20 March 2009

தூணிலும் துரும்பிலும் ....


இன்று ஒரு வேலை நிமித்தமாக திருப்பரங்குன்றம் வரை சென்றிருந்தேன். கசகசக்கும் முன் மாலைப் பொழுது. ஆனால் மனம் ஏனோ ஏகாந்தமாய் இருந்தது. மழை பெய்தாலோ, ஏதேனும் கோவிலில் இருந்தாலோ அல்லது நல்ல திரைப்படம் பார்த்தாலோ இருக்கும் மனநிலை.
சென்ற வேலையை முடித்து விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். வெகு நேரமாகியும் எனக்கான பேருந்து வரவில்லையாதலால் தாகம் வாட்டவே, குளிர் பானம் பருகலாம் என அருகிலிருந்த கடையை நோக்கி நகர்ந்தேன். ஏதோ நெருட , என் பணப் பையைத் திறந்து பார்த்தேன். தோன்றிய எண்ணம் சரிதான், சரியாக பதினைந்து ரூபாய் இருந்தது. பேருந்துக்கு ஐந்து , பானத்துக்கு பத்து .

கடையில் யாரோ யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்கள். விரட்டப்பட்டது ஒரு அழுக்கு பிச்சைக்காரன். ம்ஹூம்..பிச்சைக்காரன் என்று கூட சொல்ல முடியாது. நழுவும் ஆடையை உணர முடியாத , தன்னுணர்வு மரத்த ,மனநிலை பிறழ்ந்த ஒரு வளர்ந்த பிள்ளை. பசிக்கிறது என்று கேட்டிருக்கிறான்.புண்ணியவான்கள் விரட்டியிருக்கிறார்கள். அவனோடு சேர்ந்து ஒரு பெண்மணியும் மோசமான வசவுகளை வாங்கிக் கொண்டிருந்தாள். அவனைப் பெற்றவளாக இருக்கக் கூடும்.
சாப்பிட்டு எத்தனை நேரமாயிற்றோ , அவன் பசி தாள முடியாமல் கீழே கிடந்த பிளாஸ்டிக் கப்பை எடுத்து தின்ன முயற்சித்தான். அவனுக்கு உதவ மனமிருந்தும் , அவன் இழி கோல நிலை காரணமாக நான் தயங்கினேன். அந்த அம்மாள் ஒவ்வொருவரிடமாய் கையேந்தி வந்து கொண்டிருந்தாள். வெறுப்பு கலந்த எதிர்மறைத் தலையாட்டல்களே பிச்சையாய் விழுந்து கொண்டிருக்க, என் முறை வருவதற்காய் காத்திருந்து , அவள் வந்தவுடன் பத்து ரூபாயை எடுத்து வேகமாய் நீட்டினேன். எனக்கு நன்றி கூட சொல்லாமல் (குறைந்த பட்சம் ஒரு பார்வை கூட தராமல்) , அந்த அம்மாள் பக்கத்தில் இருந்த கடைக்குள் நுழைந்து "மூணு புரோட்டா" என்றாள். பாவம், இவளும் சாப்பிட்டு நாளாயிற்று போலிருக்கிறது . ஆனால் என் எண்ணம் பொய் ஆகும் வகையில் , புரோட்டவை வாங்கியவுடன் அவனருகில் சென்று அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

அந்த வினாடி அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் விட ஒரு படி உயர்ந்தவனாக என்னை நானே உருவகித்துக் கொண்டேன். குளிர் பானம் குடிக்கும் வேட்கையைத் தியாகம் செய்து அந்தப் பணத்தை தானம் பண்ணும் எந்தவொரு மனிதனுக்கும் வரும் சிறு கர்வம்தான். அந்த திருப்பரங்குன்றம் முருகன் தான் இவர்களுக்கு உதவ என்னை அனுப்பியதாக ஒரு எண்ணமும் எழுந்தது.

