26 July 2012

ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகிய நாம்....


குறைந்த பட்சம் ஒரு வேளை உணவைத் தவிர்த்து, பசித்த வயிற்றுடன் இந்தப் படத்தைப் பாருங்கள்...பசி வயிற்றைப் பிசைவது போல், இந்தக் கதறல் உங்கள் இதயத்தைப் பிசையும்! 
மற்ற உணர்வுகள் அனைத்தும் நம் அகங்காரத்தை நிரப்பும் பொருட்டான வெளிப்பூச்சுகள் எனவும், பசியும், வலியும் மட்டுமே உக்கிரமான , உண்மையான உணர்வுகள் என்ற பேருண்மையும் புரியும். 

22 July 2012

ஆடும் வரை...


வேஷங்கள் எத்தனை இடினும்
அலுக்காத ஆட்டமிது.
துவேஷங்கள் எத்தனை படினும்
துவளாத ஆட்டமிது.

ரோகங்கள் எத்தனை வரினும்
ருசி குறையா ஆட்டமிது.
துரோகங்கள் எத்தனை சுடினும்
சுருதி குறையா ஆட்டமிது.

மோகங்கள் எத்தனை தீரினும்
துடிப்படங்கா ஆட்டமிது.
சோகங்கள் எத்தனை சூழினும்
சோர்வடையா ஆட்டமிது.

துன்பங்கள் எத்தனை தொடினும்
தளராத ஆட்டமிது.
இன்பங்கள் எத்தனை தரினும்
திகட்டாத ஆட்டமிது.

மனிதர்கள் சில நேரம்
விரும்பாத ஆட்டமிது.
விரும்பாது போனாலும்
விலகாத ஆட்டமிது.

வெற்றியோ தோல்வியோ
ஆடித்தான் ஆகணும்.
வெள்ளென  எந்திருச்சு
ஓடித்தான் தீரணும்!

03 June 2012

வாழ்க்கைப் பந்தயம்


ஆப்பிரிக்கக்  காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும்,  அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும், அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு.
-செல்வேந்திரன் (http://selventhiran.com)

28 May 2012

தீராக் கேள்வி- தெளிவான பதில் 4

1)நல்லவர்கள் யார் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அதெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. இதுதான் இந்த வாழ்க்கையின் சுவாரஸ்யம். அதுதான் இந்த வாழ்க்கையை வேகமாக்குகின்ற விஷயம். மரணம் எப்படி தெரிந்து கொள்ள முடியாத விஷயமோ,அதே போல் தான் யார் நல்லவர், எது வரையில் நல்லவர் என்பதும் தெரிந்து கொள்ள முடியாத ரகசிய விஷயம். நானும் நல்லவனாக இருப்பதற்கே முயற்சி செய்து வருகிறேன். இன்னொருவர் முதுகில் குத்தாமல், இன்னொருவரைப் பற்றி இழிவாகப் பேசாமல், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கர்வப்படாமல் , இனிமையாக இருக்கக் கடுமையாக முயற்சிக்கிறேன். இது எளிதான் விஷயம் அல்ல என்பதும் எனக்குப் புரிகிறது. எல்லாத் தெளிவுகளையும் மீறி கர்வம் வர வாய்ப்பிருக்கிறது. அந்தக் கர்வம் கெட்டதாகத்தான் வெளிப்படும். கெட்ட விஷயமாகத்தான் மற்றவரைப் பாதிக்கும்.
2)எனக்கு பொழுதே போகவில்லை. நல்ல பொழுது போக்குக்கு ஒரு விஷயம் சொல்லுங்களேன்.
வீடு சுத்தம் செய்யுங்கள். தினந்தோறும் தரை துடையுங்கள். வாரந்தோறும் அலமாரியைத் துடைத்து , ஒட்டடை அடித்து , மின்விசிறி துடைத்து , விளக்குகள் சுத்தம் செய்து பளிச்சென்று வீட்டை வைத்திருங்கள்.தொட்டியில் சிறிய செடிகள் வளருங்கள். இடமிருப்பின், ஒரு தொட்டியில் மீன்களும் வளர்க்கலாம். சிறியதாய் , தியான ஸ்லோகங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கி , ஒரு நாளைக்கு பலமுறை படியுங்கள். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்று நினைக்கிறேன். எனவே தான், பொழுது போகவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள்.
3)இத்தனை வயது வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். ஒருவன் வாழ்க்கையில் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
புலம்பக் கூடாது.  வீடு வாசல் பற்றி , மனைவி மக்கள் பற்றி ,சாப்பிடும் உணவு பற்றி,ஆரோக்கியம் பற்றி மற்றவரிடம் சொல்லி புலம்பக் கூடாது. எப்படியிருக்கிறாய் என்று கேட்டால் நலமாக இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எதோ இருக்கிறேன் என்று சொல்வதும் புலம்பல்தான். என்ன கிடைத்திருக்கிறதோ , அதை வைத்துத் திருப்தியடைய தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை ரொம்ப ருசியாக அனுபவித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.சற்று விலகல் ஏற்பட்டால் இந்தக் குறை சொல்லும் புத்தி வராது. புலம்பல் இருக்காது. அனுபவிக்க உலகில் நல்ல விஷயங்கள்   நிறைய  இருக்கின்றன. வேதனைகளையும்  கூட இறைவன் கருணை என்று புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை சந்தோஷமானதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

