கிரம் இங்க வாங்களேன் ..."
இன்று அதிகாலை மனைவியின் குரல் கேட்டு பதறியடித்து வெளியே ஓடினேன்.
"இங்க பாருங்க...இதைப் பார்த்தா நாம செஞ்ச பாவமெல்லாம் போயிரும்னு சொல்வாங்க...."
அவள் சுட்டிய இடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு சினைப் பசு கன்று ஈன்று கொண்டிருந்தது. கன்றின் கால் மட்டும் வெளியே தெரிய, ஒருசாயலாக படுத்திருந்த பசுவின் முகம் சலனமற்றும் , சிறு வைராக்கியத்துடனும் இருந்தது. ஒரு உயிரின் ஜனனத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் பதற்றம் மேலிட , எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். சக தோழியின் பிரசவம் போன்று , பெண்களுக்கே உண்டான வாஞ்சையுடன் என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் எல்லாம் சுபமாய் முடிய , புத்தம் புதிய ஜீவன் ஒன்று எங்கள் அனைவரின் முகம் பார்த்தது. சுமை இறக்கிய களிப்புடன் எழுந்த பசு , குட்டியை நாவால் நக்கித் தன் இருப்பைத் தெரியப்படுத்தியது.
இனம் புரியா குதூகலத்துடன் நாங்கள் நகர எத்தனித்த போது , அது வரை படுத்திருந்த கன்று எழுந்து நிற்க முற்பட்டது. உதட்டோரப் புன்னகையுடன் நான் பார்த்துக் கொண்டே நடக்க , சில பல நொடிகளில் எழுந்து நடந்தே விட்டது.
ஆச்சர்யம் மேலோங்க , வீட்டிற்குள் சென்று அன்றைய தினசரியை விரித்தேன். படித்து முடித்தவுடன் ,அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலுமாக வழிந்தோடி விட்டது. பிறந்தவுடன் எழுந்து நடக்கக் கூடிய வரம் மனிதப் பிறவிக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் கல்லூரிக்குக் கிளம்பினேன். தான் பெற்ற சிசுவை , ஆறறிவு உடைய மனிதன் தன் இமை போலக் காப்பான் என்ற படைப்புருவாக்கத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கக் கூடிய, தினசரியில் நான் கண்ட அந்த செய்தி இதுதான்.


'பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.'





