22 March 2010

தினைத்துணை செய்யும் உதவி ....



" ஏம்மா ....திராட்சை என்ன விலை?..."
" கிலோ அறுபது ரூபா..கால் கிலோ பதினைந்து ரூபா..."
" என்னது...அறுபது ரூபாயா ...போன வாரம் அம்பது ரூபாதானே..."
"விலைவாசி எல்லாம் கூடிப் போச்சும்மா..நான் என்னம்மா செய்யட்டும்..."
" கால் கிலோ பதிமூணு ரூபான்னு கொடு...இல்லைன்னா ஆளை விடு..."
"சரி..சரி..எடுத்துக்கோம்மா..."



சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாய் அமர்ந்து கூவிக் கூவிப் பழம் விற்கும் (பெரும்பாலும் நடுத்தர வயதான) பெண்மணியிடம் மேற்கண்ட உரையாடலை நீங்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும். பல்பொருள் அங்காடிக்குச் சென்று அத்தியாவசியத் தேவைக்கு அடுத்தபடியான பொருட்களை , வில்லை சொன்ன விலையில் வாங்கி வரும் நாம் , உச்சி வெயிலில் உண்ணக் கூட நேரமின்றி (அல்லது உணவின்றி) தொண்டை நீர் வற்ற வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசி நம் பராக்கிரமத்தை நிலை நாட்டுகிறோம்.

இது சார்ந்த எனது ஆற்றாமைகளில் சில.

1. அவளைக் கடந்து போகும் எல்லோரும் பழம் வாங்குவதில்லை.
2. business world, cut throat competition என்றெல்லாம் சொல்கிறோமே , அது நிஜத்தில் நடப்பது அங்கேதான். நூறு அடி தூரத்திற்குள் அவளுக்குப் போட்டியாகப் பத்து பேர். எனவே , அவளிடம் வாங்கும் எல்லோரும் அவள் சொல்லும் விலையில் வாங்குவதில்லை.
3. அப்படியே வாங்கினாலும் நாள் முடிவில் அனைத்துப் பழங்களும் விற்பதில்லை. வெம்பிப் போன பழத்தோடும் , மனதோடும் வீடு திரும்பும் நிலை.
4.அவள் ஒன்றும் திராட்சைத் தோட்டத்திற்கு சொந்தக்காரி இல்லையே ! அடுத்த நாள் வியாபாரம் தொடர , அதிகாலையில் பழங்களை அன்றைய நிலவரப்படி குறிப்பிட்ட விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு வருடம் முன்பு.......
மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் விலை - 9 ரூபாய். (கால் கிலோ)
அவள் விற்கும் விலை - 12 ரூபாய்.
லாபமான 3 ரூபாய் , வெம்பிய மற்றும் அழுகிய பழங்களின் நஷ்டம் போக 2 ரூபாயாகிறது.
வண்டிக் கட்டணம் /பேருந்துக் கட்டணம் போக நிகர லாபம் ஒன்றரை ரூபாயாகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை கால் கிலோ விற்கும் என்று எண்ணி பார்த்து அன்றைய நிகர லாபத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த நிகர லாபத்தில் தான் அவள் தானும் சாப்பிட்டு , குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். சாப்பாடு மட்டும் போதுமா...வீட்டு வாடகை , துணிமணி, பள்ளிக் கட்டணம் , மருத்துவ செலவு , இத்யாதி, இத்யாதிகள்.....கணவன் ஒழுங்காயிருந்தால் போயிற்று , அல்லாமல் குடிகாரனாக இருந்தால் ...அவனையும் சமாளிக்க வேண்டும். இத்தனை துயரத்திலும் அவள் தன்னிடம் இருக்கும் முதல் 9 ரூபாயைத் தொட முடியாது . அடுத்த நாள் கொள்முதல் செய்ய அதுதானே மூலதனம்.

கடந்த ஒரு வருட காலத்தில் , பல காரணங்களால் அனைத்து தரப்பிலும் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
தற்போதைய கொள்முதல் விலை - 12 ரூபாய்.
விற்கும் விலை - 15 ரூபாய்.
அழுகல் போக, ஒரு வருடத்திற்கு முந்தைய அதே லாபமான 2 ரூபாயில் , வண்டிக் கட்டணம் உட்பட, அரிசி, பருப்பு, வாடகை, மற்றும் மருத்துவ செலவு அனைத்தும் ஒன்று விடாமல் உயர்ந்து விட்ட நிலையில் , அவள் தனது ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய நிலை.

