24 April 2012

தந்தை மகற்காற்றும்.....

நீண்ட நாட்களுக்குப்  பின் , குடும்பத்துடன் வெளியூர் பயணம் . தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர் ஒருவரின்  திருமண விழாவிற்கு அழைப்பு வர, நான் பிள்ளைகளிடம்  கேட்டேன்,
 " டேய் புவன்... கடல் பார்த்திருக்கியா...?".
 " நேரில பார்த்ததே இல்லப்பா...படத்துல தான் பார்த்திருக்கேன்."
" ஏய் சந்து...நீ கடல்  பார்த்திருக்கியா...?"
" அப்படின்னா...?!"

மேற்கண்ட உரையாடலின் முடிவில் உருவானது எங்களின்  திருச்செந்தூர் பயணத்திட்டம். ஞாயிறன்று காலை 4.30 மணி ரயில்  பிடித்து மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்று விழாவைச் சிறப்பித்து விட்டு ,  அங்கிருந்து பேருந்து மூலம் செந்தூர் சென்று கடலில் குளித்துக் களித்துப் பின் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பிடிப்பதாகத் திட்டம்.  பேசிய கையோடு இணையம் மூலம் முன்பதிவும் செய்து விட , 'அப்பாவா இப்படி' என பிள்ளைகளும் , 'இவரா இப்படி' என என் மனைவியும்  ஒரு சேர ஆச்சர்யமும் , குதூகலமும்  அடைந்தார்கள். 'சேட்டை செய்யும் குழந்தைகளை வெளியூர் பயணங்களில் சமாளிப்பது எப்படி' என்று ஒரு புத்தகமும் நான் படித்திராததால் , பொதுவாக குடும்பப் பிரயாணங்களைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். தற்போது பிள்ளைகள் சிறிது பெரியவர்களாகி விட்டார்கள் என்று நம்பிக்கையில் இந்த பயண ஏற்பாடு. 

சனிக்கிழமை இரவிலிருந்தே பயணம் தொடர்பான சந்தேகங்களை (வழக்கம் போல்)  கேள்விக் கணைகளாகத் தொடுக்க ஆரம்பித்த புவனை சமாளித்து சற்றே கண்ணயர்ந்தால் ,  வைத்த அலாரம் அடிப்பதற்கு முன்பாக 3 மணிக்கே எழுப்பி விட்டனர் மின்வாரியத்தினர். அனைவரையும் எழுப்பி அரக்கப் பரக்க  கிளம்பி  அடித்துப் பிடித்து  ரயில் நிலையம் அடைந்தாலும் ஆற அமரத்  தான் வண்டியேறினோம். (வண்டி தாமதம்!). அதுவரை ஆடிக் கொண்டிருந்தவர்கள் , வண்டி நகரத் தொடங்கியதும் இருக்கையில் சரியத் தொடங்கினர். நான் சன்னலை ஒட்டிய பக்கவாட்டு படுக்கையில் படுத்தேன். சிறிதே பரவியிருந்த ஒளியும், சில்லென்ற அதிகாலைக் காற்றும் , சீரான வேகத்தில் செல்லும் வண்டியின் அசைவும், என் மீது கிடந்த பிள்ளையின்  அணைவும் ...சுகம்.. சுகம்.. பரம சுகம் 
சரியாக எட்டு மணிக்கு மண்டபத்தை அடைந்து , சுற்றத்துடன்  அளவளாவி , விழாவின் முக்கிய நிகழ்வான காலை உணவு ருசித்தலைக் கடமையுடன் முடித்து ,  ஒரு மணி நேரம் பயணப்பட்டு 11 மணிக்கு திருச்செந்தூர் சென்றிறங்கிய  எங்களுக்கு அங்கிருந்த அபரிமிதமான மக்கள் கூட்டம்  அதிர்ச்சியளித்தது. முடியுடனும், இல்லாமலும் ஆயிரக்கணக்கான தலைகள். முடிக் காணிக்கை அனுமதிச் சீட்டு வாங்க வரிசை, முடி எடுக்க வரிசை, நாழிக் கிணற்றில் குளிக்க வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வரிசை, மதிய உணவு சாப்பிட கடைகளிலும் வரிசை என பொழுது முழுவதும் வரிசையிலேயே கழிந்தது. ஒரே ஒரு ஆறுதல், கடலில் குளிக்க மட்டும் வரிசையில்லை. கடலைப் பார்த்து வியந்த பிள்ளைகள் ஒரு அலை தாக்கியதும் கதறிப் பின்வாங்கி விட்டனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் வர மறுத்து ,கரையில் என் மனைவியிடம் தஞ்சமடைந்தனர். நான் அரை மனதுடனும் சிறிது பதற்றத்துடனும் கடலில் விழுந்து எழுந்தேன்.