28 November 2010

நீ - கர்ப்பிணி

ஜெயிக்கின்ற எல்லோரும் கர்ப்பிணியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்க வேண்டும்.நிறைமாதக் கர்ப்பிணிக்கு தன் கருவின் மீது அபார நம்பிக்கையும் , அதனால் அதன் மீது ஒரு அன்பும் ஏற்படும். தான் சுமக்கின்ற கரு மீது எற்பட்ட அன்பு, தன் மீதும் பரவ, தன்னைத்தானே நேசிக்கின்ற ஒரு ஆத்மாவாக அந்தக் கர்ப்பிணி இருப்பாள். அதே சமயம் தான் சுகப்பிரசவம் அடைய வேண்டுமே என்ற கவலையும் அவளுக்கு இருக்கும்.
கருவின் மீது கொண்ட அன்பால், கவலையால், கர்ப்பிணி அதிர்ந்து நடக்க மாட்டாள். ஆவேசம் கொள்ள மாட்டாள். அப்படிச் செய்ய நஷ்டம் அவளுக்கே.மாறாய், கர்ப்பிணி ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைப்பாள்.
அது போல,
நீ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை,ஏதோ ஒரு விதமாக ஆளாக வேண்டிய விருப்பத்தை, கர்ப்பிணிப் பெண் தாங்குவதைப் போல் தாங்கு. எல்லா நேரமும் , எதைச் செய்தாலும், கர்ப்பிணியின் சிந்தனை கருவிலே இருப்பதைப் போல, உன் உயர்வு குறித்த சிந்தனை உன்னிடம் இடையறாது இருக்க வேண்டும்.ஒரு கவலை போல இருக்க வேண்டும்.
வீண் வம்பிலோ , வழக்கிலோ ஈடுபட விரும்பாது , எங்கேனும் சிக்கினாலும் , நகர்ந்து கொள்கிற கர்ப்பிணியாய் நீ இருக்க வேண்டும்.கர்ப்பிணி ஆவேசமுற்றால் பிரச்சினை கருவுக்குத்தான்.நீ ஆவேசமுற்றால் பிரச்சினை உன் உயர்வுக்குத்தான்.
கர்ப்பிணி தன் கருவினை நேசித்து , அதைத் தாங்கும் தன்னை நேசிப்பது போல, உன் லட்சியத்தையும், உன்னையும் நேசிக்கக் கற்றுக் கொள். உன்னை நேசிப்பது எப்படி வெளியே வரும்? உன் உடையழகில் , உன் நடையழகில் , உன் பேச்சழகில், உன் செயலழகில் வரும்.
குளித்து சுத்தமாக உடுத்திக் கொள்.நிற்பதும் , நடப்பதும், எழுவதும், அமர்வதும் ஆரவாரமில்லாமல் இருக்கட்டும்.அதாவது நீ கர்ப்பிணி.இலட்சியமுள்ளவன்.ஒரு போதும் துள்ளாதே. மக்கு ஆடுகள் தான் காரணமின்றி துள்ளும்.எகிறித் தங்களுக்குள்ளே முட்டிக் கொள்ளும்.ஆடுகள் முட்டிக் கொள்வதைப் போல தமாஷ் உலகத்தில் எதுவுமில்லை.
இதற்குப் பிறகு பேச்சு. மிகப் பணிவாகவும், தெளிவாகவும் பேசு.சின்ன வாக்கியங்களாய் நிதானமாய் பேசு. உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில் , உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, எதிராளிக்கு உன்னைத் தெளிவாகப் புரிய , ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.
நீ குளிக்கிற இடம்,உடை வைத்திருக்கும் பெட்டி, புத்தக அலமாரி, இந்த சூழ்நிலைகளை மிகச் சுத்தமாக வைத்திருப்பது உன் செயலில் நேர்த்தி வர ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
Perfection மிக மிக முக்கியம்.செருப்புக்கு பாலிஷ் போடுவதை , ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதைப் போல் செய். உன் வேலைகளுக்கு இன்னொருவரைக் கட்டளையிடாதே. முழுமையாய், விருப்பமாய், திருத்தமாய் வேலை செய்.விருப்பமாய் வேலை செய்கிற போது , வேலைகள் நிறைய வரும்.வேலைகள் நிறைய சேர்ந்தால் வீண் பேச்சு குறையும். வீண் பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.
ஆனால் வாழ்க்கை அத்தனை சுலபமில்லை. நீ சரியாக இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல பேர் வருவார்கள். தன் வாழ்க்கையைச் சரியாக அமைக்காத தான்தோன்றிகள், திருடர்கள்,பொய்யர்கள் உன்னைக் கவிழ்க்க வருவார்கள்.இப்படிப்பட்டவர்கள் உறவு என்கிற பெயரிலோ, நட்பு என்கிற பெயரிலோ நெருக்கமாய் இருப்பார்கள்.அவர்களிடமிருந்து அப்பால் போக முடியாத சூழ்நிலை இருக்கும்.
தன் தேவையையும்,தன் பலத்தையும் முற்றும் உணர்ந்தவன் இவர்களை அமைதியாகச் சமாளிப்பான். இவர்கள் பக்கமிருந்தும் , இவர்களிடமிருந்து விலகி இருப்பான்.இவர்களோடு பேசிச் சிரித்தாலும், இவர்களோடு ஒட்டாது இருப்பான். சமயம் வரும் போது முழு மூச்சாய் எதிர்ப்பான் .
சண்டை போடுகிற தகப்பன் , ஏமாற்றுகின்ற தமையன்,கட்டிப் போடுகின்ற தாய், சுமக்கச் சொல்கின்ற தங்கை, ஏளனம் செய்கின்ற காதலி, இங்கிதம் இல்லாத நண்பர்கள் என்று உலகத்தில் பல வேதனைகள் உண்டு. மறுக்காதே,ஏற்றுக்கொள்.
இவர்களை விட்டு எங்கும் விலக முடியாது.நீ எங்கு போயினும் இதுபோல் எவரோடும் வாழத்தான் வேண்டும்.உன்னைப் போல் உண்டா என்று அவர்களுக்கு தீனி தூக்கிப் போடு. திணறும் அளவுக்குப் பாராட்டு.ஆனால் மனதிற்குள் விலகியே இரு.உன் வேலைகளைக் கவனித்தபடி இரு.
-எழுத்துச் சித்தரின் 'கற்பூர வசந்தம் ' நாவலிலிருந்து

