கால் ஒடிந்த காக்கைக்கு
எப்படி நேர்ந்தது
இந்த விபத்து?
அடை மழை பெய்யும் போது
அணில்கள்
எங்கே உறையும்?
நடுநிசியிலும் குரைக்கும்
நாய்கள் எப்போதுதான்
உறங்கும்?
எல்லார் வீட்டிலும்
விரட்டப்படும் பூனைக்கு
யார்தான் சோறு இடுகிறார்கள்?
ஏழெட்டு எறும்புகள்
ஏலேசா பாடி
தூக்கிச் செல்லும் பருக்கை
கூட்டை சென்றடைகிறதா?
சின்ன வயதில்
தோன்றிய கேள்விகள்...
இன்னும்
விடை கிடைக்க வில்லை.
என்ன, இப்போது
இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள்
தோன்றுவதில்லை!
-கே.பி.ஜனா
29 November 2009
19 November 2009
நிலா கேட்கும் குழந்தை

இரண்டு குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒரு குழந்தையின் கையில்
நட்சத்திரங்கள்
இன்னொரு குழந்தையின் கையில்
வெண்ணிலாக்கள்
நட்சத்திரங்கள் வைத்திருந்த குழந்தை
நிலவை கேட்டது.
' ஒரு நிலவுக்கு
ஐந்து நட்சத்திரங்களைக் கொடு'
என்று கேட்டு
பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கும்
ஆசை வந்து கேட்டேன்
'சூரியனைக் கொடுத்தால்
நிலாவையும் நட்சத்திரத்தையும்
தருகிறோம் ' என்றார்கள்
என் கைகளைப் பாத்தேன்
அதில் சூரியன் இல்லை.
சிறு வயதில்
வைத்திருந்ததாக ஞாபகம்
பெரியவன் ஆனதும்
தொலைத்து விட்டேன்!
-தி. ஐயப்பன்
22 October 2009
அமெரிக்கன் கல்லூரி

வாழ்வில் சில நிகழ்வுகள் குறுகிய காலத்தில் கடந்து போனாலும் அந்நினைவுகள் , சிறுமழை விட்டுச் சென்ற மண் வாசனையாய், நம்முடனேயே தங்கி விடுகின்றன. மதுரை அமெரிக்கன் கல்லூரியுடனான எனது உறவும் அப்படித்தான். பள்ளி முடித்து பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கையில் (அப்போதெல்லாம் கவுன்சிலிங் கிடையாது ) , சும்மா இருக்க வேண்டாமே என அமெரிக்கன் கல்லூரியில் B.Sc.,( special Maths) பிரிவில் சேர்ந்தேன். பச்சை நிற மரங்களுக்கிடையில் சிவப்பு நிற கட்டிடங்களாய் ஆங்கிலேயர்களின் ரசனையைய் பறை சாற்றி கொண்டு ஏக்கர் கணக்கில் பரவியிருக்கும் கம்பீரமான கல்லூரி அது.
பள்ளியிலிருந்து கொண்டு சென்ற ஒரு தலைக் காதலும் ( யாராவது infatuation என்று சொன்னால் அப்போது கடுங்கோபம் வரும்) , ஓராயிரம் கனவுகளுமாய் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்த வளாகத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் பொன்னான காலகட்டம். யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். நினைத்தால் வகுப்பிற்குப் போகலாம், இல்லையென்றால் நினைத்த இடம் போகலாம். அத்தனை சுதந்திரம்! பள்ளி முடித்த சிறுவர்களை முழு இளைஞர்களாக்கி அனுப்பும் அற்புத வளாகமது. அனுபவம் வாய்ந்த பேராசியர்களின் நட்பான அணுகுமுறை , பருவ மாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். திறமையாளர்களுக்கு முழு அங்கீகாரமளித்து , அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் உன்னத கூடம் அக்கல்லூரி. கலைத்துறை ஜாம்பவான்கள் பல பேர் அக்கல்லூரி அளித்த கொடை.
அமெரிக்கன் கல்லூரி மாணவரென்றால் 'Matured and Decent guy' என்ற மதிப்பீடு இருந்தது. கல்லூரிகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளையும் வென்று வாகை சூடுவார்கள்.
அங்குள்ள மரங்கள் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவருக்கு போதி மரமாய் இருந்திருக்கின்றன. பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரி வரையிலான நடைபாதை நிமிடங்கள் , மழை நேர மாலைப் பொழுதுகளில் ஆங்காங்கே பூத்திருக்கும் சிமென்ட் பெஞ்ச் அரட்டை, விளையாட்டு மைதான மரங்களின் நிழலில் நண்பர்களுடன் மதிய உணவு, சின்னஞ்சிறிய உணவகத்தின் சமோசா ருசி , மையமாக வீற்றிருக்கும் தேவாலயப் பிரார்த்தனைகள் என அனைத்தும் என் நினைவில் பசுமை.
ஆனால் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகி விட்ட தற்போதைய சூழ்நிலையில் , தரத்தில் பின் தங்கிய மாணவர்களே கல்லூரியில் சேர்வதாலும் , சமீப காலமாக ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவும் கல்லூரியின் மதிப்பு சற்றே மங்கி வருவது வருத்தமளிக்கிறது.
