22 March 2010

தினைத்துணை செய்யும் உதவி ....



" ஏம்மா ....திராட்சை என்ன விலை?..."
" கிலோ அறுபது ரூபா..கால் கிலோ பதினைந்து ரூபா..."
" என்னது...அறுபது ரூபாயா ...போன வாரம் அம்பது ரூபாதானே..."
"விலைவாசி எல்லாம் கூடிப் போச்சும்மா..நான் என்னம்மா செய்யட்டும்..."
" கால் கிலோ பதிமூணு ரூபான்னு கொடு...இல்லைன்னா ஆளை விடு..."
"சரி..சரி..எடுத்துக்கோம்மா..."



சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாய் அமர்ந்து கூவிக் கூவிப் பழம் விற்கும் (பெரும்பாலும் நடுத்தர வயதான) பெண்மணியிடம் மேற்கண்ட உரையாடலை நீங்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும். பல்பொருள் அங்காடிக்குச் சென்று அத்தியாவசியத் தேவைக்கு அடுத்தபடியான பொருட்களை , வில்லை சொன்ன விலையில் வாங்கி வரும் நாம் , உச்சி வெயிலில் உண்ணக் கூட நேரமின்றி (அல்லது உணவின்றி) தொண்டை நீர் வற்ற வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசி நம் பராக்கிரமத்தை நிலை நாட்டுகிறோம்.

இது சார்ந்த எனது ஆற்றாமைகளில் சில.

1. அவளைக் கடந்து போகும் எல்லோரும் பழம் வாங்குவதில்லை.
2. business world, cut throat competition என்றெல்லாம் சொல்கிறோமே , அது நிஜத்தில் நடப்பது அங்கேதான். நூறு அடி தூரத்திற்குள் அவளுக்குப் போட்டியாகப் பத்து பேர். எனவே , அவளிடம் வாங்கும் எல்லோரும் அவள் சொல்லும் விலையில் வாங்குவதில்லை.
3. அப்படியே வாங்கினாலும் நாள் முடிவில் அனைத்துப் பழங்களும் விற்பதில்லை. வெம்பிப் போன பழத்தோடும் , மனதோடும் வீடு திரும்பும் நிலை.
4.அவள் ஒன்றும் திராட்சைத் தோட்டத்திற்கு சொந்தக்காரி இல்லையே ! அடுத்த நாள் வியாபாரம் தொடர , அதிகாலையில் பழங்களை அன்றைய நிலவரப்படி குறிப்பிட்ட விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு வருடம் முன்பு.......
மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் விலை - 9 ரூபாய். (கால் கிலோ)
அவள் விற்கும் விலை - 12 ரூபாய்.
லாபமான 3 ரூபாய் , வெம்பிய மற்றும் அழுகிய பழங்களின் நஷ்டம் போக 2 ரூபாயாகிறது.
வண்டிக் கட்டணம் /பேருந்துக் கட்டணம் போக நிகர லாபம் ஒன்றரை ரூபாயாகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை கால் கிலோ விற்கும் என்று எண்ணி பார்த்து அன்றைய நிகர லாபத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த நிகர லாபத்தில் தான் அவள் தானும் சாப்பிட்டு , குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். சாப்பாடு மட்டும் போதுமா...வீட்டு வாடகை , துணிமணி, பள்ளிக் கட்டணம் , மருத்துவ செலவு , இத்யாதி, இத்யாதிகள்.....கணவன் ஒழுங்காயிருந்தால் போயிற்று , அல்லாமல் குடிகாரனாக இருந்தால் ...அவனையும் சமாளிக்க வேண்டும். இத்தனை துயரத்திலும் அவள் தன்னிடம் இருக்கும் முதல் 9 ரூபாயைத் தொட முடியாது . அடுத்த நாள் கொள்முதல் செய்ய அதுதானே மூலதனம்.

கடந்த ஒரு வருட காலத்தில் , பல காரணங்களால் அனைத்து தரப்பிலும் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
தற்போதைய கொள்முதல் விலை - 12 ரூபாய்.
விற்கும் விலை - 15 ரூபாய்.
அழுகல் போக, ஒரு வருடத்திற்கு முந்தைய அதே லாபமான 2 ரூபாயில் , வண்டிக் கட்டணம் உட்பட, அரிசி, பருப்பு, வாடகை, மற்றும் மருத்துவ செலவு அனைத்தும் ஒன்று விடாமல் உயர்ந்து விட்ட நிலையில் , அவள் தனது ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய நிலை.

சற்றே எண்ணிப் பாருங்கள். வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு பெரும் நம்மில் எத்தனை பேர் இது போன்ற வியாபாரிகளிடம் திருப்தியாகிறோம். விலை சரிதானா.. எடை சரிதானா ...நல்ல பழம் தானா....என ஏகப்பட்ட 'தானா'க்களுடன் தான் நகர்கிறோம். அவர்கள் கேட்பது இந்த வருடத்திற்கான பஞ்சப்படியல்ல நண்பர்களே , பஞ்சம் அவர்கள் வீட்டுப் படி ஏறாமல் இருப்பதைத்தான் . சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்படும் விலையேற்றத்தை சகித்துக் கொள்ளும் நாம் , மானத்தோடு உயிர் வாழும் ஒரே நோக்கில், தங்கள் சக்திக்கு மீறி உழைத்து , உடன் வாழும் பிரஜைகளின் உதவியை ஒவ்வொரு நாளும் மறைமுகமாக நாடும் இவர்களுக்கு செய்யும் உதவி வேறு என்னவாக இருக்க முடியும், பேரம் பேசாமல் வாங்குவதைத் தவிர ?!

2 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. ""பல்பொருள் அங்காடிக்குச் சென்று அத்தியாவசியத் தேவைக்கு அடுத்தபடியான பொருட்களை , வில்லை சொன்ன விலையில் வாங்கி வரும் நாம் , உச்சி வெயிலில் உண்ணக் கூட நேரமின்றி (அல்லது உணவின்றி) தொண்டை நீர் வற்ற வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசாமல் வாங்க வேண்டும்!!!""

    ReplyDelete