06 November 2010

பள்ளியெழுச்சி



அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை.

இரவின் மடியில்...

காலையின் மலச் சிக்கலை விட இரவின் மனச் சிக்கல் அபாயமானது. அன்றைய பொழுதின் கசடுகளை வடிகட்டித் தெளிய , படுக்கையில் விழுந்தவுடன் அலைபேசியில் சில பாடல்களைக் கேட்பேன். தூக்கம் வந்து கண்களைச் சுழற்றும்.
அந்தப் பாடல்கள் அதன் வரிசையில் :
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பத்ரகாளி
2. கனாக் காணும் கண்கள் மெல்ல ... அக்னி சாட்சி
3. மனைவி அமைவதெல்லாம் ... மன்மத லீலை
4. உறவுகள் தொடர்கதை ... அவள் அப்படித்தான்
5. அழகே அழகு தேவதை ... ராஜ பார்வை
6. லாலி லாலி லாலி ... சிப்பிக்குள் முத்து
7. தாழம்பூவே வாசம் வீசு ... கை கொடுக்கும் கை
8. தெய்வீக ராகம் ... உல்லாசப் பறவைகள்
9. புத்தம் புது  காலை ... அலைகள் ஓய்வதில்லை
10. என் இனிய பொன் நிலாவே ... மூடுபனி

ஒரு நாளேனும் அந்த எட்டாவது பாடலைக் கடந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்கிறேன். ம்ஹூம், முடிவதேயில்லை.



28 October 2010

நாரில் பூத்த மலர்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் தன மனைவியின் பிரிவில் எழுதியது ...
என் மனைவியிடம் மனைவிக்கு உரிய இலக்கணங்கள் இருந்தது இல்லை. எங்கள் 46 ஆண்டு இல்லற வாழ்க்கையில் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை . நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் அதுதான் உண்மை. இந்தப் பெருமை என்னைச் சாராது; அவளையே சாரும்.
நான் சில நேரத்தில் கோபத்தில் நெருப்பை உமிழ்ந்தாலும், அவள் அமைதியாக இருந்து விடுவாள். இது என்னைச் செருப்பால் அடித்தது போல் இருக்கும். ' இவளைப் போய்த் திட்டிவிட்டோமே!' என்று நான் இரண்டு நாள் வருத்தப்படுவேன்.
பூ வேண்டும், புடவை வேண்டும் , நகை வேண்டும் என்று அவள் ஒருநாள் கூடக் கேட்டதே இல்லை.
பாலைவனத்துக்கேன்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்கு என்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் என் மனைவி. அவள் போய் விட்டாள். நான் வெறும் பாலைவனமாய் நிற்கிறேன்.
என் மனைவி எனக்குக் கிடைத்த பிறகு நான் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
அவள் நான் கேளாமலே கிடைத்த வரம். அவள் மூலம் இறைவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டான் அவளைத் தவிர ,வேறு யாரும் என்னோடு வாழ்ந்திருக்க முடியாது.
மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும் போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்
என் மனைவி இளமையில் மதுவாக இருந்தாள்;நடுமையில் பாலாக இருந்தாள்; முதுமையில் மருந்தாக இருந்தாள்.
என்னை நேசித்த ஆத்துமாவை ஆத்துமா நேசித்தது. அவள் தனது சுவாசப் பையை அதற்கு உணவாகப் பரிமாறினாள். மூச்சு விடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், கடைசியில் மூச்சை விட்டு விட்டாள்.
என்னதான் உயிர் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தாலும் , ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுகிறது.
அப்படித்தான் அவள் போய் விட்டாள்.
-கவிக்கோ அப்துல் ரகுமான் விகடனில்