வரிசைகளில் நிற்கும் போது புவனேஷின் கேள்விகளும், சந்தோஷின் அலையல்களும் எங்கள் உயிரில் பாதியை உருவின. அவ்வப்போது  சந்தோஷ் எங்கள் கண்ணை மறைத்து  மறைந்து விட,  அவன் அணிந்திருந்த மஞ்சள் சட்டையை வைத்து அவனை மீட்டெடுத்தோம். ஒவ்வோர் கடையைத் தாண்டும் போதும் பொருட்கள் கேட்டு சந்தோஷ் செய்த அட்டகாசமும், முடி எடுக்கும் போது அவன் செய்த ரகளைகளும்  தனிப் பதிவிற்கானது.  சுட்டெரித்த  சூரியனும், சுறுசுறுப்பான பிள்ளைகளும் எங்களைக் களைப்புறச் செய்தனர். ஒரு வழியாக, சற்று தொலைவிலிருந்து (?) சுவாமி தரிசனம் செய்து , அரைகுறையாக சாப்பாடு முடித்து , icecream கடையில் ஆசுவாசப்பட்டு நிமிர்ந்த போதுதான் உறைத்தது. ம்ணி மூன்று. சுட்டெரிக்கும் வெயிலில் , ஆளுக்கொரு பிள்ளையாக இழுத்துக் கொண்டு , கிளம்பத் தயாராயிருந்த ஒரு  தனியார் பேருந்திலேறி அமர்ந்தோம்.  இன்னும் ஒன்றரை மணிக்குள் ரயிலைப்  பிடிக்க வேண்டிய பதற்றத்தில் நாங்கள் இருக்க, காலியாயிருந்த வாசற்படியும் நிரம்புவதற்குக் காத்திருந்தனர் நடத்துனரும் ஓட்டுனரும். ஒரு வழியாகக் கிளம்பிய பேருந்து, சிற்றுந்தாக மாறி நூறடிக்கு ஒரு தடவை நின்று சென்றது. ஒரு வேளை தாமதமாகி விட்டால்...... மதுரை வரையிலுமான பேருந்துப் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போதே  தலை சுற்றியது.

முருகன் கிருபையால், சரியான நேரத்துக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்து, ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். அந்த ஆட்டோ ஓட்டுனர் எப்போதும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பார் போலும். எங்கள் நிலையை அறிந்தவுடன் அடுத்த ஐந்தே நிமிடங்களில் ரயில் நிலையத்தில் எங்களைக் கிடத்தினார்.அந்த ரணகளத்திலும் சந்தோஷ் அவருக்கு ' 'டாடா' காண்பித்து விடை கொடுத்தான்.எங்கள் வருகைக்காகக் காத்திருந்தாற் போல் , நாங்கள் ஏறியவுடன் ரயில் புறப்பட்டது. ம்துரை வந்து சேர்ந்தவுடன் நேராக உணவகத்துக்கு அழைத்துச் செல்ல, களைத்துப் போயிருந்த  எங்கள் மூவருக்கும் சேர்த்து சந்தோஷ் தனியாளாய்  வெளுத்துக் கட்டினான்