18 May 2012

பறவைகளின் காவலாளி


முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக்கொள்ளுமாறு
நிஷாக் குட்டியைக்
காவலுக்கு வைத்துவிட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை
விரட்டாமல்
'சீக்கிரம்...சீக்கிரம்...
அம்மா வர்றதுக்குள்ளே
தின்னுக்கோ'
எனச் சொல்லும் நிஷாக் குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமன்படுத்த
வார்த்தை எதுவும் சிக்கவில்லை எனக்கு.

-.சிவநேசன்

கதைப் பொருள்


பாலமுருகனும் கணேசனும்
பல்பொருள் அங்காடியில்
தற்செயலாய்ச் சந்தித்த போது
பரஸ்பரம் நலம் விசாரித்தனர் -
பின்பு
அலுவலகத்தில்
ஆனந்தன் அகம்பாவமாக
நடந்து கொள்வதை
அரை மணி நேரம் விவாதித்தனர்

அடுத்த நாள் அலுவலகத்தில்
கணேசனும் ஆனந்தனும்
பதிவேட்டில் கையெழுத்திடுகையில்
பார்த்துக் கொள்ள நேரிட்டது - அங்கே
பாலமுருகனின் பண்புகள்
பத்து நிமிடம் பாடுபொருளாயின

அதே நாளின் இறுதியில்
தேநீர்க் கடையில்
எதேச்சையாகச் சந்தித்த
ஆனந்தனும் பாலமுருகனும்
ஆரத் தழுவிக் கொண்டனர் - பின்னர்
கணேசனின் செயல்களைக்
கருணையின்றி விமர்சித்தனர்.

பிறிதொரு நாளில் மூவரும்
ஒன்று சேர்ந்தனர் இப்போது
அதிகமாக அலட்டிக் கொள்ளும் அம்பிகா
கதைப் பொருள் ஆனாள்.

- நா. ராஜேந்திர பிரசாத்

15 May 2012

'ணங்'


'ணங்' என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.என்னுடன் தங்கியிருந்த நண்பர் தட்டுத் தடுமாறி படுக்கைக்கு செல்வது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சத்தம் வரக் காரணமாயிருந்த குவளை  கீழே உருண்டு கொண்டிருந்தது. நண்பரின் கை தவறி விழுந்திருக்கக் கூடும்.

ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு  , உடன் பணி புரியும் நண்பர் சகிதம் நான்கு நாட்கள் வெளியூரில் தங்க நேரிட்டிருக்கிறது. நேற்றிரவு இங்கு வந்து சேர்ந்த போதே மணி பத்தைத் தொட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கதைத்து விட்டுப் படுக்கும் போது, மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. ஆழ்ந்த தூக்கம்! கீழே விழுந்த குவளை தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

