20 April 2009

டோராவும் , புஜ்ஜியும்



சென்ற சனிக்கிழமை இரவு ஆயத்த ஆடை வாங்கும் நிமித்தம் நானும், என் மூன்றரை வயது மகன் புவனும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். காளவாசல் சந்திப்பு அருகே , ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.பேருந்தின் வேகமும் அவனுடைய வேகமும் ஒத்துப் போகாமல் , ஏறுவதற்கு போராடிக் கொண்டிருந்தான். நானும் , அவனைக் கவனித்த சிலரும் சேர்ந்து கூச்சலிட்டோம். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது தொடர்ந்து பேருந்தில் ஏறத் தலைப்பட்டான்.இறுதியில் பேருந்து அவனைக் 'கை'விட , பேருந்தை அவன் கை விட , தரையில் விழுந்து உருண்டு புரண்டு சுதாரித்து எழுந்தான். எல்லாம் வினாடிகளில் நடந்து முடிந்தது. தான் கீழே விழுந்ததை விட , அதை மற்றவர்கள் பார்க்கிறார்களே என்ற வெட்கத்துடனும் , சுய கழிவிரக்கத்துடனும் , எழுந்த வேகத்தில் சாலையைக் கடந்து நடை பாதையை அடைய எத்தனித்தான். இது அந்த வயதினர்க்கே உரிய குணம். எப்போதும் எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று பேதமையாக நினைக்கும் வாலிபக் குணம்.நடந்து முடிந்த நிகழ்வின் முடிவை ஆராயாமல் , அது நடந்த விதத்தைப் பற்றியே கவலை கொள்ளும் பிள்ளைக் குணம்.

அவன் எங்களை நெருங்குகையில் , எனக்குள்ளிருந்த பதற்றம் ஆத்திரமாய் வெளிப்பட்டது. அவன் காது கேட்கும் படி கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தேன்.என்னை மாதிரிப் பலரும்.

நாங்கள் துணிக் கடையை அடைந்த நேரம் இந்த சம்பவத்தைக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன். வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று , குழந்தைகளுக்கான ஆடைப்பிரிவுக்கு சென்றோம்.பலவித ஆடைகளைத் தேர்வு செய்தும் புவனின் முகத்தில் மகிழ்ச்சியேயில்லை .மாறாக, கலக்கமாயிருந்தான்.

"புவன் ...ஏன்டா ஒரு மாதிரியிருக்கே...டிரஸ் ஏதும் பிடிக்கலையா...?"

நான் கேட்டதுதான் தாமதம். பொலபொலவென கண்ணீர் சிந்த தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அழுகையும் ஆவேசமும் ஒரு சேர வார்த்தைகளைப் பிரசவித்தான்.

"ஏம்ப்பா... அவனைத் திட்டினீங்க...?"

"யாரை?"

"பஸ்ல இருந்து விழுந்தான் ல...அவனை..."

"பின்ன என்ன செய்யனுங்கிற...?"

"உதவி செய்யணும் ப்பா..."

"என்னது ..?"

அவனிடமிருந்து அதை எதிர்பார்க்காத நான் அதிர்ந்தேன். காரணம் , 'உதவி' என்ற தமிழ் வார்த்தையையோ அல்லது அதன் அர்த்தத்தையோ நான் அவனுக்கு அறிமுகப்படுத்தியதேயில்லை.

" கீழ விழுந்துட்டான் ல...அவனைப் போயி நாம தூக்கிவிடனும் ப்பா...நீங்க அவனைத் திட்றீங்க ..."

நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். " உதவி செய்யனும்னு உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க..? உங்க மிஸ் தான...?"

"இல்லப்பா...டோரா..."

___________________________________________

தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக , டிவி ரிமோட்டைத் துறந்து , அவர்களுடன் சுட்டி டிவியில் டோரா -புஜ்ஜி பார்க்கும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் நான் பகர விழையும் பொருளின் வீச்சு புரியும். அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.


2 comments:

  1. சரிதான்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. உண்மைதான்..எங்க வீட்டிலும் நான் உதவி செய்யவா அம்மான்னு குரல் கேக்க ஆரம்பிச்சு இருக்கு! அப்போதெல்லாம் நானும் டோராவை நினைச்சுக்கறேன்! நன்றி பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete