09 June 2010

ஐந்து நிமிடமும் ஆறாம் பக்கமும்...



கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மட்டும் மதுரை - தேனி சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் இருபது பேர் இறந்து போனார்கள். இந்தச் செய்தி எனக்கு நெருக்கமானதற்கு காரணம் , அந்த நாட்களில் அதே சாலையில் நானும் பயணம் செய்து தேனி போய் வந்ததுதான். சென்ற வேலை முடிந்து ,சனியன்று இரவு குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்தேன். இதற்கான காரணம் பதிவின் இறுதியில்......

முன்பெல்லாம் விபத்து பற்றிய செய்திகள் குடி தண்ணீர் லாரியின் வருகை போல் எப்போதாவதுதான் தென்படும். அவைகளில் பெரும்பாலானவற்றிற்கு குடி தண்ணீர் லாரிகள் தான் காரணகர்த்தாவாகவும் இருக்கும். ஆனால் தற்போது செய்தித்தாளின் ஆறாவது பக்கத்தை விபத்துச் செய்திகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்கள்.மேலும் அனைத்து ரக வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன. விதம் விதமான விபத்துகளில் , கொத்துக் கொத்தாய் மனிதர்கள் மரித்துப் போகும் அவலத்தை தினசரி பத்திரிகையில் காணும் போது , வாகனங்களில் வெளியே சென்று வீடு திரும்பும் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றே தோன்றுகிறது.

நான் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மதுரை புறவழிச்சாலையில் (?!) போக்குவரத்து விதிகளை யாரும் துளியும் மதிப்பதில்லை. எந்நேரமும் வாகனங்கள் ஒன்றையொன்று முத்தமிடக் கூடிய சாத்தியம் அதிகம். கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் விழிப்போடு செல்ல வேண்டிய நிலை.முதல் நூறு , நாம் மற்றவர்களை இடித்து விடாமல் இருக்க. இரண்டாவது நூறு , மற்றவர்கள் நம் மீது.

கண்ணெதிரே நடந்தேறும் விபத்துக்களை கண்டாலும் , நாமெல்லாம் விபத்துக்கு விதி விலக்கு என்பதான மனநிலையும், அதீத வேகமும் , தேவையற்ற கவனச் சிதறல்களுமே , அதுவரை பார்வையாளராக இருந்தவரை பாதிப்புக்குள்ளானவராக்குகிறது.

தேவைகளும் , வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் , ஓரளவே வாகனம் ஓட்டக் கற்றுத் தெளிந்த நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் கூட நான்கு சக்கர வாகனங்களை உபயோகிக்கும் நிலையில், விபத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது தான் நிதர்சனம்.ஆகவே, எனக்கெல்லாம் ஒன்றும் நடக்காது என்ற மனோபாவம் மாறி , காலனின் கண் பார்வையில் தான் நித்தமும் பயணம் செய்கிறோம் என்ற தன் பயம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அடுத்ததாக , அதீத வேகம். ஒவ்வொரு மணித்துளியும் money துளிகளாய் கருதப்படும் இன்று, எதிலும் வேகம் என்பதும் தவிர்க்க முடியாதது.இருந்தாலும், சரியான திட்டமிடல்களால் இதனை சமன் செய்ய முடியும்.என் வீட்டிலிருந்து 8.30 க்கு கிளம்பினால் மிக நிதானமாக கல்லூரிக்கு வர முடியும் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் 8.40 க்கு முன்பாக என்னால் புறப்பட முடிய வில்லை.முதலில் கூறிய 'எனக்கெல்லாம்....' என்ற எண்ணமே இதற்கு காரணம்.எனவே, இப்போதெல்லாம் என்னுடைய கைக் கடிகாரம் பத்து நிமிடங்கள் முன்னதாகவே காட்டும் படி வைத்திருக்கிறேன்.இது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருப்பினும், எனக்கு இது ஒத்து வருகிறது.