இப்போதும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ' மே மாதம் ' திரைப்படப் பாடலை கேட்கும் போதெல்லாம் அமெரிக்கன் கல்லூரி தொடர்பான அனைத்து சம்பவங்களும் நினைவில் வந்து போகும். இன்றளவும் கல்லூரியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு வருவதுண்டு. முன்னாள் மாணவன் என்ற உணர்வா அல்லது அங்கு சுமந்து திரிந்த காதலின் நினைவா என அந்த சிலிர்ப்புக்கான காரணம் பகுத்தறிய முடியாதது.
11 October 2009
இழந்த தலைமுறை
இழந்த தலைமுறை
-------------------------
மூன்று வயது முடிந்த
என் யூ.கே.ஜி பேரனுக்கு
ஸ்கூல் ப்ராஜெக்ட்
கூட்டுக்குடும்பம் பற்றி.
என் மகன் சொன்ன
இணையதளம்
jointfamily.com
மருமகள் சொன்னது
unitedfamily.org
அவன் டீச்சர்
சொன்ன தளம்
wikipedia.
மூவரும் ஆளாளுக்கு
ஒரு கம்ப்யூட்டரில் தேட
அதே தள மூலையில்
ஐந்து சகோதரிகள்
ஐந்து சகோதரர்களுடன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த
என்னிடம்
ஒரு வார்த்தை கூடக்
கேட்கவில்லை!
-நாராயண ஹரிகிருஷ்ணன்
நன்றி: ஆனந்த விகடன்
-------------------------
மூன்று வயது முடிந்த
என் யூ.கே.ஜி பேரனுக்கு
ஸ்கூல் ப்ராஜெக்ட்
கூட்டுக்குடும்பம் பற்றி.
என் மகன் சொன்ன
இணையதளம்
jointfamily.com
மருமகள் சொன்னது
unitedfamily.org
அவன் டீச்சர்
சொன்ன தளம்
wikipedia.
மூவரும் ஆளாளுக்கு
ஒரு கம்ப்யூட்டரில் தேட
அதே தள மூலையில்
ஐந்து சகோதரிகள்
ஐந்து சகோதரர்களுடன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த
என்னிடம்
ஒரு வார்த்தை கூடக்
கேட்கவில்லை!
-நாராயண ஹரிகிருஷ்ணன்
நன்றி: ஆனந்த விகடன்
சுழல் விதி

முதல் நாள் சந்தித்த
நீ இல்லை நீ.
நீ முதல் நாள் சந்தித்த
நானுமில்லை நான்.
யாருமிங்கு இல்லை
முதல் நாள் சந்தித்த யாருமாய்.
வசந்தங்கள் வந்து போகும்
பருவம் உதிரும் பொழுதுகளில்
காத்திருப்போம் நாம்
இனி வரும்
முதல் நாளுக்காகவும்
எதிர்ப்படும்
முதல் நபருக்காகவும்!
-சில்வியா
29 September 2009
லௌகீகம் - ஆன்மீகம்

இதோ அதோ என்று கடைசியில் பெயர்ந்தே விட்டார் சனி பகவான். கன்னி ராசிக்கு ஏற்கனவே தொடங்கி விட்ட ஏழரைச் சனியில் இது ஜென்மச் சனியாம்.
" உங்களுக்கும் சந்தோஷுக்கும் (ஒரு வயது) நேரம் சரியில்ல...பரிகாரம் பண்ணனும் ...சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க ..." என்ற மனைவியின் குரல் காலையிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் மனம் வெறுமையாய் இருக்கிறது . என் பள்ளிக்கூட நாட்களின் இறை நம்பிக்கை , கடவுள்தன்மை பற்றி எந்தவொரு மனக் கிலேசமுமின்றி அதன் தொடர்பான எனது செயல்கள் என அனைத்தும் மனக் கண்முன் வந்து செல்கின்றன . பள்ளி செல்லும் முன் , வீட்டின் எதிரில் இருந்த 'தங்க மாரியம்மன் ' கோவிலுக்கு சென்று மானசீகமாக அம்பாளுக்கு வணக்கம் சொல்லி , போகும் வழியிலுள்ள தெருவோர சிவன் கோவிலின் திருநீறு பூசி , திருவிழாக் காலங்களில் ' அம்மன் கூழ்' பருகியதால் 'சக்தி' வந்ததெனப் பூரித்து , தெருவில் பவனி வரும் அம்மன் சிலையிலிருந்து விழுந்த பூவை எனக்கான பிரத்யேக ஆசிர்வாதமாய் நினைத்து பத்திரப்படுத்தி .... இன்னும் எத்தனையோ பால்ய நினைவுகள் ....
அறியாமைதான் எத்தனை சுகம் ! உண்மையிலேயே கடவுளுக்கு மிக அருகாமையில் இருந்த நாட்கள் அவை.