22 October 2010

வாழும் அனுபவம் - 5




                    மழை ஓய்ந்த பின்னிரவில்
                    அலை ஓய்ந்த மனதோடு
                    இதமான குளிர் அறையில்
                    மிதமான உண்டி முடித்து
                    உடலுறுத்தா தலையணையில்
                    வாகாய்த் தலை சாய்த்து
                    அதிராத பாடலின்
                    சுகராகப் பின்னணியில்
                   அவிழாத புதிரவிழ்க்கும்
                    புதிதாய் ஒரு புதினத்தை
                    வாசிக்கும் அனுபவமே
                    வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 3


                  
                   அதிகாலை கண் விழிக்கும்
                   வழக்கத்திற்கு விதி விலக்காய்
                  'ஞாயிறு' வந்து எனை எழுப்பும்
                   ஞாயிற்றுக் கிழமை விடியல்தனில்
                   சாம்பல் நிற கனவு பிரித்து
                   சோம்பல் முறிக்க சோம்பலுற்று 
                   நட்போடு மனைவி தரும்
                   'பெட் காபி' தனை சுவைத்து
                   சூடான செய்தி தரும்
                   செய்தித்தாள் தனைப் பிரித்து
                   வாசிக்கும் தருணமே
                   வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 4



                  விடுமுறைத் தினத்தின்
                  பிற்பகல் ஓய்வுக்குப் பின்
                  உடல் சூடு தணிய
                  சிறியதொரு குளியலிட்டு
                  தளர்வான ஆடையணிந்து
                  சலனமில்லா மனதுடன்
                 முதிர்வான கோவில் சென்று
                  அதிர்வான இடம் அமர்ந்து
                  தன்னைத் தான் மறந்து
                  தன்னுள் தான் கரைந்து
                  தியானிக்கும் கணமே
                 வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 2




                       மழை பெய்யும் மாலை
                       மனைவி மக்கள் உடன் சூழ
                      என் வீட்டு முற்றத்தின்
                      முன் பக்கம் அமர்ந்து
                      அழைப்புகள் தவிர்க்க
                      அலை பேசி அணைத்து
                      சிறு கோப்பைத் தேநீருடன்
                      ஒருவரை ஒருவர் பருகி
                      வருங்கால நினைப்பின்றி
                      குறுங்கதைகள் பல பேசி
                      மகிழும் அனுபவமே
                      வாழும் அனுபவமாம் !

வாழும் அனுபவம் - 1


            அதிகாலைப் பனி விலக்கி
            ஆதவன் உதிக்கும் முன்,
            ஆழ்நிலைத் துயில் விலக்கி
            ஆனந்தக் குளியல் நடத்தி
            உடன் குளிர்ந்த உடம்புடன்
            கனம் குறைந்த மனதுடன்
            இஷ்ட தெய்வம் தொழுது
            நெற்றியிலிட்ட நீறுடன்
            ஸ்கந்த குரு கவசம்
            சன்னமாய்க் காதில் ஒலிக்கக்
            கேட்கும் அனுபவமே
            வாழும் அனுபவமாம்!