அவன் சாப்பிட்ட வேகம் பார்த்து மலைத்து நின்றேன்.அரைகுறையாக முடித்துவிட்டு கையில் ஊற்றப்பட்ட தண்ணீரை மூச்சு விடாது குடித்தான். கண்கள் சொருகி , அந்த அம்மாவை அவன் பார்த்த பார்வை...அப்பப்பா...ஆயிரம் நன்றிகள் உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு பரிமாறப்பட்ட கணம்.

அவன் சாலையின் எதிர்புறம் கடந்து விட, அந்த அம்மாள் நேரே என்னை நோக்கி வந்து சொன்னதுதான் எனது அன்றைய நாளின் படிப்பினையாயிற்று.
"ரொம்ப நன்றி தம்பி...பாவம் இந்த பையன்...யாருன்னு தெரியலே...பசி தாங்க முடியல...என்கிட்டே பஸ்சுக்கு மட்டும்தான் காசிருக்கு...நல்ல வேளை, நீங்க காசு கொடுத்தீங்க...உங்களுக்கு புண்ணியமாப் போச்சு..." --என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து என் எதிர்வினைக்கு காத்திராமல் நகரத் தொடங்கியவளைக் கேட்டேன்.
"அம்மா...நீங்க எங்கிருந்து வர்றீங்க..?"
"திருமங்கலத்திலிருந்து..."

எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் திருமங்கலத்தில் இருக்க மாட்டாரா என்ன?

15 March 2009

மூலதனம் - இலாபம்

எங்கள் குடும்பத் தொழில் விவசாயம். ஒரு அறுவடையின் போது , அறுத்துக் கட்டும் வயலில் , வழக்கத்துக்கு அதிகமாக நெல்மணிகள் உதிர்ந்திருந்தன. சடையாரி என்னும் நெல்லினம். சற்று அதிகமாகவே உதிரும்.
அப்பாவிடம் கேட்டேன், "வயலில் உதிர்ந்து போகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம் தானே!" அப்பா சொன்னார் , " அப்படி இல்ல மக்கா ! இந்த மண்ணு நமக்கு சொந்தமில்ல. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தர்றதில்ல. இந்த உலகத்திலே நம்மளைப் போல காக்கா, குருவி, தவளை, நண்டு,நத்தை,விட்டிலு, தட்டான் ,பூச்சிங்கன்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த விளைச்சல்ல அதுகளுக்கும் பங்கு குடுக்கணும்.நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது."

-நாஞ்சில் நாடன்
நன்றி : ஆனந்த விகடன்

14 March 2009

மனசு

வேண்டியது வேண்டி
வேண்டியது கிட்டிய பின்
வேண்டியது வேண்டா
மனது.

- கனிமொழி

PRAYER IS ANSWERED

I asked for strength
And God gave me difficulties to make me strong.
I asked for wisdom
And God gave me problems to solve.
I asked for courage
And God gave me dangers to overcome.
I asked for love
And God gave me troubled people to help.
I asked for favours
And God gave me oppotunities.
I recieved nothing I wanted
And God gave everything I needed.

13 March 2009

எங்கே கடவுள் ???


நேற்று என் பிள்ளைக்கு தடுப்பூசி இடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.குழந்தைகளுக்கான மருத்துவமனை என்பதால் வாயிலுக்கு வெளியே சிறு ராட்டினம் , சறுக்கு விளையாட்டு போன்றவை பராமரிக்கப்பட்டிருந்தன.சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.விரக்தியுடனும் , திணிக்கப்பட்ட சோகத்துடனும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.நானும் என் பிள்ளையும் அந்தச் சூழலில் கலந்தோம்.எனது கையால் சுற்றி விடப்பட்ட ராட்டினத்தில் புவன் உலகத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.