அதைத் தொடர்ந்த ,பருவம் எய்திய நாட்களில் ஏற்பட்ட மனச் சிதறல் சிறிது காலம் கடவுள் வழிபாட்டை மறக்க வைத்தது. அதன் பின்னான நாட்களில் , புத்தக வாசிப்பும் , அதற்கு இணையான வெளியுலக அனுபவமும் என் கடவுள் நம்பிக்கையை கேலிக்கும் , கேள்விக்கும் உள்ளாக்கின. கேள்விகள் , கேள்விகள் ,கேள்விகள் மட்டுமே....விடை தேடிய பயணம் ஒரு கட்டத்தில் , உருவமான பொம்மை அல்ல , அருவமான கடவுள்தன்மையே பிரபஞ்சத்தில் சாத்தியம் என்னும் நிலைப்பாட்டை எனக்குள் விதைத்தது. மீண்டும் அந்த நேர்கோட்டில் நீண்ட நாள் பயணம். புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்து , அவை சொன்ன விஷயங்களின் சாரத்தை என்னுள் தக்க வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு செல்லும் பழக்கம் அறவே நின்று போயிற்று. கோவிலுக்கு செல்பவர்களை புன்சிரிப்போடு நோக்கும் ஒரு வித மேதாவித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எல்லாம் தெரிந்ததாக ஒரு அலட்டல் வந்து குடியமர்ந்தது. இவை அனைத்தையும் தள்ளி நின்று அவதானித்த படி இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு கர்வம் மழை மேகம் போல் என் சிந்தனையை மூடியிருந்தது.
ஆனால் தற்போது ஒரு பெண்ணுக்குக் கணவனாக, இரு குழந்தைகளின் தகப்பனாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடவுள் பற்றிய எனது நிலைப்பாடு மறு ஆய்வுக்கு உள்ளானதாகிறது.
ஒரு நிமிஷம் பொறுங்கள்....எதிரே எங்கள் தெரு பால்காரர் வந்து கொண்டிருக்கிறார்.
"என்ன சார்...குழந்தையோட....அதுவும் இத்தனை அவசரமா...."
" இன்னிக்கு சனிப் பெயர்ச்சி...அதான் குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடலாம்னு..... நேரமாச்சு, பூஜையை ஆரம்பிச்சுட போறாங்க ...நான் உங்களை அப்புறமா பார்க்கிறேன்..."
எதிர்ப்பட்ட பால்காரரின் விசாரிப்புக்கு பதில் சொல்லி விட்டு உங்களிடம் கூட பேச நேரமின்றி கோவிலுக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.
09 September 2009
வாழ்க்கையை 'நடத்துபவர்கள்'

கடந்த பத்து நாட்களாக மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய 'தமிழ் பதிப்புலகம்- ஓர் அறிமுகம்' புத்தக வெளியீட்டுடன் நேற்று இனிதே நிறைவுற்றது. தொலைக்காட்சி, இணையம், கைபேசி என எத்தனை ஊடகங்கள் இருப்பினும் புத்தக வாசிப்பு தரும் அலாதி சுகத்தை மக்கள் இன்னும் சிலாகிக்கிறார்கள் என்பதையே 'ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை' என்ற தகவல் நிரூபிக்கிறது. வாழ்க விழா அமைப்பாளர்கள் , தொடர்க அவர் தம் திருப்பணி !
புவனின் தொடர் வற்புறுத்தலின் பேரில் , தொடங்கிய முதல் நாள் அன்றே நானும் அவனும் கண்காட்சிக்கு சென்றோம். L.K.G படிக்கும் பிள்ளைக்கு புத்தகத்தின் மீது இத்தனை காதலா என்று வியக்காதீர்கள். "அடுத்த வாரம் ' book exhibition ' இருக்கு, நாம ரெண்டு பேரும் போவோமா" என்று நான் சொல்லி வைக்க , மான் ராட்டினம், முயல் ராட்டினம், நிறைய பலூன்கள் , இன்ன பிறவெல்லாம் வண்ணங்களாய் அவனுள் விரிந்ததன் விளைவு தான் அது. கண்காட்சித் திடலுள் நுழைந்ததும் பிள்ளை அதைத்தான் முதலில் தேடினான். தேடி சலிப்புற்றவனைத் தேற்றும் விதமாக , அவனுக்கு ஒவ்வாது எனத் தெரிந்தும் அவன் விரும்பிய குளிர் பானத்தை வாங்கிக் கொடுத்தேன்.
பின் ஒவ்வொரு புத்தக அரங்காக ஏறி இறங்கினோம். இரவு தூங்குவதற்கு முன்பான கதை நேரத்தை முன்னிட்டு , மரியாதை ராமன் கதைகள் , தெனாலி ராமன் கதைகள் என சில புத்தகங்கள் , வண்ணம் தீட்டல், புள்ளிகளை இணைத்தல் போன்ற செயல்பாட்டு புத்தகங்கள், என் மனைவியின் விருப்பமான ரமணி சந்திரன் புத்தகங்கள் , அதன் பின் என் விருப்பப் பட்டியலில் இருந்த சில புத்தகங்களையும் வாங்கினேன் . உயிர்மை அரங்கில் கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் சிறிது நேரம் அளவளாவினேன் . இறுதியாக திறந்த வெளி அரங்கில் நாட்டுப்புறப் பாடல் கேட்டு விட்டு, ஒரு கையில் புவனும் மறு கையில் புத்தகப் பைகளுமாக சுகமான சுமைகளுடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது புத்தகத் திருவிழா பக்கம் பேச்சு திரும்பியது. எவ்வளவுக்கு புத்தகம் வாங்கினீர்கள் என்றவரிடம் , நான் தொகையைச் சொல்லவும் , அவ்வளவுக்கா என ஆச்சர்யம் காட்டினார்.