20 August 2010

திருஷ்டி

குளிப்பாட்டி அலங்கரித்த
அழகுக்குப் பயந்து
கன்னத்தில் வைத்தாகிவிட்டது
கருஞ்சாந்துப் போட்டு.

அள்ளியெடுத்துக் கொஞ்சும்
அண்டை வீட்டாருக்காக
அடுப்பில் போட்டாகிவிட்டது
படிகாரமும் உப்பும்
மிளகும் தடவி.

அறியாமல் பட்ட
கண்களுக்குமாய்
தெரு வாசலில் கொளுத்தியாகிவிட்டது
தலையைச் சுற்றிய கற்பூரம்.

எல்லாம் செய்தது முடித்த பின்னும்
யோசித்து மாய்கிறாள் தாய்...
குழந்தையின் மீது விழுந்த
தன திருஷ்டிக்கு
என்ன பரிகாரம் செய்வதென்று?

-ஆனந்த விகடன்

மனம் மலரட்டும்-1

'காயமே' இது பொய்யடா !
உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுக்குத்தான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும். ஹிப்னாடிசம் மாதிரியானது இது. நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களை யாரும் ஹிப்னாடைஸ் செய்ய முடியும்.இங்கு உலகம் என்பதில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அடங்குவார்கள் ஏன், கடவுளும் கூட இந்தப் பட்டியலில் அடக்கம்தான்! வேதாந்தம் ஒரு படி மேலே போய் , ' யாராலும் உங்களைக் காயப்படுத்த முடியாது' என்று சொல்கிறது. ஆத்மாவாகிய 'நான்' யாரையும் காயப்படுத்துவதில்லை; தானும் காயப்படுவதில்லை என்பது அதன் சாரம்.
கடவுள் நமக்கு ஞாபக சக்தியைக் கொடுத்திருப்பது சுய மதிப்பீடு செய்வதற்காக அல்ல.வாழ்க்கையில் தேவையானவற்றை மறக்காமல் இருப்பதற்காகவே! அதாவது , அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் மறந்து விடாமல் அடையாளம் காண்பதற்காக!
நினைவுகள் நீங்கள் அல்ல. வாழ்க்கையில் சில எண்ணங்களைப் பதிவு செய்து கொள்கிறீர்கள். இவற்றில் சில ரம்மியமாக இருக்கின்றன.வேறு சில நெருடலாக அமைகின்றன.மனம் பக்குவப்பட்டிருந்தால் , வாழ்க்கையில் எல்லாம் ரம்யமாக இருக்காது என்கிற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பக்குவப்பட்டவர்கள் இந்த இருவகையான அனுபவங்களையும் சம நிலையில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த வித குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுவதுமில்லை, மற்றவர் தன்னைக் காயப்படுத்த எந்தச் சூழ்நிலையிலும் அவர் அனுமதிப்பதில்லை. காரணம், ' தன்னிடம் அடுத்தவர்கள் இப்படித்தான் பழக வேண்டும் ' என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே காயப்படுகிறார்கள்.
உங்கள் மீது அடுத்தவர் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? உங்களுக்கு ஏன் அவர் தொந்தரவு கொடுக்க வேண்டும்? உங்களைக் கண்டு ஏன் அவர் மிரள வேண்டும்? உங்களைப் பார்த்து ஏன் அவர் பொறாமைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்த உடனேயே அடுத்தவர் மீது உங்களுக்கு அனுதாபம் ஏற்படத் துவங்கும். அவருடைய இயல்புகளை எளிதில் புரிந்து கொண்டுவிடுவீர்கள். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதயும் கற்றுக் கொண்டு விடுவீர்கள். சில சமயம் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டி வரும்.சில சமயம் அவர்களுடன் ஏதாவது பேச வேண்டி வரும்.சில நேரத்தில் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டி வரும். நீங்கள் காயப்படாத வரையில் உங்கள் விருப்பப்படி எதையும் செய்யலாம்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி

24 July 2010

bala - we love you


சமீபத்தில் யுவகிருஷ்ணா தனது வலைப்பூவில் எழுத்தாளர் பாலகுமாரனைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். மிக அருமையான பதிவு.(http://www.luckylookonline.com/2010/07/blog-post_15.html).அதைப் படித்த வாசகர்கள் பலருக்கும் பாலகுமாரனின் முந்தைய புதினங்களை மீள் வாசிப்பு செய்யும் எண்ணம் வந்திருக்கும். எனக்கும் வந்தது.