அலைபேசியில் மணி பார்த்தேன்2.40 . புரண்டு படுத்தேன். சமீப காலமாக நடு இரவில் விழிப்பு ஏற்பட்டால் சாமான்யத்தில் தூக்கம் வருவதில்லை.ஏதேதோ எண்ணங்கள் சுழல அரை மணி நேரமாவது தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வது வழக்கமாகி வருகிறது. நாளைய பயிற்சி வகுப்பு எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். நினைவு இழை அறுந்து உறக்கம் தழுவத் தொடங்கும் நொடியில் , பசித்த புலியின் உறுமலாய் மிக அருகில் சத்தம் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தேன்.நண்பர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். எந்நிலையிலும் புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத வண்ணம் மனதைப் பழக்கியிருந்ததால், அவரின் குறட்டையைக் குறையாய் நினைக்காமல் உறங்க முயன்றேன். சிறிது நேரத்தில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறியது. ஒரு காதை தலையணையில் அழுத்தி , மறு காதை கையால் பொத்தியபடி படுத்தேன்.
'எந்தவொரு ஓசையுடனும் மனம் இயைந்து சென்றால் அந்த ஓசை இசையாகி விடும்' என்ற ஓஷோவின் கூற்றுப்படி மனதை குறட்டை ஒலியுடன் ஒத்திசைத்தேன். ம்ஹூம்...பலனில்லை. சிங்கத்தின் கர்ஜனை யானையின் பிளிறலாய் மாறியதும் தான் எனக்கு விபரீதம் புரிந்தது. இன்றைய தூக்கம் இவ்வளவுதான்! தூக்கம் கூட பிரச்சினையில்லை...தூக்கமின்றி யோசிப்பதால் வரும் மன அயற்சி கூட விஷயமில்லை...ஆனால் கடும் ஏற்ற இறக்கத்துடன் என்னைச் சூழ்ந்துள்ள இந்த ஒலி மாசுபாட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்தபடி சிறிது நேரம் வெளியில் சென்று உலவினேன். கண்கள் கெஞ்ச , இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு , மீண்டும் அறைக்குள் வந்தேன். தற்போது யானை மெலிந்து பூனையாகி இருந்தது. சற்று தெம்புடன் படுக்கையில் தலை சாய்த்தேன். இரண்டே நிமிடத்தில் நண்பர் விஸ்வரூபமெடுத்து விண்ணைத் தொட , எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதிலிருந்து மீள உண்டான அனைத்து வழிவகைகளையும் என்னாலான வரையில் brain storming செய்ய, பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. குறட்டை விடுபவரை ஏதேனும் ஒரு வகையில் disturb செய்தால் ஒலி தடைபடும் அல்லது மட்டுப்படும் என்பது அனுபவப் பாடம். வேறு வழியேயின்றி, யோசனையை செயல்படுத்தும் விதமாக , அருகிலிருந்த குவளையைத் தட்டி விட்டேன்.

'ணங்' என்ற சத்தம் கேட்டது.


அறியப்படும் நீதி : நாம் விடும் குறட்டை நமக்குக் கேட்பதில்லை.

