30 October 2011

இவற்றுக்காகவாவது...


நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி...

என் மூச்சு தொடும்
நமது அறைக் காற்று
நீயின்றித் தவித்து
பெருமூச்சு விடும்.

உடல் துடைத்த கைத்துண்டின்
ஈரம் படிந்த அணைத்தலை
இன்று இழந்த ஏக்கத்தில்
கிரீச்சிடும் கட்டில் முனை.

அறை விளக்கற்ற அரை வெளிச்சத்தில்
கிடைக்கும் உன் விரல் ஸ்பரிசம்
இன்றில்லை யென சுவர் ஏங்கும்.

உன் முக அழுத்தம் பிரிந்தறியா
தலையணை யிரண்டும்
கண்ணீர் விட்டுக் கனத்துப் போகும்.

உன்னைப் பிரிந்த அரற்றலை
அலாரம் வைக்காமலேயே
அலறிக் காட்டும் கடிகாரம்.

அறையோடு சேர்ந்து
பிறை போலத் தேயும்
என் மனதும்.

நானில்லா நாட்களின்
உனதான தவிப்பை
நினைந்து நினைந்து
இவற்றோடு நானும்
புலம்பிக் கொண்டதால்
நேற்றைய இரவு
மிக நீண்டதானது
உன் இருப்பின்றி....

வந்து விடேன் சகியே...
எனக்காக இல்லையெனினும்
இவற்றுக்காகவாவது.

20 October 2011

சூப்பர் சிங்கர் ஜூனியர்


அடுத்த வதை ஆரம்பமாகி விட்டது. வதைக்கான கூடமும், வதைபடப் போகும் ஜீவன்களும் தயார். நாட்டாமைகளும் கோட் சூட் சகிதம் வந்து விட்டார்கள்.


பயிற்சி என்ற பெயரால் உடல் வருத்தமும் , விமர்சனம் என்ற பெயரால் மன அழுத்தமும் பெற்று துயரப்பட போகும் இந்த ஜீவன்களை ஈன்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றுகிறது.
'ஏம்ப்பா (சற்று காரம் கூட்டி 'ஏண்டா' என்றும் விளிக்கலாம்)...தங்கறதுக்கு இடமும் , திங்கறதுக்கு சோறும் கொடுத்துட்டா ஒரு ஜீவனை, அதாம்ப்பா.... நீ பெத்த பிள்ளையை எப்படி வேணும்னாலும் கொடுமைப்படுத்துவியா ? பிள்ளைகளுக்கு அந்தந்த வயசுக்கு உண்டான சுதந்திரத்தையும் , சந்தோசத்தையும் கொடுங்கப்பா...'

Red Cross, Blue Cross மாதிரி இந்த சிறார்களைக் காக்க ஏதாவது ஒரு அமைப்பை சீக்கிரம் தொடங்கினால் தேவலாம்.

13 October 2011

சம்சார சாகரம்

மனைவியின் அன்புத் தொல்லை.
உறவினரின் உரிமைத் தொல்லை.
செல்வங்கள் தான் என்றாலும்
பிள்ளைகள் தொல்லையோ தொல்லை.

நம் நேரம் நமதில்லை.
கண நேரம் ஓய்வில்லை
புறம் செல்ல வழியில்லை.
புறம் கூற இடமில்லை.

அச்சிறைப்பட்டோர் என்றேனும் மீள்வர்.
இச்சிறைப்பட்டோர் மாளாது மாள்வர்.
அச்சாகரம் கரை சேர்க்கும்.
இச்சாகரம் நுரை தள்ளும்.

ஆத்திகன் நாத்திகனாவான்.
நாத்திகன் ஆத்திகனாவான்.
சத்தம் சமாதானம் பேசும்.
சாத்வீகம் சண்டை போடும்.

ஏற்க நேரும் பாத்திரம் சில.
தோற்க நேரும் பாத்திரம் சில.
இல்லறத்தில் கவலைகள் பல
எனினும்
பிரம்மச்சரியத்தில் மகிழ்ச்சியே இல !