சாப்பாடு முடித்து வீடு வந்து படுக்கையில் மனதில் சில கேள்விகள்....
இல்லற வாழ்வில் துணையை அனுபவிப்பது சுகமெனில், இணைப்பாய் வரும் பொறுப்புகள் அனைத்தும் சுமையா? பிள்ளைகள் பெறுவது சுகமெனில்,  தொல்லைகள் பொறுப்பது சுமையா?பிணைக்கப்படுதல் சுகம் எனில், பிணக்குகள் வருவது சுமையா? சம்சாரியாவது சுகமெனில், சமரசமாதல் சுமையா?  'சம்சார சாகரம்' என்று சும்மாவா சொன்னார்கள்  எனப் பலவாறு யோசித்துக் கொண்டே  உறங்கிப் போனேன். 
மறுநாள் காலையில்  பிள்ளைகள் இருவரும்   பயணத்தைப் பற்றிப் படுக்கையிலிருந்தவாறே சிலாகித்துக் கொண்டிருந்தனர். முன் தினம்  எனக்கு சலிப்பூட்டிய  தருணங்கள் அனைத்திலும் அவர்கள் சிலிர்ப்படைந்திருந்தது அவர்கள் பேச்சில் தெரிந்தது. பயணத்தின் களைப்பு தாண்டிய பூரிப்பு அவர்கள் உடல் மொழியில் வெளிப்பட்டது. நான் விழித்து விட்டதைப் பார்த்ததும் இருவரும் உருண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டனர்.

"அப்பா...மறுபடியும் இதே மாதிரி இன்னொரு கடல் பார்க்கப் போலாமா...?"
"சரிடா  செல்லம்...அடுத்த வாரம் கண்டிப்பா போலாம்.."
சொல்லிக் கொண்டே  சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து  எழுகையில், விவரிக்க இயலாத சுகம் ஒன்று என் உடல் முழுதும் பரவியது. அது, முன் தினம் அதிகாலை ரயிலில் அனுபவித்ததை விட அற்புதமானதாக இருந்தது.

17 April 2012

காயகல்பம்


1.உங்களுக்கு நீண்ட நாள் நோய் நொடியில்லாமல் வாழ ஆசையிருக்கிறதா?
2.தற்போது பீடித்திருக்கும் நோயிலிருந்து முற்றிலும் விடுதலையாக விருப்பமிருக்கிறதா?
3.உங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்க விழைவிருக்கிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு 'இல்லை' என்பது உங்கள் பதிலாக இருப்பின், அவ்வாறு ஆசையிருக்கிற உங்களின் நண்பர்களுக்கு , கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஒலிக் கோர்வை இணைப்பை தயவு செய்து அனுப்பி வையுங்கள்.
'ஆம்' என்பது உங்கள் பதிலெனில் , நீங்களும் அந்த ஒலிக் கோர்வைக்கு அதன் வரிசைக் கிரமத்தில் சற்று காது கொடுங்கள்.

http://www.box.com/s/a4ce322fd493058e1cca


பழத்தை உரித்துக் கையில் கொடுத்தாயிற்று; தின்று செரிக்க வேண்டியது உங்கள் பாடு.

13 April 2012

இணையமும் , காதலும்



ஆனந்த விகடனில் இந்த வாரம் வெளியாகியுள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேட்டியிலிருந்து.....
e-mail, facebook, twitter என இன்றைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டதா?
இணையத்தின் வழியாக திறந்து விடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனித குல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொரு போதும் இருந்ததில்லை.தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக் கொண்டு , அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம்.இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில் நுட்பம் மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும், கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே,நான் இதை எதிர்மறையாகப் பார்க்க வில்லை.யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்து விட்டுள்ளது. இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த cyber space மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள் தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்.
காதல் இப்போதும் புனிதமானதுதானா?
காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும் போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் கூடக் கலப்படம் வந்து விட்ட உலகில் , காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்? ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால் , காதல் புனிதமானதாக இருப்பது இல்லை.

