13 March 2009

எங்கே கடவுள் ???


நேற்று என் பிள்ளைக்கு தடுப்பூசி இடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.குழந்தைகளுக்கான மருத்துவமனை என்பதால் வாயிலுக்கு வெளியே சிறு ராட்டினம் , சறுக்கு விளையாட்டு போன்றவை பராமரிக்கப்பட்டிருந்தன.சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.விரக்தியுடனும் , திணிக்கப்பட்ட சோகத்துடனும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.நானும் என் பிள்ளையும் அந்தச் சூழலில் கலந்தோம்.எனது கையால் சுற்றி விடப்பட்ட ராட்டினத்தில் புவன் உலகத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.

குழந்தைகளின் உலகம் கட்டுக்கடங்கா சந்தோஷமயமானது.பார்க்கும் எல்லா ஜீவன்களிடத்தும் மற்றும் ஜீவன் அல்லாதவைகளிடத்தும் மகிழ்ச்சியை மட்டுமே தருவித்துக் கொள்ளும் பாக்கியவான்கள் அவர்கள்.இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள். பொங்கி வரும் ஆற்றலைக் கட்டுப்படுத்தாது அதன் பிரவாகத்தில் தங்களை அறியாமலேயே மூழ்கியிருப்பவர்கள்.

நான் உண்மையிலேயே வாழ்ந்த நாட்கள் எத்தனை என்று கேட்டால் ,கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் என்பேன். முதல் பதின்மூன்று ஆண்டுகள்.

'அப்பா... எனக்கு அந்த மாதிரி பலூன் வாங்கி தர்றீங்களா...'- என் சட்டையைப் பிடித்து என் கவனம் கலைத்தான் புவன்.
'வீட்டுக்கு போறப்ப கண்டிப்பா வாங்கலாம்...' - சமாதானப்படுத்தினேன். அடம் பிடித்து அழத் தொடங்கியவனை தேற்றும் விதமாக வழக்கம் போல் வாக்குறுதிகளை வழங்கத் தயாரானேன்.

அது சமயம், திடீரென ஓர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி, நின்றிருந்த அனைவரும் திரும்பினோம். மருத்துவமனையின் வாயில் படியருகே நிலை தடுமாறி விழுந்து , எழ எத்தனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் பன்னிரண்டு வயதிற்கு மேலிராது.பூஞ்சையான தேகமும், கலைந்த கேசமுமாக, அவளைப் பார்த்த உடனேயே எனக்குள் சோகம் அப்பிக் கொண்டது. அருகிலிருந்தவர்கள் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்தினார்கள்.
" பாத்து வரக் கூடாதாம்மா...? கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தா அந்தக் கம்பியில முட்டியிருப்ப...." - சொல்லிக் கொண்டிருந்த பெரியவரின் கைகளைத் தட்டுத் தடுமாறிப் பற்ற முயன்ற போதுதான் அந்தப் பெண்ணை உற்று நோக்கினேன். பார்வையற்றவள். ஒரு கணம் உறைந்து மீண்டேன். என் பிள்ளையின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

அவர்கள் எங்களை நோக்கி வந்து அருகிலிருந்த திண்டில் அமர்ந்தார்கள். பெரியவரிடம் ஏதோ சொன்னவளின் பிசிறிய குரலில் , அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை சிதறியது. எனக்கு எதிர்புறமிருந்த ஒரு பெண்மணி அருகிலிருந்த அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு இந்தச் சிறுமியைப் பற்றி இருப்பதாகத் தோன்ற , சற்று என் காது கொடுத்தேன்.

"பாவம் இந்த புள்ள...சாயந்திரம் பொழுது இருட்டிச்சின்னா கண்ணு தெரியாத போயிரும்...இந்த வாரம் முழுக்க இங்கனயே தான் கிடக்கா...இவுக அம்மைக்கு ஏதோ உடம்புக்குன்னு வந்தா...இன்னும் சரியாகல போல ..."

எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. மாலைக் கண் நோய் சிரமம் தான் என்றாலும் ,முழுக்க பார்வையற்றிருப்பதை விட இது மேல். எனக்கு கிடைத்த ஆறுதல் வெகு நேரம் நீடிக்க வில்லை. அவர்களின் உரையாடல் முடிவில் என் மனம் கனத்து ,அன்று புவனுக்கு ஊசி போடாமலேயே திரும்பிச் சென்றேன்.

" அவங்க அப்பனாவது இது கூடவே இருக்கலாம்லே..."

"நல்ல கேட்ட போ....அவ அப்பன் , ஆத்தா ரெண்டு பேருக்குமே கண்ணு தெரியாது...அவங்களையே இந்தக் குட்டி தான் 'பாத்துக்கறா'...

5 comments: