09 June 2010

ஐந்து நிமிடமும் ஆறாம் பக்கமும்...



கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மட்டும் மதுரை - தேனி சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் இருபது பேர் இறந்து போனார்கள். இந்தச் செய்தி எனக்கு நெருக்கமானதற்கு காரணம் , அந்த நாட்களில் அதே சாலையில் நானும் பயணம் செய்து தேனி போய் வந்ததுதான். சென்ற வேலை முடிந்து ,சனியன்று இரவு குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்தேன். இதற்கான காரணம் பதிவின் இறுதியில்......

முன்பெல்லாம் விபத்து பற்றிய செய்திகள் குடி தண்ணீர் லாரியின் வருகை போல் எப்போதாவதுதான் தென்படும். அவைகளில் பெரும்பாலானவற்றிற்கு குடி தண்ணீர் லாரிகள் தான் காரணகர்த்தாவாகவும் இருக்கும். ஆனால் தற்போது செய்தித்தாளின் ஆறாவது பக்கத்தை விபத்துச் செய்திகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்கள்.மேலும் அனைத்து ரக வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன. விதம் விதமான விபத்துகளில் , கொத்துக் கொத்தாய் மனிதர்கள் மரித்துப் போகும் அவலத்தை தினசரி பத்திரிகையில் காணும் போது , வாகனங்களில் வெளியே சென்று வீடு திரும்பும் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றே தோன்றுகிறது.

நான் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மதுரை புறவழிச்சாலையில் (?!) போக்குவரத்து விதிகளை யாரும் துளியும் மதிப்பதில்லை. எந்நேரமும் வாகனங்கள் ஒன்றையொன்று முத்தமிடக் கூடிய சாத்தியம் அதிகம். கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் விழிப்போடு செல்ல வேண்டிய நிலை.முதல் நூறு , நாம் மற்றவர்களை இடித்து விடாமல் இருக்க. இரண்டாவது நூறு , மற்றவர்கள் நம் மீது.

கண்ணெதிரே நடந்தேறும் விபத்துக்களை கண்டாலும் , நாமெல்லாம் விபத்துக்கு விதி விலக்கு என்பதான மனநிலையும், அதீத வேகமும் , தேவையற்ற கவனச் சிதறல்களுமே , அதுவரை பார்வையாளராக இருந்தவரை பாதிப்புக்குள்ளானவராக்குகிறது.

தேவைகளும் , வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் , ஓரளவே வாகனம் ஓட்டக் கற்றுத் தெளிந்த நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் கூட நான்கு சக்கர வாகனங்களை உபயோகிக்கும் நிலையில், விபத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது தான் நிதர்சனம்.ஆகவே, எனக்கெல்லாம் ஒன்றும் நடக்காது என்ற மனோபாவம் மாறி , காலனின் கண் பார்வையில் தான் நித்தமும் பயணம் செய்கிறோம் என்ற தன் பயம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அடுத்ததாக , அதீத வேகம். ஒவ்வொரு மணித்துளியும் money துளிகளாய் கருதப்படும் இன்று, எதிலும் வேகம் என்பதும் தவிர்க்க முடியாதது.இருந்தாலும், சரியான திட்டமிடல்களால் இதனை சமன் செய்ய முடியும்.என் வீட்டிலிருந்து 8.30 க்கு கிளம்பினால் மிக நிதானமாக கல்லூரிக்கு வர முடியும் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் 8.40 க்கு முன்பாக என்னால் புறப்பட முடிய வில்லை.முதலில் கூறிய 'எனக்கெல்லாம்....' என்ற எண்ணமே இதற்கு காரணம்.எனவே, இப்போதெல்லாம் என்னுடைய கைக் கடிகாரம் பத்து நிமிடங்கள் முன்னதாகவே காட்டும் படி வைத்திருக்கிறேன்.இது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருப்பினும், எனக்கு இது ஒத்து வருகிறது.

மூன்றாவது, கவனச் சிதறல். 'வாகனம் ஓட்டும் போது அலை பேசி அழைத்தால் எடுக்காதீர்கள்; அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்' என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் யாரும் செவி மடுப்பதில்லை. பேசிக் கொண்டே ஓட்டினால் அபராதம் என மிரட்டினாலும் யாரும் அஞ்சுவதாயில்லை.அபராதத்தைச் செலுத்தி விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.நான் போக்குவரத்தின் போது வரும் எந்த ஒரு அழைப்பையும் தவிர்த்து விடுவேன்.(ம்...மனைவியின் அழைப்பு விதி விலக்கு!).

ஆக, நாம் பார்வையாளரா அல்லது பாதிப்படைந்தவரா ? நமக்கு அமைதியான வாழ்க்கையா அல்லது அகால மரணமா?வந்த பின் நொந்து போவதா அல்லது வரும் முன் காத்துக் கொள்வதா?....இந்த கேள்விகளுக்கான பதில் பெரும்பாலான ஆட்டோக்களின் பின்புறத்தில் காணக் கிடைக்கும் அந்த வாசகம் தான். " உன் வாழ்க்கை உன் கையில்".

நிற்க. அன்று நான் குற்றுயிரும் குலையுயிருமாய் வீடு வந்து சேர்ந்ததற்குக் காரணம்,எந்த விபத்துமில்லை, நான் பயணம் செய்த பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர்ச்சியான பாடல்கள்தான். குருவி - 5, வேட்டைக்காரன் - 5, சுறா - 5 , கச்சேரி ஆரம்பம் - 5 .

2 comments:

  1. மக்களிடையே சமூகப்பொறுப்பு குறைந்து கொண்டு இருக்கிறது. பொதுச்சாலை எல்லோருக்கும் பொதுவானது. அதை உபயோகிப்பவர்கள் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் உபயோகப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்புணர்ச்சி இல்லாத்தால் வரும் வினைகள்தான் இவை.

    ReplyDelete
  2. A forwarded SMS:
    Best Traffic Advertisement of the Year:
    Picture of Lord Ganesha with a saying...
    "Care for your Head, Not Everyone gets a replacement like me...! ok?!!"

    ReplyDelete