31 March 2012

கனவு நிஜம்

என்னால் 'இல்லை' யென்று
மறுக்கப்பட்ட ஓர் உணர்வு
என்னுள் தான் உள்ளதென
தன்னிருப்பை உணர்த்தியது
நேற்று முன் தினம் என் கனவில்.

'இல்லை'யென்று அதுவரை
மறுதலித்த நினைவு மனம்
ஒருக்கால் இருக்குமோ வென
ஓர்மைப்படத்  துவங்கிற்று.

முந்தைய கனவின் நகலாய்
நேற்றைய கனவும் அமைந்திட
ஓர்மைப்பட்ட நினைவு மனம்
உறுதிப்பட்டது இப்போது.

நேற்றைய கனவே
முந்தைய கனவும்.
நேற்றைய மனமல்ல
இன்றைய மனம்.
எனில்,
கனவு நிஜம்.
நினைவு கனவு.

25 March 2012

ராஜாவின் ராஜபாட்டை


அவதாரம் படத்தின் 'தென்றல் வந்து தீண்டும்போது ' பாடல் பிறந்த கதையை
'தோனி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர்

விவரித்தார். அவர் உரையில் இருந்து...
1994ல் நான் இசைஞானியிடம் சென்று, ‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’ என்றேன்.
‘எதுக்குய்யா.. ? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?
‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’
‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’
‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!
‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’
“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”
“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார்.
நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”
“என்ன அதுக்குள்ளேயா?”
‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”
“சரி” என்றவர் படம் பார்த்தார்.
அந்தப் படம் ‘அவதாரம்’ . படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ என்று பயந்துகொண்டே சென்றேன்.

அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.
‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’
‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’
‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’
‘சார்..! அதில்ல சார்..!’
‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’
‘சார்… வந்து... அமெரிக்காவில்’
‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.
வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது.
”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்?
பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
'சார்.. ..'
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘அப்டியா சார்?’
‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..
‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’
‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’
’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’
என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!
அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…
' சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’
எங்கும் அமைதி…!
1…..! 1..2..3..4..
‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.
'....... ...... ....'
'....... ...... ....'
I cried..... நான் அழுதேன்.
பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு, ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

02 March 2012

கடவுளின் வேண்டுதல்

நான் எப்பவும் குழந்தையாவே இருக்கணும் , மாதாவே....!

15 February 2012

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். புறம் ஏற்படுத்தும் தாக்கங்களும் , அகம் உணரும் உணர்வுகளும் அனாயாசமான வார்த்தைகளில் வந்து விழுகின்றன கல்யாண்ஜி அவர்களுக்கு. மிக எளிமையான ஒப்பீடுகளின் வாயிலாக வாழ்க்கையின் பின்னே மறைந்து கிடக்கும் பேருண்மைகளை வெளிக்கொணர்வது அவருக்கு எளிதாகக் கைகூடுகிறது. மனம் சஞ்சரிக்க விரும்பும் உலகத்திற்கும் , நாம் தினம் எதிர்கொள்ள நேரிடும் எதார்த்த வாழ்வின் சிக்கல்களுக்கும் இடைப்பட்ட தொலைவை இவரது கவிதைகள் பிரயத்தனம் ஏதுமின்றிக் கடக்கின்றன.



