28 November 2010

நீ - கர்ப்பிணி

ஜெயிக்கின்ற எல்லோரும் கர்ப்பிணியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்க வேண்டும்.நிறைமாதக் கர்ப்பிணிக்கு தன் கருவின் மீது அபார நம்பிக்கையும் , அதனால் அதன் மீது ஒரு அன்பும் ஏற்படும். தான் சுமக்கின்ற கரு மீது எற்பட்ட அன்பு, தன் மீதும் பரவ, தன்னைத்தானே நேசிக்கின்ற ஒரு ஆத்மாவாக அந்தக் கர்ப்பிணி இருப்பாள். அதே சமயம் தான் சுகப்பிரசவம் அடைய வேண்டுமே என்ற கவலையும் அவளுக்கு இருக்கும்.
கருவின் மீது கொண்ட அன்பால், கவலையால், கர்ப்பிணி அதிர்ந்து நடக்க மாட்டாள். ஆவேசம் கொள்ள மாட்டாள். அப்படிச் செய்ய நஷ்டம் அவளுக்கே.மாறாய், கர்ப்பிணி ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைப்பாள்.
அது போல,
நீ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை,ஏதோ ஒரு விதமாக ஆளாக வேண்டிய விருப்பத்தை, கர்ப்பிணிப் பெண் தாங்குவதைப் போல் தாங்கு. எல்லா நேரமும் , எதைச் செய்தாலும், கர்ப்பிணியின் சிந்தனை கருவிலே இருப்பதைப் போல, உன் உயர்வு குறித்த சிந்தனை உன்னிடம் இடையறாது இருக்க வேண்டும்.ஒரு கவலை போல இருக்க வேண்டும்.
வீண் வம்பிலோ , வழக்கிலோ ஈடுபட விரும்பாது , எங்கேனும் சிக்கினாலும் , நகர்ந்து கொள்கிற கர்ப்பிணியாய் நீ இருக்க வேண்டும்.கர்ப்பிணி ஆவேசமுற்றால் பிரச்சினை கருவுக்குத்தான்.நீ ஆவேசமுற்றால் பிரச்சினை உன் உயர்வுக்குத்தான்.
கர்ப்பிணி தன் கருவினை நேசித்து , அதைத் தாங்கும் தன்னை நேசிப்பது போல, உன் லட்சியத்தையும், உன்னையும் நேசிக்கக் கற்றுக் கொள். உன்னை நேசிப்பது எப்படி வெளியே வரும்? உன் உடையழகில் , உன் நடையழகில் , உன் பேச்சழகில், உன் செயலழகில் வரும்.
குளித்து சுத்தமாக உடுத்திக் கொள்.நிற்பதும் , நடப்பதும், எழுவதும், அமர்வதும் ஆரவாரமில்லாமல் இருக்கட்டும்.அதாவது நீ கர்ப்பிணி.இலட்சியமுள்ளவன்.ஒரு போதும் துள்ளாதே. மக்கு ஆடுகள் தான் காரணமின்றி துள்ளும்.எகிறித் தங்களுக்குள்ளே முட்டிக் கொள்ளும்.ஆடுகள் முட்டிக் கொள்வதைப் போல தமாஷ் உலகத்தில் எதுவுமில்லை.
இதற்குப் பிறகு பேச்சு. மிகப் பணிவாகவும், தெளிவாகவும் பேசு.சின்ன வாக்கியங்களாய் நிதானமாய் பேசு. உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில் , உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, எதிராளிக்கு உன்னைத் தெளிவாகப் புரிய , ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.
நீ குளிக்கிற இடம்,உடை வைத்திருக்கும் பெட்டி, புத்தக அலமாரி, இந்த சூழ்நிலைகளை மிகச் சுத்தமாக வைத்திருப்பது உன் செயலில் நேர்த்தி வர ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
Perfection மிக மிக முக்கியம்.செருப்புக்கு பாலிஷ் போடுவதை , ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதைப் போல் செய். உன் வேலைகளுக்கு இன்னொருவரைக் கட்டளையிடாதே. முழுமையாய், விருப்பமாய், திருத்தமாய் வேலை செய்.விருப்பமாய் வேலை செய்கிற போது , வேலைகள் நிறைய வரும்.வேலைகள் நிறைய சேர்ந்தால் வீண் பேச்சு குறையும். வீண் பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.
ஆனால் வாழ்க்கை அத்தனை சுலபமில்லை. நீ சரியாக இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல பேர் வருவார்கள். தன் வாழ்க்கையைச் சரியாக அமைக்காத தான்தோன்றிகள், திருடர்கள்,பொய்யர்கள் உன்னைக் கவிழ்க்க வருவார்கள்.இப்படிப்பட்டவர்கள் உறவு என்கிற பெயரிலோ, நட்பு என்கிற பெயரிலோ நெருக்கமாய் இருப்பார்கள்.அவர்களிடமிருந்து அப்பால் போக முடியாத சூழ்நிலை இருக்கும்.
தன் தேவையையும்,தன் பலத்தையும் முற்றும் உணர்ந்தவன் இவர்களை அமைதியாகச் சமாளிப்பான். இவர்கள் பக்கமிருந்தும் , இவர்களிடமிருந்து விலகி இருப்பான்.இவர்களோடு பேசிச் சிரித்தாலும், இவர்களோடு ஒட்டாது இருப்பான். சமயம் வரும் போது முழு மூச்சாய் எதிர்ப்பான் .
சண்டை போடுகிற தகப்பன் , ஏமாற்றுகின்ற தமையன்,கட்டிப் போடுகின்ற தாய், சுமக்கச் சொல்கின்ற தங்கை, ஏளனம் செய்கின்ற காதலி, இங்கிதம் இல்லாத நண்பர்கள் என்று உலகத்தில் பல வேதனைகள் உண்டு. மறுக்காதே,ஏற்றுக்கொள்.
இவர்களை விட்டு எங்கும் விலக முடியாது.நீ எங்கு போயினும் இதுபோல் எவரோடும் வாழத்தான் வேண்டும்.உன்னைப் போல் உண்டா என்று அவர்களுக்கு தீனி தூக்கிப் போடு. திணறும் அளவுக்குப் பாராட்டு.ஆனால் மனதிற்குள் விலகியே இரு.உன் வேலைகளைக் கவனித்தபடி இரு.
-எழுத்துச் சித்தரின் 'கற்பூர வசந்தம் ' நாவலிலிருந்து