குழந்தைகளின் உலகம் கட்டுக்கடங்கா சந்தோஷமயமானது.பார்க்கும் எல்லா ஜீவன்களிடத்தும் மற்றும் ஜீவன் அல்லாதவைகளிடத்தும் மகிழ்ச்சியை மட்டுமே தருவித்துக் கொள்ளும் பாக்கியவான்கள் அவர்கள்.இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள். பொங்கி வரும் ஆற்றலைக் கட்டுப்படுத்தாது அதன் பிரவாகத்தில் தங்களை அறியாமலேயே மூழ்கியிருப்பவர்கள்.

நான் உண்மையிலேயே வாழ்ந்த நாட்கள் எத்தனை என்று கேட்டால் ,கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் என்பேன். முதல் பதின்மூன்று ஆண்டுகள்.

'அப்பா... எனக்கு அந்த மாதிரி பலூன் வாங்கி தர்றீங்களா...'- என் சட்டையைப் பிடித்து என் கவனம் கலைத்தான் புவன்.
'வீட்டுக்கு போறப்ப கண்டிப்பா வாங்கலாம்...' - சமாதானப்படுத்தினேன். அடம் பிடித்து அழத் தொடங்கியவனை தேற்றும் விதமாக வழக்கம் போல் வாக்குறுதிகளை வழங்கத் தயாரானேன்.

அது சமயம், திடீரென ஓர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி, நின்றிருந்த அனைவரும் திரும்பினோம். மருத்துவமனையின் வாயில் படியருகே நிலை தடுமாறி விழுந்து , எழ எத்தனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் பன்னிரண்டு வயதிற்கு மேலிராது.பூஞ்சையான தேகமும், கலைந்த கேசமுமாக, அவளைப் பார்த்த உடனேயே எனக்குள் சோகம் அப்பிக் கொண்டது. அருகிலிருந்தவர்கள் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்தினார்கள்.
" பாத்து வரக் கூடாதாம்மா...? கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தா அந்தக் கம்பியில முட்டியிருப்ப...." - சொல்லிக் கொண்டிருந்த பெரியவரின் கைகளைத் தட்டுத் தடுமாறிப் பற்ற முயன்ற போதுதான் அந்தப் பெண்ணை உற்று நோக்கினேன். பார்வையற்றவள். ஒரு கணம் உறைந்து மீண்டேன். என் பிள்ளையின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

அவர்கள் எங்களை நோக்கி வந்து அருகிலிருந்த திண்டில் அமர்ந்தார்கள். பெரியவரிடம் ஏதோ சொன்னவளின் பிசிறிய குரலில் , அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை சிதறியது. எனக்கு எதிர்புறமிருந்த ஒரு பெண்மணி அருகிலிருந்த அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு இந்தச் சிறுமியைப் பற்றி இருப்பதாகத் தோன்ற , சற்று என் காது கொடுத்தேன்.

"பாவம் இந்த புள்ள...சாயந்திரம் பொழுது இருட்டிச்சின்னா கண்ணு தெரியாத போயிரும்...இந்த வாரம் முழுக்க இங்கனயே தான் கிடக்கா...இவுக அம்மைக்கு ஏதோ உடம்புக்குன்னு வந்தா...இன்னும் சரியாகல போல ..."

எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. மாலைக் கண் நோய் சிரமம் தான் என்றாலும் ,முழுக்க பார்வையற்றிருப்பதை விட இது மேல். எனக்கு கிடைத்த ஆறுதல் வெகு நேரம் நீடிக்க வில்லை. அவர்களின் உரையாடல் முடிவில் என் மனம் கனத்து ,அன்று புவனுக்கு ஊசி போடாமலேயே திரும்பிச் சென்றேன்.

" அவங்க அப்பனாவது இது கூடவே இருக்கலாம்லே..."

"நல்ல கேட்ட போ....அவ அப்பன் , ஆத்தா ரெண்டு பேருக்குமே கண்ணு தெரியாது...அவங்களையே இந்தக் குட்டி தான் 'பாத்துக்கறா'...