"சரி... என்னென்ன புத்தகங்கள் வாங்கினீங்க " என்ற அவரின் த்வனியில் நம்பிக்கையின்மை வெளிப்பட்டது.
"சு.ரா வின் 'ஒரு புளிய மரத்தின் கதை' , ' ஜே.ஜே. சில குறிப்புகள்' , ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' , 'நெடுங்குருதி' , ஜெயமோகனின் 'சு.ரா- நினைவின் நதியில் ' , 'விக்ரமாதித்யன் கவிதைகள்' ...."என்று நான் சொல்லிக் கொண்டு போக , அது வரை அசிரத்தையாக கேட்டுக் கொண்டு வந்தவர் திடீரென பிரகாசமாகி , " அதை நான் படித்திருக்கிறேன் ...ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்..." என்றார்.
எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம் , மறுபக்கம் 'என் ரசனைத் தளத்துடன் ஒத்துப் போகிற ஒருவரை இத்தனை நாள் இழந்து விட்டோமே' என்ற ஆதங்கம். நான் உற்சாகமாகி , வாங்கிய புத்தகப் பட்டியலைத் தொடர்ந்தேன். சிறிது நேரம் சென்று கையைத் தூக்கிக் காண்பித்து ,
" போதும் ...நீங்கள் சொன்ன விலை சரிதான் . இத்தனை புத்தகங்களும் சேர்ந்து அத்தனை விலை இருக்கத்தான் செய்யும் . இருந்தாலும் நீங்கள் அவ்வளவு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கக் கூடாது. நாட்டுல நிறைய பேர் சாப்பாடில்லாம இருக்க , நாம இப்படி கண்டபடி செலவழிக்கக் கூடாது", என்று ஆரம்பித்து நிறைய அறிவுரைகளை அள்ளித் தெளித்தார். ஒரு கணம் , இவர் மீது சற்று முன் தோன்றிய என் அனுமானம் தவறோ என்று தோன்றியது. அன்றிலிருந்து அந்த வகையறாக்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததற்கு மேற்கூறிய அறிவுரைகள் மட்டும் காரணமல்ல...அதைத் தொடர்ந்து அவர் சொல்லி சிலாகித்த கீழ்க் கண்ட விஷயமும்தான்.
" என்ன ....நான் சொன்னது கரெக்டா சார் ? நீங்க இவ்வளவு செலவு பண்ணினது எனக்குத் தப்போன்னு தோணிச்சு . அதான் சொல்லிட்டேன்...ஆனா நீங்க விக்ரமாதித்யன் புத்தகம் பத்தி சொன்னீங்க இல்ல . அதை வாங்குனதுக்கு நான் உங்களை பாராட்டறேன் . விடாமுயற்சிக்கு நல்ல உதாரணம் சார் அந்த புக்கு. எவ்வளவு தடவை முருங்கை மரத்துல ஏறினாலும் , விடாம அந்த வேதாளத்தை பிடிப்பான் பாருங்க விக்ரமாதித்தன்......"
-----------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் மற்றொரு நண்பருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் :
நண்பர் : என்ன சார்...உங்களுக்குத்தான் புத்தகம் படிக்கிறது பிடிக்குமே...புத்தகத் திருவிழாவுக்குப் போனீங்களா?
நான் : அப்படியா...எங்க சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்கு...
23 August 2009
நானும் இரு தேவதைகளும்....

அவர்கள் ....
என் மீது கொண்ட பற்றால்
தங்கள்
சுயம் மறந்தவர்கள்.
என்னைப் பங்கிடும்
பாங்கு தெரியாது
தங்களுக்குள்
பின்னப்படுபவர்கள்.
என் ரணம் ஆற்றுவதிலும்
என்னுள் ரணம் ஏற்றுவதிலும்
வல்லவர்கள்.
நான் எரியும் விளக்கு...
ஒருத்தி என் அகல்.
மற்றவள் என் தழல்.
நான் ஒளிரும் நிலா..
ஒருத்தி என் வானம்.
மற்றவள் என் சூரியன் .
ஒருத்தி
என் உயிர் சுமந்தவள் .
மற்றவள்
என் 'உயிர்' சுமந்தவள்.
ஒருத்தி
என்னைப் பெற்றவள்.
மற்றவள்
என்னைப் 'பெற்றவள்'
-------------------------------------------
note : you can not be a good man to your good mother and your good wife.
07 August 2009
தீராக் கேள்வி- தெளிவான பதில் 3
ஒரு மனிதனின் மிக மோசமான குணம் எது?
கோள் சொல்லுதல். பிறரைப் பற்றி புறம் சொல்லுதல். நேரே இனிமையாகப் பேசிக் கொண்டு , மிக அன்பானவர் போல , நட்பானவர் போல நடித்துக் கொண்டு பின்னால் , வேறு விதமாகப் பேசுகிற குணம் தான் உலகத்திலேயே மிக மிக மோசமானது. பிறரைப் புறம் சொல்லுகிற புத்தி ஒரு சாபம். இந்த சாபம் இன்னும் பல சாபங்களை உருவாக்கும். நீங்கள் எதிரே இனிமையாகப் பேசி பின்னால் புறம் சொல்லுகிறீர்கள் என்பது சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிந்து விட்டால் அவர் வயிறு எரிந்து உங்களை நோகிற போது அது நிச்சயம் பலிக்கும். வாழ்க்கையில் ஒரு போதும் புறம் பேசாதீர்கள். பேச வேண்டியவற்றை முகத்திற்கு நேரே பேசி முறித்துக் கொள்ளுங்கள். இது பல நூறு முறை நல்லது.
ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டுமா? ஆன்மீகமும் ஆத்திகமும் ஒன்றா?
எல்லோரும் இன்புற்று வாழ்வதே ஆன்மிகம். ஆத்தீகம் என்பது மதம் சார்ந்தது. கடவுள் வழிபாடு சார்ந்தது. ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவது நாத்திகனாலும் முடியும். அப்படியிருப்பவர்களை நான் அறிவேன்.
வாழ்க்கையில் இறுதி வரை எந்த சுகமும் அனுபவிக்காமல் சாதாரண பணியில் இருந்து கொண்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வரும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையும், பக்தியும் எப்படி வரும்?
கடவுள் நம்பிக்கை இருந்தால் முயற்சி வரும். முயற்சி இருந்தால் செயல் திறன் வரும் . செயல் திறன் வளர்ந்தால் நல்லதாய் வேறு விதமாக சம்பாதிக்கிற எண்ணமும் , பலமும் வரும்.வெறுமே, திரும்பத் திரும்ப நொந்து கொள்கிறவர்கள் கடைசி வரை நொந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.கடவுள் நம்பிக்கை என்பது தனக்குத் தானே பேசுதல், ஆராய்ந்து அறிதல்.
தியானம் என்பது ஒரு புள்ளியில் அமருவது , அல்ல என்றெல்லாம் கட்டுரை எழுதுகிறார்களே , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
இதைப் பற்றியெல்லாம் படிப்பதை விட நேரடியாய் நல்ல அனுபவஸ்தர்களிடம் அனுபவித்து , முகம் மலர்ந்தவர்களைடம், வாழ்வு மலர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தியானம் பற்றிய கட்டுரைகளைப் படித்து விட்டு குழம்பிப் போகாதீர்கள். தியானம் என்பது மிகுந்த தெளிவோடு அசாத்தியமான அமைதியோடு இருத்தல். ஆனால் இதற்கு மனம் ஒரு நிலைப்படுவது என்ற ஆரம்பப் பயிற்சி முக்கியம். தன்னுடைய மனதை மனத்தால் உற்றுப் பார்ப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை எளிதில் வந்து விடாது. ஒரு நிலைப்பட்ட மனது , ஒரு புள்ளியில் அமருகின்ற மனது , தன் மனதை இடைவிடாது எந்த வித கோபம் , விருப்பு வெறுப்பின்றி உற்றுப் பார்க்கும். சிறுவர்கள் பாதி பெடலில் சைக்கிள் ஒட்டி விட்டு ,பிறகு சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவார்கள். பிறகு வித்தை காட்டுவார்கள். அது போலத்தான் மாநதி ஒரு நிலைப்படுத்தும் ஆழ் நிலைத் தியானமும். ஒரு எல்லைக்குப் பிறகு இதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களோ, கட்டுரைகளோ தேவையில்லை. உங்களுக்கே அடுத்த படிக்கு போக தெரிந்து விடும்.
கேள்வி ஞானம்
நாற்பது வரை
பணத்தை நீ
தேட வேண்டும்.
நாற்பதின் பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்.
சாப்பாட்டு மேசையும்
கட்டிலும்
தொட முடியாத
தூரத்தில்
இருக்கட்டும்.
அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்.
புது மனைவியின்
தாய்மை
புதுத் தொழிலில்
லாபம்
இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே.
பயணமா?
பெட்டியிலும்
வயிற்றிலும்
காலி இடம்
இருக்கட்டும்.
தடுமனா
மருந்து-சாப்பாடு.
காய்ச்சலா
மருந்து-பட்டினி.
பொழுது
மலச் சிக்கல் இல்லாமல்
விடிய வேண்டும்.
மனச் சிக்கல் இல்லாமல்
முடிய வேண்டும்.
- வைரமுத்து
FRIEND மாதிரி......
திருக்குறள் :
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
என் குரல்:
அகநக நட்பது நடக்காது பணியிடம்
முகநக நட்பதே நல்லது.
பொருள்:
பணிபுரியும் இடத்தில
நண்பர்கள் சாத்தியமில்லை.
சாத்தியம் என்றால்
அது சத்தியமில்லை.
நன்றி :
இதை இன்றெனக்கு உணர்த்திய நண்பருக்கு (?!).
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
என் குரல்:
அகநக நட்பது நடக்காது பணியிடம்
முகநக நட்பதே நல்லது.
பொருள்:
பணிபுரியும் இடத்தில
நண்பர்கள் சாத்தியமில்லை.
சாத்தியம் என்றால்
அது சத்தியமில்லை.
நன்றி :
இதை இன்றெனக்கு உணர்த்திய நண்பருக்கு (?!).
27 July 2009
முற்பகல் செய்யாவிடினும்......
