04 June 2010

மழை



ஒன்றுமில்லா வெறுமையும் , எல்லாமுமான பூரணமும் ஒரு சேர மனதை ஆக்கிரமிக்கும் ஒரு பெரு மழைப் பொழுது எனக்குக் கிட்டியிருக்கிறது. சிங்கத்தின் பலத்த கர்ஜனையும் துள்ளலுமாய் என் எதிரே மழை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் , மறு கையில் எனக்குப் பிடித்த தமிழ்ப் புதினமுமாய் என் வீட்டு முற்றத்தின் நாற்காலியில் நான். எத்தனை நாளாயிற்று....என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக , பல நேரங்களில் , ஏதேனும் பேருந்து நிலையத்திலோ அல்லது நெடுஞ்சாலையின் ஓரத்திலோ ஒரு வித பாதுகாப்பின்மையுடன் தான் மழையை எதிர் கொள்ள நேர்கிறது. அப்பொழுதெல்லாம் , மழை பற்றிய சக மனிதர்களின் அங்கலாய்ப்புகளுடன் , என் நிலை பற்றிக் கவலையோடிருக்கும் வீட்டினரின் நினைவும் சேர்ந்து ,மழைக்கும் எனக்குமான தொலைவை அதிகப்படுத்தி விடுகின்றன.கடந்த மழை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் , அவை தொடர்பான உணர்வுகளும் எந்நேரமும் அசை போடத் தக்கவை.

அத்தகைய நினைவு தரும் போதத்தில் இருக்கும் இந்நிலையில் , மழை தொடர்பான 'ஆதவன் தீட்சண்யா'வின் எதிர்மறைக் கவிதை மனதை அறுத்துச் செல்கிறது.
--------------------------------------------------
மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா 'ம.......னே'
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
-- ----------------------------------------------------







2 comments:

  1. அருமை மேடேஸ்வரன்


    //ஒரு கையில் தேநீர் கோப்பையும் , மறு கையில் எனக்குப் பிடித்த தமிழ்ப் புதினமுமாய் என் வீட்டு முற்றத்தின் நாற்காலியில் நான். எத்தனை நாளாயிற்று....என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.
    //
    மழையை பற்றிய எண்ணங்கள் என்னுள்ளும் உண்டு இதேபோல்

    ReplyDelete
  2. //என்னைப் பொறுத்த வரை நான் இக்கணம் சொர்க்கத்தில் இருக்கிறேன் அல்லது என்னைச் சுற்றி சொர்க்கம் இருக்கிறது.//.... ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க.
    இயற்கையை ரசிக்க தெரிந்தாலே போதுமே.... அதுவும் மழையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு சுற்றிலும் சொர்க்கம்தான்.

    ReplyDelete