எடுத்துப் படிக்கலாம் என எழுந்த போது , பாலகுமாரன் நாவல்கள் உட்பட அனைத்துப் புத்தகங்களையும் மூட்டை கட்டி பரணில் வைத்துள்ளது நினைவிற்கு வந்தது. காரணம் , சமீப காலமாக அதிகரித்து வரும் சந்தோஷின் அட்டகாசம். பயலுக்கு கோபம் வந்தாலும் , சந்தோஷம் வந்தாலும், அவனுடைய துரித இலக்கு என்னுடைய புத்தக வரிசையாகத்தானிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துத் திசைக்கொன்றாக வீசுவதில் சூரன். சிதறிக் கிடக்கும் புத்தகங்களை நாங்கள் அடுக்கி வைத்த சிறிது நேரத்திலேயே ,அவற்றைக் கலைத்து, கீழே பரப்புவதில் அவனுக்கு அலாதி இன்பம். முன் பின் அட்டையின்றி களையிழந்து காணப்படும் என் புத்தகங்கள் அனைத்தும் அவன் அராஜகத்துக்கு சாட்சி. எனவே,ஒரு நாளின் சில பல மணித்துளிகளை விழுங்கும் இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க , வேறு வழியேயின்றி புத்தகங்களை பரண்வாசிகளாக்கி விட்டோம்.

தேடிப் படிக்க ஆயாசமாக இருந்தாலும், படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை உந்த , புத்தகங்களைத் தேடத் துவங்கிய போது யுவகிருஷ்ணா சொன்னது நினைவுக்கு வந்தது..."22 ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் முந்தைய பாராவில் சொல்லியிருக்கும் உணர்வை கொடுக்கிறானே? ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே? பாலகுமாரா நீ தெய்வம்!"

கல்லூரி இறுதியாண்டின் போது எனக்கு பாலகுமாரனின் எழுத்துக்கள் அறிமுகமாயின.அட, பரவாயில்லையே...இந்த ஆளும் நம்மைப் போலவே சிந்திக்கிறாரே என்ற வியப்பு தான் மேற்கொண்டு அவரைப் படிக்கத் தூண்டிற்று. இது சற்று சுய பெருமிதம் போல் தோன்றினாலும் , இன்று அவரின் தீவிர வாசகர்களாக இருப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் பொருந்தும். அதன் பின்னான தொடர் வாசிப்புகளில் , அவர் எழுத்தின் வீச்சு என்னை அசர வைத்தது.வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்து , பின் தெளிவெதென்பது இயலாது. தன்னுடைய அனுபவத்தின் சாரத்தையும் , கற்றுக் கொண்ட பாடத்தையும் பிறர் பயன் பெறும் வகையில் எடுத்துரைப்பதென்பது சிலருக்கு மட்டுமே கை வரும்.சில கதைக் களங்களைத் தேர்வு செய்து ,தனது வாழ்வானுபவத்தின் அடிப்படையில் விளைந்த சிந்தனைகளை , கதை மாந்தர்கள் வாயிலாக , மிக நேர்த்தியான சொல்லாடலின் மூலம் பல்லாயிரம் வாசகர்களுக்கு புதினங்களாக வழங்கியவர் பாலகுமாரன்.சமகால சமூகத் தளத்திலிருந்து மட்டுமல்லாது ,புராணங்களிலிருந்தும் களங்களைத் தேர்வு செய்து, அதில் தொய்வெழாத வண்ணம் சம்பவங்களைக் கோர்த்து,வாசிப்பவனின் மன ஆழத்தை ஊடுருவும் வகையில் கதைகளை நெய்தவர். கதை நடக்கும் சூழலுக்குள் நம்மை இழுக்க , அந்த சூழல் சார்ந்த தகவல்களை அதன் உண்மைத் தன்மை மாறாமல் தரும் நோக்கில் அவரின் மெனக்கெடல்கள் அபாரம்.