'வீட்டைக் கட்டிப் பார் , கல்யாணம் பண்ணிப் பார் ' என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததில் இரண்டாவது விஷயத்தை முதலில் செய்து இன்பம் துய்த்து , தற்போது முதலாவது விஷயத்தையும் வெற்றிகரமாக முடித்தாகி விட்டது. அதன் காரணமாகத்தான் இணையத்தில் இந்த இரண்டு மாத இடைவெளி.
சென்ற வாரம் ஒரு வேலை நிமித்தமாக திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் செல்ல வேண்டியிருந்தது. வங்கி ஒன்றில் சிறு வேலை முடித்து , முற்பகல் பதினோரு மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று வண்டியேறினேன். அதிகாலையில் உட்கொண்ட சிற்றுண்டி செரிமானமாகி , குடல் மதிய உணவை எதிர் நோக்கியிருந்தது. சற்று பசித்தாலும் , பேருந்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்ததும் , சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அமர்ந்தேன். ரயில் பயணமாக இருந்தால் புத்தகம் தான் என் உற்ற நண்பன். யாருடனும் பேசாமல் நாட்கணக்கில் பயணம் செய்வேன். ஆனால் பேருந்தில் அந்த சுகம் கைகூடுவதில்லை. கால் மணி நேரம் படித்தாலே தலை கிறுகிறுக்கிறது, மேலும் அது கண்ணுக்கு உகந்ததல்ல.இது போன்ற தருணங்களில் நான் பெரிதும் சார்ந்திருப்பது தொலைக் காட்சிப் பெட்டியைத் தான். ஆனால் அதிலும் எனக்கொரு சிக்கல் உண்டு. பயணத்தின் பொழுது , சிறந்ததென நான் கருதும் படத்தை திரையிடும் பட்சத்தில் ( அதை எத்தனை முறை பார்த்திருந்தாலும்) வெறுமை ஏதும் தட்டாது பயணம் சுகப்படும். மாறானால் , அது வரை நான் அறிந்து செய்த தவறுகளுக்கான தண்டனையாய் அந்தப் பயணம் நிகழ்ந்து தொலையும். ஆகவே, திரைப்படக் குறுந்தகட்டை நடத்துனர் எடுக்கும் போதே என் மனம் அனிச்சையாக அவரை நோக்கி கை கூப்பும்.
அன்றும் அப்படித்தான், என் வாழ்வின் மூன்று மணி நேரத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தேன். ஆனால் விதி வலியது. அவர் திரையிட்டது திரு.விஜய் நடித்த 'போக்கிரி'. என் ரசனைக்கு ஒவ்வாத, ஆனால் புவனின் விருப்பமான அந்தப் படம் இருபது முறைக்கும் மேலாக ஓடியிருக்கிறது என் வீட்டில். அனிச்சை செயலாகவே எனக்கு அதன் காட்சிகள் அனைத்தும் அத்துப்படி. யோசிக்கும் போதே என் வயிற்றுக்குள் சிறு பிரளயம் ஏற்பட்டது. அது பசியினாலா , அல்லது எதிர் கொள்ளப் போகும் மூன்று மணி நேரத் தண்டனையாலா என அனுமானிக்க முடியவில்லை. பிறகென்ன , ருசியில்லாத உணவை ,தாயின் நிர்ப்பந்தம் காரணமாக உண்ணும் குழந்தை போல் , அந்தப் படத்தைத் தின்று செரித்தேன்.
ஒரு வழியாக , மதியம் இரண்டு மணியளவில் திருச்சி சென்று , பல்கலையில் வேலை முடித்து, மீண்டும் மதுரைக்கு வண்டியேறிய பொழுது மணி ஐந்து. என்னைப் பொறுத்த வரை, முற்பகல் மற்றும் மாலை நேரங்கள் பேருந்து பிரயாணத்திற்கு ஏற்றவை அல்ல. நிறையாத வயிறு ,பயணம் முழுதும் அதன் இருப்பை உணர்த்தி கொண்டேயிருக்கும். அதிகாலையோ , உணவுக்குப் பிறகான மதிய நேரமோ அல்லது இரவு நேரமோ தான் நிம்மதியான உறக்கத்துக்கு உத்தரவாதம் தரக் கூடியவை. அன்று இரண்டு நேரமுமே அகால நேரமாக அமைந்து போயிற்று.
ஏறியவுடன், மதுரை மீனாட்சி அம்மனை மனது வேண்டிற்று...நல்ல படமாக இருக்க வேண்டுமே! நடத்துனர் வந்தார், எடுத்தார், போட்டார். விதி மீண்டும் விளையாடியது. என் நிலையை என்னென்று சொல்வது ?!...திரையிடப்பட்ட படம் திரு.விஜய் அவர்கள் நடித்த 'வில்லு'. இதுவும் அப்படியே... புவனேஷ் மட்டுமல்ல, சந்தோஷும் இந்தப் படத்தின் தீவிர ரசிகனானதால் என் வீட்டில் வெள்ளி விழா கொண்டாடிய படமிது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றுதானே சொல்வார்கள். நான் முற்பகலில் , பாவம் ஏதும் செய்யாமல் தண்டனைதானே அனுபவித்தேன்...பின் ஏன் இப் பிற்பகலிலும் ? அக்கணம் , போர்க்களத்தின் நடுவே நிராயுதபாணியாய் நிற்கும் அரசனைப் போல் உணர்ந்தேன். என் ஆராய்ச்சி பற்றி சிந்தனை செய்யலாமென்றால் திரு.விஜய் அவர்கள் அதற்கும் என்னை அனுமதிக்க வில்லை . அரைத்தூக்கமோ , மயக்கமோ ஏதோவொன்றை போட்டு விட்டு இரண்டரை மணி துளிகள் சென்று கண் திறந்தேன். படம் முடிந்திருந்தது.