06 November 2010

பள்ளியெழுச்சி



அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை.

இரவின் மடியில்...

காலையின் மலச் சிக்கலை விட இரவின் மனச் சிக்கல் அபாயமானது. அன்றைய பொழுதின் கசடுகளை வடிகட்டித் தெளிய , படுக்கையில் விழுந்தவுடன் அலைபேசியில் சில பாடல்களைக் கேட்பேன். தூக்கம் வந்து கண்களைச் சுழற்றும்.
அந்தப் பாடல்கள் அதன் வரிசையில் :
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பத்ரகாளி
2. கனாக் காணும் கண்கள் மெல்ல ... அக்னி சாட்சி
3. மனைவி அமைவதெல்லாம் ... மன்மத லீலை
4. உறவுகள் தொடர்கதை ... அவள் அப்படித்தான்
5. அழகே அழகு தேவதை ... ராஜ பார்வை
6. லாலி லாலி லாலி ... சிப்பிக்குள் முத்து
7. தாழம்பூவே வாசம் வீசு ... கை கொடுக்கும் கை
8. தெய்வீக ராகம் ... உல்லாசப் பறவைகள்
9. புத்தம் புது  காலை ... அலைகள் ஓய்வதில்லை
10. என் இனிய பொன் நிலாவே ... மூடுபனி

ஒரு நாளேனும் அந்த எட்டாவது பாடலைக் கடந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்கிறேன். ம்ஹூம், முடிவதேயில்லை.