கிட்டத்தட்ட அவரது அனைத்து நாவல்களும் என்னிடம் இருக்கின்றன. பலவற்றில் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.வாசிக்கும் போது அவை தருகிற மன நிலையை எழுத்தில் விவரிக்க இயலாது.சிலருக்கு வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் அடைமொழிகள் அவர்களுக்கு சற்றும் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும். ஆனால் சித்தர்கள் செய்யும் வசியம் போல் , வாசகனை வசியப்படுத்தும் எழுத்துக்களைப் படைக்கும் இவருக்கு 'எழுத்துச் சித்தர்' என்ற பட்டம் மிகப் பொருத்தமே.

ஆனால் சமீப காலமாக அவரது படைப்புகளை உளமாற நேசிக்க முடியவில்லை என்பது வாசகர்களின் கருத்து.அதற்குக் காரணம் அவருள் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக மலர்ச்சி என்றே நினைக்கிறேன். எழுத்தாளனது மிகப் பெரிய பலம் கதை சொல்லும் தந்திரத்தில் தான் உள்ளது.எதற்குப் பின் எதைச் சொல்ல வேண்டும், எந்த இடத்தில் எந்த வார்த்தை வர வேண்டும் போன்ற நகாசு வேலைகளே வாசகர்களின் மனம் கவர்ந்த படைப்பு உருவாகக் காரணமாகும். பாலகுமாரனது ஆகச் சிறந்த படைப்புகள் எல்லாம் அவர் அந்த தந்திரத்தை மிக நேர்மையான முறையில் கையாண்ட போது உருவானவை.காலப்போக்கில் அவருள் ஏற்பட்ட ஆன்மீக மலர்ச்சி அந்தத் தந்திரம் ஏதுமின்றி உள்ளது உள்ளபடியே அவரை எழுதச் செய்கிறது.இதை அவரது தீவிர வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.மாலன் ஒரு முறை சொன்னது போல் , ஒரு தலைமுறையே பாலகுமாரனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது.நான் சொல்ல விழைவதும் இதைத் தான்...பாலகுமாரனின் இந்தத் தலைமுறை வாசகர்கள் அவரது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அதுவே நாம் செய்யும் பிரதி பலனாக இருக்க முடியும்.

அன்று பரணில் தேடிப் பிடித்து நான் வாசித்த புத்தகம் , 'என் கண்மணித்தாமரை'. ஆகா....அற்புதம்...அற்புதம்!வாசிப்பு கொடுத்த உற்சாகத்தில் பரணில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து மீண்டும் புத்தக அடுக்கில் வைத்து விட்டேன்.

ஏதேனும் நாவலை ஆழ்ந்து படித்தால் அதன் கதை மாந்தர்கள் அன்றைய கனவில் வருவது வழக்கம். ஆனால் அன்று அபிராமி பட்டருக்குப் பதிலாக என் கனவில் வந்தது சந்தோஷ். இன்னும் பேச்சு வராத பிள்ளை கனவில் என்னிடம் பொரிந்து தள்ளினான்.
" நான் எவ்வளவு கஷ்டப்பட்டு book shelf ஐ காலி பண்ணி சுத்தமா வைக்கிறேன்....நீங்க மறுபடி மறுபடி அதைக் குப்பையா ஆக்குறீங்க....ஏம்ப்பா....?"