நெட்டி முறித்து, அடுத்த முப்பது நிமிடங்களை நிசப்தத்துடன் அனுபவிக்கத் தயாரானேன். அந்த நேரம், மீண்டும் ஒரு விளையாட்டு அறிவிப்பு...விளையாடப் போவது யார் ? விதிதான்!. வில்லுவின் தொடர்ச்சியாக வந்த படம் 'போக்கிரி'. ஐயோ....நான் வாய் விட்டு அழாத குறை ...இப்படி தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்களே...பசி வயிற்றைக் கிள்ள, கை கால் துவள, நான் மறுபடியும் கண் மூட முயன்றேன்.அப்போது என் அருகே இருந்தவர் தன் திருவாய் மலர்ந்தவுடன் , எனக்கு ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்புதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.
அவர் என்னிடம் சொன்னது இதுதான் , " இந்தப் படத்தை முதல்லேய போட்டிருக்கலாம் , சார்". யார் கண்டது , அவர் முற்பகலில் ஏதேனும் ஒரு பேருந்தில் வில்லு பார்த்திருக்கக் கூடும்.
_____________________________________________________
இத்தனைக்கும் நடுவே ,பொதுவாக, யாருக்கும் நடத்துனர் மேல் வரக் கூடிய எரிச்சல் எனக்கு வரவே இல்லை. மாறாக , பரிதாப உணர்வே எழுந்தது. காரணம் உங்களுக்கே தெரியும்!
21 May 2009
ஒரு கூடும் , பல பறவைகளும்
சுயநலமே குறிக்கோளாய் தன் இரையே முதன்மையாய்
பாடித் திரிந்தன பறவைகள்.
ஆடிக் களித்தன கூட்டிற்குள்.
பறவைகள் பறந்தன.
அழுதது கூடு.
- கல்லூரி முடித்துச் செல்லும் இறுதியாண்டு மாணவர்களின் நினைவாக.
27 April 2009
தீராக் கேள்வி - தெளிவான பதில் 2
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கோபமில்லாத நிலையே சக்தி என்று சொல்கிறார் மகாகவி.அப்படியொரு நிலை உண்டா?
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.
எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.
வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்
எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.
`
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.
எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.
வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்
எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.
`
பகுத்தறிவு
ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?
தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடிவடையும் புள்ளியில் தத்துவம் துவங்குகிறது.
ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார்.
" நான் தான் கடவுள். நல்லது ,கேட்டது எல்லாவற்றிற்கும் அடிப்படையானவன் ".
" அப்படியா...சரி..எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது , அது நல்லது என்பதால் நீங்கள் அப்படி சொல்கிறீர்களா?"
"நான்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால் தான் ஒன்று நல்லதாகிறது!"
"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"
கடவுளுக்கு கோபம் வந்தது. தத்துவவாதி தொடர்ந்தார்.
"அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?"
கடவுள் மறைந்து விடுகிறார்.
- மதன் கேள்வி- பதில்
20 April 2009
டோராவும் , புஜ்ஜியும்

சென்ற சனிக்கிழமை இரவு ஆயத்த ஆடை வாங்கும் நிமித்தம் நானும், என் மூன்றரை வயது மகன் புவனும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். காளவாசல் சந்திப்பு அருகே , ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.பேருந்தின் வேகமும் அவனுடைய வேகமும் ஒத்துப் போகாமல் , ஏறுவதற்கு போராடிக் கொண்டிருந்தான். நானும் , அவனைக் கவனித்த சிலரும் சேர்ந்து கூச்சலிட்டோம். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது தொடர்ந்து பேருந்தில் ஏறத் தலைப்பட்டான்.இறுதியில் பேருந்து அவனைக் 'கை'விட , பேருந்தை அவன் கை விட , தரையில் விழுந்து உருண்டு புரண்டு சுதாரித்து எழுந்தான். எல்லாம் வினாடிகளில் நடந்து முடிந்தது. தான் கீழே விழுந்ததை விட , அதை மற்றவர்கள் பார்க்கிறார்களே என்ற வெட்கத்துடனும் , சுய கழிவிரக்கத்துடனும் , எழுந்த வேகத்தில் சாலையைக் கடந்து நடை பாதையை அடைய எத்தனித்தான். இது அந்த வயதினர்க்கே உரிய குணம். எப்போதும் எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று பேதமையாக நினைக்கும் வாலிபக் குணம்.நடந்து முடிந்த நிகழ்வின் முடிவை ஆராயாமல் , அது நடந்த விதத்தைப் பற்றியே கவலை கொள்ளும் பிள்ளைக் குணம்.
அவன் எங்களை நெருங்குகையில் , எனக்குள்ளிருந்த பதற்றம் ஆத்திரமாய் வெளிப்பட்டது. அவன் காது கேட்கும் படி கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தேன்.என்னை மாதிரிப் பலரும்.
