26 August 2011

வாழ்வின் உக்கிரம்

கடந்த ஒரே வாரத்தில் , ஒரு மனிதனின் அதீத மகிழ்ச்சியையும் , அவன் அடைந்த அதீத துக்கத்தையும் மிக அருகிலிருந்து கண்டேன். அடைந்த மகிழ்ச்சியும் , துக்கமும் ஒரே விஷயம் தொடர்பானதுதான்.

"என்னது , உன் பையன் ஒண்ணாவதுதான் படிக்கிறானா...ஒரு நாலாவது வகுப்பு படிப்பான்னு நினைச்சேன்... நீ தான் ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டியே , மேடேஸ் ?"

திருமண அழைப்பிதழ் கொடுக்க வீட்டிற்கு வந்த என் நண்பரின் கேள்விக்கு நான் அளித்த பதில் , "இல்ல பாஸ்... நீங்க தான் ரொம்ப லேட்...!"

உடன் பிறந்த தங்கைகள் அனைவருக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வேளையில் நல்ல வரன் அமைந்து , சென்ற வியாழனன்று நடந்தது என் நண்பரின் திருமண விழா . திருமணத்திற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்பினேன். ஒவ்வொரு கணமும் மிகக் குதூகலமாயிருந்தது. மீனாட்சி அம்மன் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருப்பூட்டு முடிந்து , அனைத்து சந்நிதி வழிபாடு முடிந்து, மண்டபத்தில் அனைவரின் வாழ்த்து பெற்று , அனைவரும் ஆசுவாசப்படும் வரை நண்பரின் அருகிலேயே இருந்தேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக தொடர்பில் இல்லையென்றாலும் ,அதற்கு முன்பு மிக அன்னியோன்யமாகப் பழகியிருக்கிறோம். யாருக்கும் தீங்கு எண்ணாத , யார் மனதையும் மறந்தும் புண்படுத்தாத , கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள அவரின் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியதில் எனக்கு பரம சந்தோசம். " பார்த்தியா....லேட்டானாலும், வெயிட்டா செட்டிலாயிட்டாரு...ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னு ப்ரூவாயிடுச்சுப்பா..." .நான்கு நாட்களாக என் மனைவியிடம் எதைப் பற்றிப் பேசினாலும் இதில் வந்துதான் முடிப்பேன்.


புதனன்று அதிகாலை இறங்கியது இடி ஒத்த செய்தி. நண்பரின் மனைவி இறந்து விட்டார். கேட்ட செய்தியைச் செரிக்க இயலாமல் என்னவென்று விசாரித்ததில் , குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்து , பின் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம். நெடு நாட்களாக இருக்கும் இப்பிரச்சினையை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்ததாலும் , தொடர்ந்து எடுத்து வந்த மருந்து மாத்திரைகளை திடீரென்று நிறுத்தியதாலும் வந்த விபரீத விளைவு , அனைவரையும் புரட்டிப் போட்டு விட்டது. " எல்லாமே மின்னல் மாதிரி நடந்து முடிஞ்சு போச்சு " , ஆற்றாமையுடனும் , அவலத்துடனும் , அழுகையும் குமுறலுமாக நண்பர் பேசியது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. ஆறுதல் சொல்லக் கூடிய இழப்பா இது ? பத்து நாள் பசியோடிருப்பவனிடம் அறுசுவை உணவில் ஒரு விள்ளலைக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லி விட்டு , அவன் எதிரிலேயே அதைக் குப்பையில் கொட்டினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் ? நான் அதிகம் பேசாமல் அவர் கையைப் பிடித்து சிறிது நேரம் இருந்து விட்டு எழுந்தேன்.

எழும் போது சொன்னார்... "சாப்பிட்டுப் போ...மேடேஸ் ...."

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை என்னை மீறிப் பீறிட்டது. "உங்களுக்குப் போய் இப்படி நடந்திருச்சே ....." மெதுவாக வார்த்தைகளைப் பிரசவித்தேன்.

மேற்கொண்டு ஏதும் பேச இயலாமல் விடை பெற்றேன்.

இரு தினங்களாக நான் இன்னும் இதிலிருந்து மீள வில்லை. எதைக் கண்டாலும் , யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வருகிறது. வாழ்க்கையின் குரூரம் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் மனச் சுவற்றை அறைந்த வண்ணம் இருக்கின்றன. நான் இயல்பாக இல்லை. தத்துவப் புத்தகங்கள் எத்தனை படித்தாலும் , இத்தகைய பொழுதுகளில் அவை துணை நிற்பதில்லை.

என் நிலை பார்த்து ஒருவர் சொன்னார். " ஏதாவது கோவிலுக்குப் போயிட்டு வாங்க சார்...மனசு நிம்மதியாகும்."

