15 December 2012

திரிபுநிலை


உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர்  தாக்குகிறார்களே...நீங்கள்  திருப்பியடிக்க வேண்டாமா ?

தேவையில்லை.

நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம்  கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய்   மாறியே தீருகிறோம்.

பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ்  என்ற உணர்வுகளுக்கு ஆட்ப்படும் போதெல்லாம்  பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.

தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே  திரும்ப வந்தால் ,அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால் அது திரிபுநிலை.

கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக்  குற்றமன்று . குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது.

-வைரமுத்து 

11 December 2012

உற்ற நண்பன்


  • 'தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.
  • ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்...இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.
  • 'மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது' என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றார் தந்தை பெரியார்.
  • ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றார் நெல்சன் மண்டேலா.
  • 'பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்' என நாடு கேட்டபோது 'புத்தகங்கள் வேண்டும்' என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
  • குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவார் சார்லிசாப்ளின்.
  • ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
  • 'ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தார் மகாத்மா.
  • 'விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்' என்று வினவியபோது 'பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது' என பதிலளித்தார் அறிஞர் அண்ணா.
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர் கிங்.
  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது 'எது நூலகத்திற்கு அருகில் உள்ளது' என கேட்டார் டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தார்  பகத்சிங்.

# முகநூலில் காணக் கிடைத்தது

04 December 2012

நான் மகான் அல்ல



மனிதன் எப்போது மகான் ஆகிறான்?

புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன.துய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப் போகிறது. துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும் போது , ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.

பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகி விடுகிறது. 

புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான். 

-வைரமுத்து