நாங்கள் துணிக் கடையை அடைந்த நேரம் இந்த சம்பவத்தைக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன். வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று , குழந்தைகளுக்கான ஆடைப்பிரிவுக்கு சென்றோம்.பலவித ஆடைகளைத் தேர்வு செய்தும் புவனின் முகத்தில் மகிழ்ச்சியேயில்லை .மாறாக, கலக்கமாயிருந்தான்.
"புவன் ...ஏன்டா ஒரு மாதிரியிருக்கே...டிரஸ் ஏதும் பிடிக்கலையா...?"
நான் கேட்டதுதான் தாமதம். பொலபொலவென கண்ணீர் சிந்த தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
அழுகையும் ஆவேசமும் ஒரு சேர வார்த்தைகளைப் பிரசவித்தான்.
"ஏம்ப்பா... அவனைத் திட்டினீங்க...?"
"யாரை?"
"பஸ்ல இருந்து விழுந்தான் ல...அவனை..."
"பின்ன என்ன செய்யனுங்கிற...?"
"உதவி செய்யணும் ப்பா..."
"என்னது ..?"
அவனிடமிருந்து அதை எதிர்பார்க்காத நான் அதிர்ந்தேன். காரணம் , 'உதவி' என்ற தமிழ் வார்த்தையையோ அல்லது அதன் அர்த்தத்தையோ நான் அவனுக்கு அறிமுகப்படுத்தியதேயில்லை.
" கீழ விழுந்துட்டான் ல...அவனைப் போயி நாம தூக்கிவிடனும் ப்பா...நீங்க அவனைத் திட்றீங்க ..."
நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். " உதவி செய்யனும்னு உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க..? உங்க மிஸ் தான...?"
"இல்லப்பா...டோரா..."
___________________________________________
தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக , டிவி ரிமோட்டைத் துறந்து , அவர்களுடன் சுட்டி டிவியில் டோரா -புஜ்ஜி பார்க்கும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் நான் பகர விழையும் பொருளின் வீச்சு புரியும். அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.
15 April 2009
முப்பது வயதுக்காரன்
அன்னையின் முலைப் பாலுண்டு
ஆழ்நிலைத் தியானத்தில்
சூழ்நிலை மறந்து
அமிழ்ந்திருந்தது மழலைப் பருவம்.
வயதொத்த சிறார்களுடன்
வஞ்சனையின்றி விளையாடி
வெஞ்சினம் ஏதுமின்றி
மகிழ்ந்திருந்தது பால்யம்.
பள்ளிப் பாடங்களோடு
சிறுகதை, புதினங்களுடன்
இரவும் பகலும் உறவாடித்
துள்ளி ஓடியது முன்-பதின்பருவம்.
இலட்சியக் கனவுகளுடன்,
தன்னுள் தான் தேடலும்
கைகோர்த்துப் பயணித்து
இனிதாகக் கழிந்தது பின்-பதின்பருவம்.
நல்லதொரு பணி பெற்று
சகோதரக் கடமைகள் முடித்து
நட்பு, காதல்,மனைவி, பிள்ளையென
பூரிப்புடன் நிறைந்தது இளமைப் பருவம்.
பொய்யான இலக்குகளோடு,
தன் பலம் தானறியாது ,
சுயம் மறந்து, சுழலும் எந்திரமாய்
உழலும் இப்பருவத்தை எவ்வாறு வகைப்படுத்த ?
ஆழ்நிலைத் தியானத்தில்
சூழ்நிலை மறந்து
அமிழ்ந்திருந்தது மழலைப் பருவம்.
வயதொத்த சிறார்களுடன்
வஞ்சனையின்றி விளையாடி
வெஞ்சினம் ஏதுமின்றி
மகிழ்ந்திருந்தது பால்யம்.
பள்ளிப் பாடங்களோடு
சிறுகதை, புதினங்களுடன்
இரவும் பகலும் உறவாடித்
துள்ளி ஓடியது முன்-பதின்பருவம்.
இலட்சியக் கனவுகளுடன்,
தன்னுள் தான் தேடலும்
கைகோர்த்துப் பயணித்து
இனிதாகக் கழிந்தது பின்-பதின்பருவம்.
நல்லதொரு பணி பெற்று
சகோதரக் கடமைகள் முடித்து
நட்பு, காதல்,மனைவி, பிள்ளையென
பூரிப்புடன் நிறைந்தது இளமைப் பருவம்.
பொய்யான இலக்குகளோடு,
தன் பலம் தானறியாது ,
சுயம் மறந்து, சுழலும் எந்திரமாய்
உழலும் இப்பருவத்தை எவ்வாறு வகைப்படுத்த ?
13 April 2009
ஆள் - அரவம்
அழகென
நான் வியந்த
படமெடுத்த பாம்பு
மறு நொடி அதன்
உரு காட்ட
இப்பொழுதெல்லாம்
நான் நம்புவதில்லை...
பாம்பையும்
சில மனிதர்களையும் .
-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து
நான் வியந்த
படமெடுத்த பாம்பு
மறு நொடி அதன்
உரு காட்ட
இப்பொழுதெல்லாம்
நான் நம்புவதில்லை...
பாம்பையும்
சில மனிதர்களையும் .
-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து
Subscribe to:
Posts (Atom)