சற்றே எண்ணிப் பாருங்கள். வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு பெரும் நம்மில் எத்தனை பேர் இது போன்ற வியாபாரிகளிடம் திருப்தியாகிறோம். விலை சரிதானா.. எடை சரிதானா ...நல்ல பழம் தானா....என ஏகப்பட்ட 'தானா'க்களுடன் தான் நகர்கிறோம். அவர்கள் கேட்பது இந்த வருடத்திற்கான பஞ்சப்படியல்ல நண்பர்களே , பஞ்சம் அவர்கள் வீட்டுப் படி ஏறாமல் இருப்பதைத்தான் . சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்படும் விலையேற்றத்தை சகித்துக் கொள்ளும் நாம் , மானத்தோடு உயிர் வாழும் ஒரே நோக்கில், தங்கள் சக்திக்கு மீறி உழைத்து , உடன் வாழும் பிரஜைகளின் உதவியை ஒவ்வொரு நாளும் மறைமுகமாக நாடும் இவர்களுக்கு செய்யும் உதவி வேறு என்னவாக இருக்க முடியும், பேரம் பேசாமல் வாங்குவதைத் தவிர ?!

13 March 2010

வாழ்வின் நீளம்


                     நூற்றியிருபது கேட்ட
                    கடைக்காரனிடம்
                    நூறு தருவதாகச் சொல்கிறான்
                    வாங்க வந்தவன்...
                    பேரம் படியாமையின் கணங்களில்
                    நீள்கிறது
                    கறிக்கோழி ஒன்றின் வாழ்க்கை!

                     -நாவிஷ் செந்தில்குமார்



09 March 2010

அகவைத் தகவல்



காதோரம் முளை விடும்
சிறு நரையை இள நரையென
எத்தனை நாள் தேற்றுவது?

முன்னந்தலை முடி உதிர்தலை
'மூன்று நாளாய்த்தான் இப்படி' என
எத்தனை நாள் ஏய்ப்பது?

தன் இருப்பை முன்னிறுத்தும்
வயிற்றுத் தொப்பை தனை
அழகுத் தொப்பை என
எத்தனை நாள் ஏமாற்றுவது?

அகவை முதிர்வால் வரும்
முகவாய்க் கதுப்பை
அக அழகின் புற அழகென
எத்தனை நாள் புளுகுவது?

'அண்ணா' என்றழைத்த
சிறு பிள்ளைகள்
'அங்கிள்' என்றழைப்பதை
எத்தனை நாள் மறப்பது?

இத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
'முதுமையின் தொடக்கம்' என்ற
உங்கள் கூற்றை
'இளமையின் உச்சம்' என்று
நான் மறுப்பதை
எப்போதுதான் நிறுத்துவது?

08 March 2010

நாலு அணாவும் நானும்

இணையம் வழி, அலைபேசி வழி என பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய பணப் பரிமாற்றம் , பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பாமரனின் கற்பனைக்கெட்டாத அளவிலேயே இருந்தது.சம்பாதித்த பணத்தைக் கையில் வாங்கித் தொட்டுத் தடவி , பாதுகாத்து செலவழித்த காலத்தில் இருந்த பணத்தின் மதிப்பும் , பணத்தின் மீதான மக்களின் மதிப்பும், இன்றைய கண நேரப் பரிமாற்றத்தில் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.இன்று ,பத்தாயிரம் ரூபாயை, கையில் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்குவதிலும் , வங்கி அட்டையை எடுத்துச் சென்று வாங்குவதிலும் சிறிது வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது .

சரி , விஷயத்திற்கு வருவோம்.ஒரு சிறு குவளை தேநீரின் குறைந்த பட்ச விலை ஐநூறு காசுகளாக உள்ள இன்றைய நிலையில் ,வெறும் இருபத்தைந்து காசுகளுக்கு ஏதாவது ஒன்று விற்கப்படுகிறதா? இல்லையென்பது உங்கள் பதிலாக இருப்பின் ,சமீப காலத்தில் நீங்கள் தபால் அலுவலகம் சென்று யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்று அர்த்தம்.


திருநெல்வேலியில் என் மனைவியின் தூரத்து உறவினர் பொறுப்பேற்று நடத்தும் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை அனுப்பும் பொருட்டு , நவீன வசதிகள் தவிர்த்து , பணவிடை(மணி ஆர்டர்) அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். அவசர வேலைகளுக்கு மத்தியில் தபால் அலுவலகம் செல்ல மதியம் இரண்டு மணியாயிற்று. இதற்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்ற அவ நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகப் பெண் 'என்ன வேண்டும்' என்று சைகையில் கேட்டார்.நான் சொன்னவுடன், ஏதோ பரம விரோதியைப் போல் ஒரு பார்வையை வீசிவிட்டு , 'சீக்கிரம் ஃபார்ம் வாங்கி ஃபில்லப் பண்ணிக் கொடுங்க , நேரமாச்சு ...ஒரு ஃபார்ம் 25 பைசா...சீக்கிரம் கொடுங்க.. ' என்றார்.நான் 'ஙே ' என்று விழித்தேன். 25 பைசாவிற்கு எங்கே போவது...வகுப்பிற்கு வேறு நேரமாகிவிட்டது...பரபரப்பாக பையைத் துழாவி, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.

"சில்லறை இல்லையே , சார் " என்றவர் அவர் காரியத்தில் மும்முரமானார். சுற்றி முற்றிப் பார்த்தேன் . கர்ணனே என் எதிரில் வந்தாலும் இந்த நிலையில் அவரால் எனக்கு உதவ முடியாதென்பது புரிந்தவுடன், " சரி ..நாலு ஃபார்ம் கொடுங்க..." என்றேன். கடினமான சூழ்நிலையை என் சமயோசிதத்தால் வென்று விட்ட பூரிப்பு என் இதழில் புன்னகையானது. அந்தப் பெண்ணோ சிறிதும் சலனமின்றி நான்கு படிவங்களைக் கொடுத்தார். நான்கில் ஒன்றை பூர்த்தி செய்து கொடுத்து , இதர நியமனங்கள் முடிந்த பின் கிளம்பத் தயாரானேன். அப்படியே வந்திருக்க வேண்டும். கிளம்பும் முன் மீதமிருந்த மூன்று படிவங்களைப் பார்த்ததும் 'நம்மிடமிருந்தால் வீணாகிவிடுமே' என்ற எண்ணம் தோன்ற , உடனே அவற்றை எடுத்து நீட்டினேன்.'மறுபடியும் என்னய்யா' என்பது போல் பார்வையை வீசினார். "இது எனக்குத் தேவையிருக்காது... உங்ககிட்ட இருந்தா உபயோகப்படும்... " நான் மிகப் பொறுப்பானவன் என்ற த்வனி என் குரலில் இருந்தது. அதை அந்தப் பெண் ரசிக்கவில்லை.

"இல்ல ...இத நாங்க வாங்க கூடாது...வாங்கினா கணக்கு டேலி (?!) ஆகாது.'
இந்தப் பதிலை எதிர்பாராத நான் மீண்டும் 'ஙே'....

பின் என்ன நினைத்தாரோ, 'அப்ப ஒரு நிமிஷம் இருங்க ...அந்தக் ஃபார்மைக் கொடுங்க ' என்று வாங்கிக் கொண்டவர் கிட்டத்தட்ட மூன்று முழு நிமிடங்கள் தேடி ,மீதி சில்லறையான எழுபத்தைந்து பைசாவைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட நான் ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.வரும் போது எனக்குள் பல கேள்விகள். படிவத்தை இவ்வளவு குறைவான மதிப்பிற்கு தருவதை விட அதை இலவசமாகவே கொடுத்துவிடலாம் அல்லது புழக்கத்தில் இல்லாத 25 பைசாவிற்குப் பதிலாக ஒரு படிவத்தின் விலையை ஒரு ரூபாய் ஆக்கினால் மக்களுக்கும் சுலபம், நஷ்டத்தில் மக்கள் சேவையாற்றும் அஞ்சல் துறைக்கும் வருமானம் . ஒரு வேளை எனக்குத்தான் 25 பைசாவின் உண்மையான மதிப்பு தெரியவில்லையா? அல்லது அந்தப் படிவங்களை அவர் திரும்பப் பெற மறுக்கும் அளவிற்கு அவ்வளவு துல்லியமாக கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படுகின்றனவா?அல்லது அந்தப் பெண் அலுவலர் மட்டும் கடமையை அவ்வளவு கடமையாய் ஆற்றுகிறாரா? எது எப்படியோ ,அன்று எனக்குத் தேவையில்லாத டென்ஷனும் (மன அழுத்தம்?) , சில பல நிமிடங்களின் வீணடிப்பும் செய்த அந்த 25 பைசா இன்னும் என் பணப்பையிலேயே உள்ளது. அந்த மதிப்பிற்கான பொருள் எங்காவது கிடைத்தால் அதை வாங்கியே ஆவது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.உங்களுக்குத் தெரிந்தால் 50 பைசா செலவு செய்து எனக்கு அஞ்சலட்டை அனுப்புங்கள்.