30 April 2012

முதல் மரியாதை

நேற்று மாலை தொலைக்காட்சியில் 'முதல் மரியாதை' படம் பார்த்தேன்.  (எத்தனையாவது தடவை?!).என்னுடைய துவக்கப் பள்ளிப் பருவத்தில் வெளிவந்த படம். பாரதிராஜாவே நினைத்தாலும் இப்போது அவரால் இது போன்ற படத்தைக் கொடுக்க முடியாது. எனக்குத் தெரிந்து நடிகர் திலகம் அவர்கள் over acting ஏதும் செய்யாமல் நடித்த இந்த (ஒரே) படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் முறை போலவே ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம்.
எளிமையான கதை , தொய்வில்லாத திரைக்கதை, அசலான பாத்திரங்கள், எதார்த்தமான சூழல், அளவான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு, இயல்பான நடிப்பு, அர்த்தமுள்ள பாடல் வரிகள், இத்தனைக்கும் மகுடமாய் இளையராஜாவின் இசை என படத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டவை.
ஒரு தலைமுறையின் ரசனையை வளர்த்தெடுத்ததில் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு வகித்தவை இது போன்ற திரைப்படங்கள் தான். மனித உறவின் உளவியல் சிக்கல்களை எழுத்தில் வடித்த கதாசிரியர்களும், அவ்வுணர்வுகளை திரையில் கொணர்ந்த இயக்குனர்களும், அவற்றை பார்வையாளனுக்குள் ஊற்றிய இசையமைப்பாளர்களும் தாங்கள் பெற்ற ஊதியத்திற்காக மட்டுமின்றி , தங்கள் ஆத்ம திருப்திக்காக பணியாற்றியதுதான் காலத்தால் அழியாத படைப்புகளாக நம்முடன் உலவுகின்றன.
ஊர்ப் பெரியவருக்கும் , பரிசல் ஓட்டும் இளம் பெண்ணுக்கும் இடையிலான இனம் புரியாத நேசத்தைக் காட்டிய 'முதல் மரியாதை '-
படிப்பு வாசனையில்லாத முரடனுக்கும், அவனை மனிதனாக்கும் ஆசிரியைக்கும் இடையில் மலரும் அன்பைக் காட்டிய 'கடலோரக் கவிதைகள்'-
புகழ் பெற்ற பாடகிக்கும், அவளது தீவிர ரசிகனுக்கும் இடையில் உருவாகும் உன்னத உறவைக் காட்டிய மகேந்திரனின் , 'ஜானி'-
பொருந்தாக் காமத்தை விரசமில்லாக் காதலுடன் மிக நேர்த்தியாகக் காட்டிய 'சிந்து பைரவி'-
பருவத்தில் தோன்றும் காதல் போன்றதொரு உணர்வை ஆரவாரமில்லாக் கொண்டாட்டத்துடன் காட்டிய 'இதயம்'-
முடிந்து போன முதல் காதலில் இருந்து மீள முடியாத மனைவியை ஆதரிக்கும் கண்ணியமான கணவனைக் காட்டிய 'மௌனராகம்'-
இன்னும் எத்தனை படங்கள் ! எங்கள் தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள் என்று உரத்துச் சொல்வேன்.
நடிகர், நடிகையரின் முகம் தாண்டி மற்ற தொழில் நுட்பப் பின்னணி குறித்த பிரக்ஞையற்ற வெகுஜனக் கூட்டமாகத் தான் இப்படங்களை அனுபவித்தோம்.... கொண்டாடினோம்தொழில் நுட்ப நுணுக்கங்கள் அனைத்தும் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்று சேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் இவற்றை மீண்டும் பார்க்கும் போது , வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே camera angle, lighting, editing, re-recording என அனைத்துத் துறை ஜாம்பவான்களும் திரை மறைவில் தங்கள் பங்களிப்பை மிகத் திறமையாகவும், நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்து அற்புதக் காவியங்களைப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்களுக்கும் , இன்றைய குப்பைகளுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் - Decency. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
'முதல் மரியாதை' தந்த கனத்துடன் channel ஐத் திருப்பினால், 'அடிடா அவளை, வெட்றா அவளை ' என்கிறான் ஒருவன். பதறிப் போய் அடுத்த channel போனால் , 'கொல வெறி...கொல வெறி' என்று அலறுகிறான் இன்னொருவன்.
ஐயோ பாவம் ...இன்றைய இளைஞர்கள்!

24 April 2012

தந்தை மகற்காற்றும்.....

நீண்ட நாட்களுக்குப்  பின் , குடும்பத்துடன் வெளியூர் பயணம் . தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர் ஒருவரின்  திருமண விழாவிற்கு அழைப்பு வர, நான் பிள்ளைகளிடம்  கேட்டேன்,
 " டேய் புவன்... கடல் பார்த்திருக்கியா...?".
 " நேரில பார்த்ததே இல்லப்பா...படத்துல தான் பார்த்திருக்கேன்."
" ஏய் சந்து...நீ கடல்  பார்த்திருக்கியா...?"
" அப்படின்னா...?!"

மேற்கண்ட உரையாடலின் முடிவில் உருவானது எங்களின்  திருச்செந்தூர் பயணத்திட்டம். ஞாயிறன்று காலை 4.30 மணி ரயில்  பிடித்து மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்று விழாவைச் சிறப்பித்து விட்டு ,  அங்கிருந்து பேருந்து மூலம் செந்தூர் சென்று கடலில் குளித்துக் களித்துப் பின் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பிடிப்பதாகத் திட்டம்.  பேசிய கையோடு இணையம் மூலம் முன்பதிவும் செய்து விட , 'அப்பாவா இப்படி' என பிள்ளைகளும் , 'இவரா இப்படி' என என் மனைவியும்  ஒரு சேர ஆச்சர்யமும் , குதூகலமும்  அடைந்தார்கள். 'சேட்டை செய்யும் குழந்தைகளை வெளியூர் பயணங்களில் சமாளிப்பது எப்படி' என்று ஒரு புத்தகமும் நான் படித்திராததால் , பொதுவாக குடும்பப் பிரயாணங்களைத் தவிர்த்து விடுவது என் வழக்கம். தற்போது பிள்ளைகள் சிறிது பெரியவர்களாகி விட்டார்கள் என்று நம்பிக்கையில் இந்த பயண ஏற்பாடு. 