நூலிலிருந்து ...
********************************************************
தலைப் பிரட்டைகள்
நீயும் பிஸ்கட் தின்னென்று
பேபி சொல்லும்
ஆயாவோ
மீதித் துட்டைச் சரி பார்த்து
வாங்க நிற்பாள்.
பேக்கரியின் அடியில் பழம்பேப்பர்க்
கிழிசலோடு விளையாடி
பூனைக்குட்டி தரையெலாம்
புரண்டு கொஞ்சும்
எலி வேட்டை
இன்னும் தெரியாது
என்பதனால்.
******************************************
சூரியனை -
ஆற்றங்கரை மணலை -
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை -
பட்டாம் பூச்சியைத்
தொலைத்து விட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை .
*********************************************
நறுக்கென்று
ஒரு சிறு கவிதை
எழுத முயல்கிறேன்.
கொப்பரைத் தண்ணீரைக்
கவிழ்ப்பதை விட
எப்போதும் சிரமமாகத்தான்
இருக்கிறது
பேனாவுக்கு மை அடைப்பது.
********************************************
சிறுவனாகப்
பென்சில் சீவும் போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்து விட்டது வயதுடன் .
எஞ்சியது என்ன ?
காயம் படாத கைவிரல்.
நிஜம் கசியாத கவிதை.
***************************************

14 February 2012

காதல் எனப்படுவது ...

பால்யம் :
இதுதானெனத் தெரியாது
அதுவாவெனப் புரியாது
எதுவாயிருப்பினும் மனதுக்கு
ஏதுவாயிருக்கும் அதுதானது !

பதின்மம் :
இதுவானதாகவும் தெரியும்
அதுவானதாகவும் தெரியும்
எதுதானதுவெனப் பருவம்
அறியாது அதுதானது !

மத்திமம் :
இதுதானெனத் தெளியும்
அதுதானெனவும் புரியும்
எதுதானதுவெனத் தேடும்
தேடிக் காணும் அதுதானது !

அந்திமம் :
இதுவுமல்ல அதுவுமல்ல
எதுவுமல்ல அதுவென
உயிர் அடையும் உணர்வு
உண்மையில் அதுதானது !

25 January 2012

ஏன்..எதற்கு..எப்படி 3

# மறுவீட்டு மருமகளாம் தனது மகள்
மகளாகப் பாவிக்கப் படவேண்டும் எனும் தாய்
தன் வீட்டு மருமகளாய் வந்தவளை
தன் மகளாய்ப் பாவிக்க மறுப்பது ஏன் ?

# விரும்புவது கிட்டும் வரை
போராடும் நமது மனம்
விரும்பியது கிட்டிய பின்
விரும்பக் கூட மறுப்பது ஏன் ?

23 January 2012

பெற்றதால் பிறந்தோம்

பெற்றதால் பிறந்தோம்.

இட்டதால் வளர்ந்தோம்.

பால்யத்தில் மகிழ்ந்தோம்.

பருவத்தில் பிறழ்ந்தோம்.

காதலில் தொலைந்தோம்.

கலவியில் தேடினோம்.

பிள்ளைகள் பெற்றோம்.

பெற்றதால் பிறந்தோம்.

15 January 2012

தவளையின் பிரார்த்தனை

தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தோணி டி மெல்லோ எழுதிய 'தவளையின் பிரார்த்தனை' - பாகம் இரண்டு.


கல்வி, உறவு முறைகள், பணி புரிதல், மனித இயல்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் வாழ்வியல் தத்துவங்களையும் , அவற்றை விளக்கும் வகையில் ஜென் மற்றும் சூபி கதைகளை ஒத்த தகவமைப்புடன் சிறு சிறு கதைகளையும் உள்ளடக்கிய புத்தகம். இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தாலும் , தற்போதைய மீள் வாசிப்பில் புதுப் புது அனுபவங்களைத் தருகின்றது. ஞானம் என்பது ஒரு சுகானுபவத்தின் படிமங்களில் கைகூடுகிற விஷயமெனில், நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஏதேனும் ஒரு கணத்தில் உங்களுக்குள் அது நிகழக்கூடும்.

நூலிலிருந்து........

கல்வி என்னும் தலைப்பின் கீழ் ....

