22 October 2012

விடாது நெருப்பு




'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்பதாக நடக்கிறவர்களை விட , 'தான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம்என்று  நினைப்பவர்கள் அதிகம் போற்றப்பட வேண்டியவர்கள் என்பது என் எண்ணம். தான் ரசித்து மகிழ்ந்த  திரைப்படத்தை பிறருக்கு பரிந்துரைப்பது நல்ல குணம் என்றாலும்தான் கீழே விழக் காரணமாயிருந்த பள்ளத்தில்  பிறர் விழுந்து விடாத வண்ணம் குச்சியை ஊன்றிவிட்டுச் செல்வது அதை விட மேலான குணம்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை , அவற்றைக் கடைபிடிக்கும் வழிமுறைகளோடு, சுவாரசியமான கதைப் போக்கினூடாக நமக்குக் கற்றுக் கொடுத்தது போலவேவாழ்வின் முற்பகுதியில் தான் இழைத்த ஒரு தவறு, எவ்வாறு தன் வாழ்வின் பிற்பகுதியைச் சின்னாபின்னமாகச் சிதைத்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக  நம் முன் வைக்கிறார். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள கட்டுரையைப் படியுங்கள்இந்தக் கட்டுரைப் பொருளுக்கும்உங்களுக்கு சம்பந்தம் இருக்கும் பட்சத்தில்யார் கண்டது...இந்த நாள் உங்கள் அந்திம காலத்தின் தினசரி வாழ்க்கைப் போக்கை செம்மைப்படுத்தக்கூடிய நாளாக அமையக்கூடிய வாய்ப்பிருக்கிறது


19 October 2012

இறுதிச் சுற்று


கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது  சொல்வாள்
நான்  எழுத்தாளராகி விடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப் போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக்  கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்படக் கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியனின் மனைவியாகிவிட்டாள் .


- சூ .ஜூலியட் மரியலில்லி 

16 October 2012

சுக போஜனம்



கலியுகத்தின் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது வாழ , நாம் சாப்பிடும் பொருட்களை மட்டுமல்ல , (நாம் மறந்து போன) சாப்பிடும் முறையையும் புனரமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சாப்பிடும் போது குறைந்த பட்சம் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து வந்தால்நோய் எதுவும் நம்மைப் பீடிக்காது என்பது திண்ணம். 'இதெல்லாம் சும்மாஎன்று சொல்லி அலட்சியப்படுத்துவீர்களேயானால் , சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்று அர்த்தம்.

உணவு உண்ணும் முறை
1)குளித்தவுடன் தவிர்த்தல்
2)கை,கால்,முகம் கழுவுதல்
3)காலை மடக்கி அமருதல்
4)உணவில் அறுசுவை
5)முதலில் இனிப்பு
6)சாப்பாட்டில் கவனம்
7)வாய் மூடி மெல்லுதல்
8)எச்சில் கலத்தல்
9)பற்களால் அரைத்தல்
10)ரசித்து ருசித்தல்
11)சுவை திகட்ட உண்ணுதல்
12)சுவை அற்று விழுங்கல்
13)பேச்சைத் தவிர்த்தல்
14)தண்ணீரைத் தவிர்த்தல்
15)தொலைக்காட்சி தவிர்த்தல்
16)புத்தகம் தவிர்த்தல்

12 October 2012

மின்சார கனவு



தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களையும் ,  தீர்வு முறைகளையும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பைச்  சேர்ந்த  திரு.கோவை. சா.காந்தி அவர்கள் முன்வைக்கிறார். 


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.  இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்ற
ு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது. 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். 

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். 

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். 

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது. 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. 

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. 
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை. 

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. 

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது. 

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. 
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும். 

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். 
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும். 
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன. 
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்
கோவை. சா.காந்தி, 
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
9 அக்டோபர் 2012

03 October 2012

நிலாப் பேச்சு



அப்போது, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த சமயம். தெருவே இருளில் தொலைந்திருக்க, எங்கள் வீடு மட்டும் வெளிச்சமாயிருக்கும்.(உபயம்:மின்கலம்) .கூடவே பெருந்தன்மையாய் முற்றத்து விளக்கும் எரியும். படிப்படியாய் அனைத்தும் மின்கல வீடுகளாகி விட, எங்கள் பகுதியே மின் தடையின் சுவடு தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் சேமிக்கக் கூட இயலாத வகையில் மின்வரத்து அருகிப் போயிருக்கும் இந்த சூழ்நிலையில் நிலைமை தலைகீழ். தண்டச்சோறு பட்டம் வாங்கும் விடலைப் பையன் போல், வீட்டில் மின்கலம் இருந்தும் இல்லாத நிலை. இரவானால் 'தெருவே' தெருவுக்கு வந்து விடுகிறது.