சனிக்கிழமை இரவிலிருந்தே பயணம் தொடர்பான சந்தேகங்களை (வழக்கம் போல்)  கேள்விக் கணைகளாகத் தொடுக்க ஆரம்பித்த புவனை சமாளித்து சற்றே கண்ணயர்ந்தால் ,  வைத்த அலாரம் அடிப்பதற்கு முன்பாக 3 மணிக்கே எழுப்பி விட்டனர் மின்வாரியத்தினர். அனைவரையும் எழுப்பி அரக்கப் பரக்க  கிளம்பி  அடித்துப் பிடித்து  ரயில் நிலையம் அடைந்தாலும் ஆற அமரத்  தான் வண்டியேறினோம். (வண்டி தாமதம்!). அதுவரை ஆடிக் கொண்டிருந்தவர்கள் , வண்டி நகரத் தொடங்கியதும் இருக்கையில் சரியத் தொடங்கினர். நான் சன்னலை ஒட்டிய பக்கவாட்டு படுக்கையில் படுத்தேன். சிறிதே பரவியிருந்த ஒளியும், சில்லென்ற அதிகாலைக் காற்றும் , சீரான வேகத்தில் செல்லும் வண்டியின் அசைவும், என் மீது கிடந்த பிள்ளையின்  அணைவும் ...சுகம்.. சுகம்.. பரம சுகம் 
சரியாக எட்டு மணிக்கு மண்டபத்தை அடைந்து , சுற்றத்துடன்  அளவளாவி , விழாவின் முக்கிய நிகழ்வான காலை உணவு ருசித்தலைக் கடமையுடன் முடித்து ,  ஒரு மணி நேரம் பயணப்பட்டு 11 மணிக்கு திருச்செந்தூர் சென்றிறங்கிய  எங்களுக்கு அங்கிருந்த அபரிமிதமான மக்கள் கூட்டம்  அதிர்ச்சியளித்தது. முடியுடனும், இல்லாமலும் ஆயிரக்கணக்கான தலைகள். முடிக் காணிக்கை அனுமதிச் சீட்டு வாங்க வரிசை, முடி எடுக்க வரிசை, நாழிக் கிணற்றில் குளிக்க வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வரிசை, மதிய உணவு சாப்பிட கடைகளிலும் வரிசை என பொழுது முழுவதும் வரிசையிலேயே கழிந்தது. ஒரே ஒரு ஆறுதல், கடலில் குளிக்க மட்டும் வரிசையில்லை. கடலைப் பார்த்து வியந்த பிள்ளைகள் ஒரு அலை தாக்கியதும் கதறிப் பின்வாங்கி விட்டனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் வர மறுத்து ,கரையில் என் மனைவியிடம் தஞ்சமடைந்தனர். நான் அரை மனதுடனும் சிறிது பதற்றத்துடனும் கடலில் விழுந்து எழுந்தேன்.