உலகத்திலேயே மிகவும் அழகான தீவுகளில் ஒன்று எனக் கருதப்பட்ட தீவில் , ஒரு வயதான மனிதர் தமது பெரும்பான்மையான நாட்களைக் கழித்து விட்டிருந்தார். தமது ஓய்வுக் காலத்தைக் கழிக்க , ஒரு பெரிய நகரத்திற்கு வந்து வசிக்கலானார். அப்போது ஒருவர் வந்து சொன்னார் ," உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தீவில் பல வருடங்கள் வசித்தது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்".

அதைப் பற்றிச் சிறிது யோசித்த அந்த வயதானவர் சொன்னார் , " அப்படியா ! அந்தத் தீவு அவ்வளவு பிரசித்தியானது என்பதை முன்னமே அறிந்திருந்தால் நான் சற்றுக் கவனித்துப் பார்த்திருந்திருப்பேனே ! "

எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அவர்களைக் குருடர்களாக ஆக்குகிற பள்ளிகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் மட்டுமே இருக்கிறது .

*********************************************************************************

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒருவர் தனது நாய்க்கு தினமும் 'காட்லிவர்' எண்ணெய் கொடுத்து வந்தார். திமிறும் அதன் கால்களையும் , தலையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து புகட்டி விடுவார்.அவ்வாறு கொடுக்கும் போது, ஒரு நாள் எண்ணெய் கீழே கொட்டிவிட, அவர் கையிலிருந்து விடுபட்ட நாய் தானாகவே சென்று மிக நிதானமாக அதை நக்கி ருசிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் புரிந்தது , அத்தனை நாள் எண்ணெய் பிடிக்காமல் நாய் திமிற வில்லை, புகட்டப்படும் முறை ஒவ்வாமல் திமிறியுள்ளது.

பிள்ளைகள் கல்வியை வெறுப்பதில்லை.கற்பிக்கப்படும் முறையை வெறுக்கிறார்கள்.*********************************************************************************

ஆன்மீகம் என்னும் தலைப்பில் ....
அரண்மனைக்குள் நுழைந்த ஒரு ஞானியிடம் அரசர் கேட்டார்.

"உங்களுக்கு என்ன வேண்டும் ?"

" இந்தச் சத்திரத்தில் உறங்க ஒரு இடம்."

"இது சத்திரம் இல்லை; என் அரண்மனை."

"இந்த இடம் தங்களுக்கு முன்பாக யாரிடம் இருந்ததென்று தெரியுமா?"

" இறந்து போன என் தந்தையிடம் இருந்தது."

"அதற்கு முன்பாக யாரிடம் இருந்தது?"

"எனது தாத்தாவிற்கு சொந்தமாக இருந்தது. அவரும் இறந்து விட்டார்."

" மக்கள் சிறிது காலமே தங்கிச் செல்லும் இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறென்ன?"

எல்லோரும் வெளியே செல்லவே ,காத்திருக்கும் அறையில் தங்கியிருக்கிறார்கள்.

*********************************************************************************

கடிகார வல்லுநர் ஒருவர் கடிகாரம் ஒன்றில் பெண்டுலத்தைப் பொருத்தும் போது , அந்தப் பெண்டுலம் அவரிடம் சொன்னது.

"தயவு செய்து என்னை இதில் மாட்டாதீர்கள். ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் வீதம், ஒரு மணியின் அறுபது நிமிடங்களுக்கும் , ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாட்களும் நான் அசைய வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான அசைவுகள். என்னால் அதை ஒரு போதும் செய்ய முடியாது."

அதற்கு அவர் பதிலளித்தார் .

" எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஒரு தடவையில் ஒரு முறை அசை; உனது வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் முழுவதும் ஒவ்விரு அசைவையும் நீ ரசித்து மகிழ்வாய்."

இந்த வினாடியில் வாழுங்கள் .
********************************************************************************