நானும் நினைத்திருக்கிறேன். இந்த வாரம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் , கல்யாண சுந்தரேஸ்வரரிடம் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க .












19 August 2011

தெய்வத் திருமகள்

'தெய்வத் திருமகள்' தொடர்பாக எனக்கும் என் சக ஊழியருக்கும் நடந்த உரையாடல் :
நான் : ரொம்ப நாளாச்சு சார் , இப்படி ஒரு படம் பார்த்து ! நீங்க பார்த்தாச்சா ?
அவர் : கடைசியா சிறுத்தை பார்த்தேன் ...அதை விட சூப்பரா இருக்குமா ?
நான் : இல்ல சார்..இது வேற மாதிரி....படம் முழுக்க கண் கலங்கிப் பார்த்தேன்.
அவர் :ஒ....அழுகைப் படமா ? இப்படித்தான் போன தடவை நீங்க சொன்னீங்கன்னு 'நந்தலாலா' போய்ப் பார்த்தேன்...நல்லாவே இல்ல...
நான் : (அவர் பாஷையிலேயே ) இது அதை விட அழுகைப் படம், சார் ...
அவர் : அப்படின்னா நான் கண்டிப்பா போகல...
நான் : ம்ஹூம்...சோகத்தினால வர்ற அழுகை இல்ல....உணர்ச்சிவசப்பட்டு வர்ற அழுகை...
அவர் : அடப் போங்க சார்...தியேட்டருக்குப் போனோமா , ரெண்டு மணி நேரம் ஜாலியா இருந்தோமான்னு இல்லாம...
நான் : நீங்க போகலேன்னாலும் பரவாயில்லை...நாலு பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துப் பார்க்கச் சொல்லுங்க சார்...இந்த மாதிரி படத்தை எல்லாம் என்கரேஜ் பண்ணனும் ....
அவர்: ஒண்ணு பண்ணுங்களேன்...நீங்களே டிக்கெட் வாங்கிக் கொடுங்க ...நான் வேணா போய் பார்க்கிறேன்.
நான்: எனக்கு இதுவும் வேணும் ...இன்னமும் வேணும்... (அட..மனசுக்குள்ளதாங்க!)

17 August 2011

பசுவின் சிசு

"ஏம்ப்பா....சீக்கிரம் இங்க வாங்களேன் ..."
இன்று அதிகாலை மனைவியின் குரல் கேட்டு பதறியடித்து வெளியே ஓடினேன்.
"இங்க பாருங்க...இதைப் பார்த்தா நாம செஞ்ச பாவமெல்லாம் போயிரும்னு சொல்வாங்க...."
அவள் சுட்டிய இடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு சினைப் பசு கன்று ஈன்று கொண்டிருந்தது. கன்றின் கால் மட்டும் வெளியே தெரிய, ஒருசாயலாக படுத்திருந்த பசுவின் முகம் சலனமற்றும் , சிறு வைராக்கியத்துடனும் இருந்தது. ஒரு உயிரின் ஜனனத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் பதற்றம் மேலிட , எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். சக தோழியின் பிரசவம் போன்று , பெண்களுக்கே உண்டான வாஞ்சையுடன் என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் எல்லாம் சுபமாய் முடிய , புத்தம் புதிய ஜீவன் ஒன்று எங்கள் அனைவரின் முகம் பார்த்தது. சுமை இறக்கிய களிப்புடன் எழுந்த பசு , குட்டியை நாவால் நக்கித் தன் இருப்பைத் தெரியப்படுத்தியது.
இனம் புரியா குதூகலத்துடன் நாங்கள் நகர எத்தனித்த போது , அது வரை படுத்திருந்த கன்று எழுந்து நிற்க முற்பட்டது. உதட்டோரப் புன்னகையுடன் நான் பார்த்துக் கொண்டே நடக்க , சில பல நொடிகளில் எழுந்து நடந்தே விட்டது.
ஆச்சர்யம் மேலோங்க , வீட்டிற்குள் சென்று அன்றைய தினசரியை விரித்தேன். படித்து முடித்தவுடன் ,அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலுமாக வழிந்தோடி விட்டது. பிறந்தவுடன் எழுந்து நடக்கக் கூடிய வரம் மனிதப் பிறவிக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் கல்லூரிக்குக் கிளம்பினேன். தான் பெற்ற சிசுவை , ஆறறிவு உடைய மனிதன் தன் இமை போலக் காப்பான் என்ற படைப்புருவாக்கத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கக் கூடிய, தினசரியில் நான் கண்ட அந்த செய்தி இதுதான்.


'பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.'