வரிசைகளில் நிற்கும் போது புவனேஷின் கேள்விகளும், சந்தோஷின் அலையல்களும் எங்கள் உயிரில் பாதியை உருவின. அவ்வப்போது  சந்தோஷ் எங்கள் கண்ணை மறைத்து  மறைந்து விட,  அவன் அணிந்திருந்த மஞ்சள் சட்டையை வைத்து அவனை மீட்டெடுத்தோம். ஒவ்வோர் கடையைத் தாண்டும் போதும் பொருட்கள் கேட்டு சந்தோஷ் செய்த அட்டகாசமும், முடி எடுக்கும் போது அவன் செய்த ரகளைகளும்  தனிப் பதிவிற்கானது.  சுட்டெரித்த  சூரியனும், சுறுசுறுப்பான பிள்ளைகளும் எங்களைக் களைப்புறச் செய்தனர். ஒரு வழியாக, சற்று தொலைவிலிருந்து (?) சுவாமி தரிசனம் செய்து , அரைகுறையாக சாப்பாடு முடித்து , icecream கடையில் ஆசுவாசப்பட்டு நிமிர்ந்த போதுதான் உறைத்தது. ம்ணி மூன்று. சுட்டெரிக்கும் வெயிலில் , ஆளுக்கொரு பிள்ளையாக இழுத்துக் கொண்டு , கிளம்பத் தயாராயிருந்த ஒரு  தனியார் பேருந்திலேறி அமர்ந்தோம்.  இன்னும் ஒன்றரை மணிக்குள் ரயிலைப்  பிடிக்க வேண்டிய பதற்றத்தில் நாங்கள் இருக்க, காலியாயிருந்த வாசற்படியும் நிரம்புவதற்குக் காத்திருந்தனர் நடத்துனரும் ஓட்டுனரும். ஒரு வழியாகக் கிளம்பிய பேருந்து, சிற்றுந்தாக மாறி நூறடிக்கு ஒரு தடவை நின்று சென்றது. ஒரு வேளை தாமதமாகி விட்டால்...... மதுரை வரையிலுமான பேருந்துப் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போதே  தலை சுற்றியது.

முருகன் கிருபையால், சரியான நேரத்துக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்து, ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். அந்த ஆட்டோ ஓட்டுனர் எப்போதும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பார் போலும். எங்கள் நிலையை அறிந்தவுடன் அடுத்த ஐந்தே நிமிடங்களில் ரயில் நிலையத்தில் எங்களைக் கிடத்தினார்.அந்த ரணகளத்திலும் சந்தோஷ் அவருக்கு ' 'டாடா' காண்பித்து விடை கொடுத்தான்.எங்கள் வருகைக்காகக் காத்திருந்தாற் போல் , நாங்கள் ஏறியவுடன் ரயில் புறப்பட்டது. ம்துரை வந்து சேர்ந்தவுடன் நேராக உணவகத்துக்கு அழைத்துச் செல்ல, களைத்துப் போயிருந்த  எங்கள் மூவருக்கும் சேர்த்து சந்தோஷ் தனியாளாய்  வெளுத்துக் கட்டினான்

சாப்பாடு முடித்து வீடு வந்து படுக்கையில் மனதில் சில கேள்விகள்....
இல்லற வாழ்வில் துணையை அனுபவிப்பது சுகமெனில், இணைப்பாய் வரும் பொறுப்புகள் அனைத்தும் சுமையா? பிள்ளைகள் பெறுவது சுகமெனில்,  தொல்லைகள் பொறுப்பது சுமையா?பிணைக்கப்படுதல் சுகம் எனில், பிணக்குகள் வருவது சுமையா? சம்சாரியாவது சுகமெனில், சமரசமாதல் சுமையா?  'சம்சார சாகரம்' என்று சும்மாவா சொன்னார்கள்  எனப் பலவாறு யோசித்துக் கொண்டே  உறங்கிப் போனேன். 
மறுநாள் காலையில்  பிள்ளைகள் இருவரும்   பயணத்தைப் பற்றிப் படுக்கையிலிருந்தவாறே சிலாகித்துக் கொண்டிருந்தனர். முன் தினம்  எனக்கு சலிப்பூட்டிய  தருணங்கள் அனைத்திலும் அவர்கள் சிலிர்ப்படைந்திருந்தது அவர்கள் பேச்சில் தெரிந்தது. பயணத்தின் களைப்பு தாண்டிய பூரிப்பு அவர்கள் உடல் மொழியில் வெளிப்பட்டது. நான் விழித்து விட்டதைப் பார்த்ததும் இருவரும் உருண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டனர்.

"அப்பா...மறுபடியும் இதே மாதிரி இன்னொரு கடல் பார்க்கப் போலாமா...?"
"சரிடா  செல்லம்...அடுத்த வாரம் கண்டிப்பா போலாம்.."
சொல்லிக் கொண்டே  சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து  எழுகையில், விவரிக்க இயலாத சுகம் ஒன்று என் உடல் முழுதும் பரவியது. அது, முன் தினம் அதிகாலை ரயிலில் அனுபவித்ததை விட அற்புதமானதாக இருந்தது.