மூன்றாவது, கவனச் சிதறல். 'வாகனம் ஓட்டும் போது அலை பேசி அழைத்தால் எடுக்காதீர்கள்; அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்' என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் யாரும் செவி மடுப்பதில்லை. பேசிக் கொண்டே ஓட்டினால் அபராதம் என மிரட்டினாலும் யாரும் அஞ்சுவதாயில்லை.அபராதத்தைச் செலுத்தி விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.நான் போக்குவரத்தின் போது வரும் எந்த ஒரு அழைப்பையும் தவிர்த்து விடுவேன்.(ம்...மனைவியின் அழைப்பு விதி விலக்கு!).

ஆக, நாம் பார்வையாளரா அல்லது பாதிப்படைந்தவரா ? நமக்கு அமைதியான வாழ்க்கையா அல்லது அகால மரணமா?வந்த பின் நொந்து போவதா அல்லது வரும் முன் காத்துக் கொள்வதா?....இந்த கேள்விகளுக்கான பதில் பெரும்பாலான ஆட்டோக்களின் பின்புறத்தில் காணக் கிடைக்கும் அந்த வாசகம் தான். " உன் வாழ்க்கை உன் கையில்".

நிற்க. அன்று நான் குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்ததற்குக் காரணம்,எந்த விபத்துமில்லை, நான் பயணம் செய்த பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர்ச்சியான பாடல்கள்தான். குருவி - 5, வேட்டைக்காரன் - 5, சுறா - 5 , கச்சேரி ஆரம்பம் - 5 .

08 June 2010

பத்து பாத்திரம்

நான் ரசிக்கும் பத்து கதாபாத்திரங்கள்


ஜானி - ஸ்ரீதேவி
கடலோரக் கவிதைகள் - ரேகா
சிந்து பைரவி - சுஹாசினி
அழகன் - பானுப்ரியா
எங்க ஊரு பாட்டுக்காரன் - நிஷாந்தி
கையளவு மனசு - கீதா
இவன் - சௌந்தர்யா
பூ - பார்வதி
அங்காடித் தெரு - அஞ்சலி

மகதீரா - காஜல்

கதாபாத்திரங்கள் என்று பொதுவில் தலைப்பிட்டு விட்டு வெறும் நாயகிகளை மட்டும் பட்டியலிட்டது நெருடுகிறது என்று நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. இதே போல் எனக்குப் பிடித்த பத்து கதாநாயகர்களின் பட்டியலும் இடலாம் தான். ஆனால் , உங்களுக்குப் படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இராது.

04 June 2010

மழை



ஒன்றுமில்லா வெறுமையும் , எல்லாமுமான பூரணமும் ஒரு சேர மனதை ஆக்கிரமிக்கும் ஒரு பெரு மழைப் பொழுது எனக்குக் கிட்டியிருக்கிறது. சிங்கத்தின் பலத்த கர்ஜனையும் துள்ளலுமாய் என் எதிரே மழை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் , மறு கையில் எனக்குப் பிடித்த தமிழ்ப் புதினமுமாய் என் வீட்டு முற்றத்தின் நாற்காலியில் நான். எத்தனை நாளாயிற்று....என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக , பல நேரங்களில் , ஏதேனும் பேருந்து நிலையத்திலோ அல்லது நெடுஞ்சாலையின் ஓரத்திலோ ஒரு வித பாதுகாப்பின்மையுடன் தான் மழையை எதிர் கொள்ள நேர்கிறது. அப்பொழுதெல்லாம் , மழை பற்றிய சக மனிதர்களின் அங்கலாய்ப்புகளுடன் , என் நிலை பற்றிக் கவலையோடிருக்கும் வீட்டினரின் நினைவும் சேர்ந்து ,மழைக்கும் எனக்குமான தொலைவை அதிகப்படுத்தி விடுகின்றன.கடந்த மழை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் , அவை தொடர்பான உணர்வுகளும் எந்நேரமும் அசை போடத் தக்கவை.

அத்தகைய நினைவு தரும் போதத்தில் இருக்கும் இந்நிலையில் , மழை தொடர்பான 'ஆதவன் தீட்சண்யா'வின் எதிர்மறைக் கவிதை மனதை அறுத்துச் செல்கிறது.
--------------------------------------------------
மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா 'ம.......னே'
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
-- ----------------------------------------------------