ஆனாலும்,'சூரியன்' திரைப்படத்தில் அண்ணன் கவுண்டமணி சொல்வது போல் துன்பத்திலும் ஒரு இன்பமாக , மின்வாரிய அட்டகாசங்களின் பக்க-நல்விளைவாய் எங்களுக்குக் கிடைத்தது மொட்டை மாடி வாசம். சமீப காலமாக , நிலவு எங்களுக்கு இரவு விளக்காகியிருக்கிறது. நட்சத்திரங்கள் மினுமினுத்து எங்களுடன் பேசுகின்றன.( 'அவை நம்மிடம் என்ன பேசுகின்றன' என்பது புவன் அடிக்கடி கேட்கும் கேள்வி!). காகங்களும் புறாக்களும் எங்களுக்கு காலை வணக்கம் சொல்கின்றன. இரவு முன்பை விட அழகாயிருக்கிறது. ஆம்..கடந்த சில நாட்களாக எங்களது படுக்கை மொட்டை மாடியின் திறந்த வெளியில்தான்.

முன்பெல்லாம் இரவு 9 மணிக்கு சாப்பட்டுக் கடை முடித்து 10 மணிக்கு உறங்கச் செல்வதென்பது அன்றைய சலித்த பகல் பொழுதின் முடிவாக இருந்தது; தற்போதுஇனிய இரவின் துவக்கமாக இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் இரண்டு முறை தண்ணீர் தெளிப்பது , படுக்கை, தலையணை, கொசுவலை போன்ற ,மாடியில் படுப்பதற்கான தினசரி ஆயத்தங்களை செய்யும் பொறுப்பு என்னுடையது.இவற்றை செய்து முடித்தமரும் போது உடலில் பூக்கும் வியர்வைத் துளிகள்  குளிர் தென்றலின் விசிறலில் மறையும் சுகம் ,குளிரூட்டப்பட்ட அறையில் இதுவரை வாய்த்ததில்லை.நாள் முழுவதும் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தத் தருணங்களில் கிடைக்கும் அவர்களின் அருகாமை மிகத் தனித்துவமாக இருக்கிறது. என் பிள்ளைகள் இத்தனை அழகா ! பேச்சில் இத்தனை மழலையா! அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவித்துவம் தெறிக்கிறது. அல்லது இப்போதுதான் நான் கவனிக்கிறேன். 

முன்பெல்லாம் அறையில் தூங்கும் போது, நான் சொல்லும் கதையை அசுவாரஸ்யமாகக்  கேட்பவர்கள், தற்போது  அவர்களே உற்சாகமாகக் கதை சொல்கிறார்கள். இதுவரை எதிர் கொண்ட சம்பவங்களும், எதிர்ப்பட்ட  மனிதர்களும் அவர்களின்   உலகில் ஏற்படுத்தியுள்ள  தாக்கத்தை , அவர்கள் சொல்லும்  கதைகள் பிரதிபலிக்கின்றன. நாம் எப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை  நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடமாகவே  அந்தக் கதைகளை நான் கேட்கிறேன்.  கடவுளே , எத்தனை  நாள் இவர்களைத் தவற விட்டிருக்கிறேன் !!! 

பேச்சலை  முடிந்து  , பிள்ளைகள்  கண்ணயர்ந்தவுடன்  நிலவும் நிசப்தம் மனதில் விவரிக்க இயலாத மகிழ்ச்சியைத் ததும்பி வழியச் செய்யும். அந்த மனநிலையோடு  அலைபேசியில் பண்பலையைத்  திருகினால் ' நீங்க-நான்-ராஜா சார் ' என்றொரு  நிகழ்ச்சி ! இனிக்க இனிக்க இசைஞானியின் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். ஜக்கியிலிருந்து ஓஷோ வரை, சூஃபியிலிருந்து ஜென் வரை போதிக்கும் 'இந்தக் கணத்தில் வாழ்' என்பது அந்தக் கணத்தில் சாத்தியமாகும். ரம்மியமான இரவும், பசியாறிய வயிறும், நுரையீரல் ததும்ப இதமான காற்றும், ஒளி காயும் நிலவும்,  மினுமினுக்கும் விண்மீன்களும், அனைத்திற்கும் மேலாக உயிர் தொடும் ராஜாவின் இசையும் கடவுளின் அருகாமையில் என்னைக் கொண்டு நிறுத்தும். சமயங்களில் என் உடல் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இதற்கு மேல் இந்த சுகத்தை வார்த்தைப்படுத்த முடியவில்லை.

மாடியில் படுப்பதால் விளையும் மற்றொரு நன்மை , அதிகாலை விழிப்பு . மெலிதாகப் பொழியும் காலைப் பனியும், இரை தேடும் பறவைகளின் சுப்ரபாதமும், வெளிச்சம் வருவதற்கு  முன்னமே  நமக்கு விழிப்பைத் தரும். மெதுவாகக் கண் விழிக்கும் போது , புலரும் அன்றைய பொழுது  நமக்கு அளிக்கப்பட்ட பரிசாகவே தோன்றும். சூரியக் கிரணங்கள் நம் மீது படரத் தொடங்க, முந்தைய இரவு எங்களோடு கதைத்துக் கொண்டிருந்த நிலவும், நட்சத்திரங்களும் கையசைத்து விடை பெறும்.

இன்று காலை படுக்கையை சுருட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் புவன் கேட்டான். " அதுங்க எல்லாம் நம்ம கூட என்னப்பா பேசியிருக்கும்?"
 நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் அவை பேசியிருந்தால் இதைத் தான் சொல்லியிருக்கக் கூடும்.

 " உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது !"