23 August 2009

நானும் இரு தேவதைகளும்....




அவர்கள் ....
என் மீது கொண்ட பற்றால்
தங்கள்
சுயம் மறந்தவர்கள்.


என்னைப் பங்கிடும்
பாங்கு தெரியாது
தங்களுக்குள்
பின்னப்படுபவர்கள்.


என் ரணம் ஆற்றுவதிலும்
என்னுள் ரணம் ஏற்றுவதிலும்
வல்லவர்கள்.


நான் எரியும் விளக்கு...
ஒருத்தி என் அகல்.
மற்றவள் என் தழல்.


நான் ஒளிரும் நிலா..
ஒருத்தி என் வானம்.
மற்றவள் என் சூரியன் .


ஒருத்தி
என் உயிர் சுமந்தவள் .
மற்றவள்
என் 'உயிர்' சுமந்தவள்.

ஒருத்தி
என்னைப் பெற்றவள்.
மற்றவள்
என்னைப் 'பெற்றவள்'

-------------------------------------------
note : you can not be a good man to your good mother and your good wife.

07 August 2009

தீராக் கேள்வி- தெளிவான பதில் 3

ஒரு மனிதனின் மிக மோசமான குணம் எது?
கோள் சொல்லுதல். பிறரைப் பற்றி புறம் சொல்லுதல். நேரே இனிமையாகப் பேசிக் கொண்டு , மிக அன்பானவர் போல , நட்பானவர் போல நடித்துக் கொண்டு பின்னால் , வேறு விதமாகப் பேசுகிற குணம் தான் உலகத்திலேயே மிக மிக மோசமானது. பிறரைப் புறம் சொல்லுகிற புத்தி ஒரு சாபம். இந்த சாபம் இன்னும் பல சாபங்களை உருவாக்கும். நீங்கள் எதிரே இனிமையாகப் பேசி பின்னால் புறம் சொல்லுகிறீர்கள் என்பது சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிந்து விட்டால் அவர் வயிறு எரிந்து உங்களை நோகிற போது அது நிச்சயம் பலிக்கும். வாழ்க்கையில் ஒரு போதும் புறம் பேசாதீர்கள். பேச வேண்டியவற்றை முகத்திற்கு நேரே பேசி முறித்துக் கொள்ளுங்கள். இது பல நூறு முறை நல்லது.
ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டுமா? ஆன்மீகமும் ஆத்திகமும் ஒன்றா?
எல்லோரும் இன்புற்று வாழ்வதே ஆன்மிகம். ஆத்தீகம் என்பது மதம் சார்ந்தது. கடவுள் வழிபாடு சார்ந்தது. ஆன்மீகவாதி ஆத்திகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவது நாத்திகனாலும் முடியும். அப்படியிருப்பவர்களை நான் அறிவேன்.
வாழ்க்கையில் இறுதி வரை எந்த சுகமும் அனுபவிக்காமல் சாதாரண பணியில் இருந்து கொண்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வரும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையும், பக்தியும் எப்படி வரும்?
கடவுள் நம்பிக்கை இருந்தால் முயற்சி வரும். முயற்சி இருந்தால் செயல் திறன் வரும் . செயல் திறன் வளர்ந்தால் நல்லதாய் வேறு விதமாக சம்பாதிக்கிற எண்ணமும் , பலமும் வரும்.வெறுமே, திரும்பத் திரும்ப நொந்து கொள்கிறவர்கள் கடைசி வரை நொந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.கடவுள் நம்பிக்கை என்பது தனக்குத் தானே பேசுதல், ஆராய்ந்து அறிதல்.
தியானம் என்பது ஒரு புள்ளியில் அமருவது , அல்ல என்றெல்லாம் கட்டுரை எழுதுகிறார்களே , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
இதைப் பற்றியெல்லாம் படிப்பதை விட நேரடியாய் நல்ல அனுபவஸ்தர்களிடம் அனுபவித்து , முகம் மலர்ந்தவர்களைடம், வாழ்வு மலர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தியானம் பற்றிய கட்டுரைகளைப் படித்து விட்டு குழம்பிப் போகாதீர்கள். தியானம் என்பது மிகுந்த தெளிவோடு அசாத்தியமான அமைதியோடு இருத்தல். ஆனால் இதற்கு மனம் ஒரு நிலைப்படுவது என்ற ஆரம்பப் பயிற்சி முக்கியம். தன்னுடைய மனதை மனத்தால் உற்றுப் பார்ப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை எளிதில் வந்து விடாது. ஒரு நிலைப்பட்ட மனது , ஒரு புள்ளியில் அமருகின்ற மனது , தன் மனதை இடைவிடாது எந்த வித கோபம் , விருப்பு வெறுப்பின்றி உற்றுப் பார்க்கும். சிறுவர்கள் பாதி பெடலில் சைக்கிள் ஒட்டி விட்டு ,பிறகு சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவார்கள். பிறகு வித்தை காட்டுவார்கள். அது போலத்தான் மாநதி ஒரு நிலைப்படுத்தும் ஆழ் நிலைத் தியானமும். ஒரு எல்லைக்குப் பிறகு இதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களோ, கட்டுரைகளோ தேவையில்லை. உங்களுக்கே அடுத்த படிக்கு போக தெரிந்து விடும்.

கேள்வி ஞானம்


நாற்பது வரை
பணத்தை நீ
தேட வேண்டும்.
நாற்பதின் பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்.

சாப்பாட்டு மேசையும்
கட்டிலும்
தொட முடியாத
தூரத்தில்
இருக்கட்டும்.
அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்.

புது மனைவியின்
தாய்மை
புதுத் தொழிலில்
லாபம்
இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே.

பயணமா?
பெட்டியிலும்
வயிற்றிலும்
காலி இடம்
இருக்கட்டும்.

தடுமனா
மருந்து-சாப்பாடு.
காய்ச்சலா
மருந்து-பட்டினி.

பொழுது
மலச் சிக்கல் இல்லாமல்
விடிய வேண்டும்.
மனச் சிக்கல் இல்லாமல்
முடிய வேண்டும்.

- வைரமுத்து

FRIEND மாதிரி......

திருக்குறள் :
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

என் குரல்:
அகநக நட்பது நடக்காது பணியிடம்
முகநக நட்பதே நல்லது.

பொருள்:
பணிபுரியும் இடத்தில
நண்பர்கள் சாத்தியமில்லை.
சாத்தியம் என்றால்
அது சத்தியமில்லை.

நன்றி :
இதை இன்றெனக்கு உணர்த்திய நண்பருக்கு (?!).