28 November 2010

நீ - கர்ப்பிணி

ஜெயிக்கின்ற எல்லோரும் கர்ப்பிணியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்க வேண்டும்.நிறைமாதக் கர்ப்பிணிக்கு தன் கருவின் மீது அபார நம்பிக்கையும் , அதனால் அதன் மீது ஒரு அன்பும் ஏற்படும். தான் சுமக்கின்ற கரு மீது எற்பட்ட அன்பு, தன் மீதும் பரவ, தன்னைத்தானே நேசிக்கின்ற ஒரு ஆத்மாவாக அந்தக் கர்ப்பிணி இருப்பாள். அதே சமயம் தான் சுகப்பிரசவம் அடைய வேண்டுமே என்ற கவலையும் அவளுக்கு இருக்கும்.
கருவின் மீது கொண்ட அன்பால், கவலையால், கர்ப்பிணி அதிர்ந்து நடக்க மாட்டாள். ஆவேசம் கொள்ள மாட்டாள். அப்படிச் செய்ய நஷ்டம் அவளுக்கே.மாறாய், கர்ப்பிணி ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைப்பாள்.
அது போல,
நீ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை,ஏதோ ஒரு விதமாக ஆளாக வேண்டிய விருப்பத்தை, கர்ப்பிணிப் பெண் தாங்குவதைப் போல் தாங்கு. எல்லா நேரமும் , எதைச் செய்தாலும், கர்ப்பிணியின் சிந்தனை கருவிலே இருப்பதைப் போல, உன் உயர்வு குறித்த சிந்தனை உன்னிடம் இடையறாது இருக்க வேண்டும்.ஒரு கவலை போல இருக்க வேண்டும்.
வீண் வம்பிலோ , வழக்கிலோ ஈடுபட விரும்பாது , எங்கேனும் சிக்கினாலும் , நகர்ந்து கொள்கிற கர்ப்பிணியாய் நீ இருக்க வேண்டும்.கர்ப்பிணி ஆவேசமுற்றால் பிரச்சினை கருவுக்குத்தான்.நீ ஆவேசமுற்றால் பிரச்சினை உன் உயர்வுக்குத்தான்.
கர்ப்பிணி தன் கருவினை நேசித்து , அதைத் தாங்கும் தன்னை நேசிப்பது போல, உன் லட்சியத்தையும், உன்னையும் நேசிக்கக் கற்றுக் கொள். உன்னை நேசிப்பது எப்படி வெளியே வரும்? உன் உடையழகில் , உன் நடையழகில் , உன் பேச்சழகில், உன் செயலழகில் வரும்.
குளித்து சுத்தமாக உடுத்திக் கொள்.நிற்பதும் , நடப்பதும், எழுவதும், அமர்வதும் ஆரவாரமில்லாமல் இருக்கட்டும்.அதாவது நீ கர்ப்பிணி.இலட்சியமுள்ளவன்.ஒரு போதும் துள்ளாதே. மக்கு ஆடுகள் தான் காரணமின்றி துள்ளும்.எகிறித் தங்களுக்குள்ளே முட்டிக் கொள்ளும்.ஆடுகள் முட்டிக் கொள்வதைப் போல தமாஷ் உலகத்தில் எதுவுமில்லை.
இதற்குப் பிறகு பேச்சு. மிகப் பணிவாகவும், தெளிவாகவும் பேசு.சின்ன வாக்கியங்களாய் நிதானமாய் பேசு. உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில் , உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, எதிராளிக்கு உன்னைத் தெளிவாகப் புரிய , ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.
நீ குளிக்கிற இடம்,உடை வைத்திருக்கும் பெட்டி, புத்தக அலமாரி, இந்த சூழ்நிலைகளை மிகச் சுத்தமாக வைத்திருப்பது உன் செயலில் நேர்த்தி வர ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
Perfection மிக மிக முக்கியம்.செருப்புக்கு பாலிஷ் போடுவதை , ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதைப் போல் செய். உன் வேலைகளுக்கு இன்னொருவரைக் கட்டளையிடாதே. முழுமையாய், விருப்பமாய், திருத்தமாய் வேலை செய்.விருப்பமாய் வேலை செய்கிற போது , வேலைகள் நிறைய வரும்.வேலைகள் நிறைய சேர்ந்தால் வீண் பேச்சு குறையும். வீண் பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.
ஆனால் வாழ்க்கை அத்தனை சுலபமில்லை. நீ சரியாக இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல பேர் வருவார்கள். தன் வாழ்க்கையைச் சரியாக அமைக்காத தான்தோன்றிகள், திருடர்கள்,பொய்யர்கள் உன்னைக் கவிழ்க்க வருவார்கள்.இப்படிப்பட்டவர்கள் உறவு என்கிற பெயரிலோ, நட்பு என்கிற பெயரிலோ நெருக்கமாய் இருப்பார்கள்.அவர்களிடமிருந்து அப்பால் போக முடியாத சூழ்நிலை இருக்கும்.
தன் தேவையையும்,தன் பலத்தையும் முற்றும் உணர்ந்தவன் இவர்களை அமைதியாகச் சமாளிப்பான். இவர்கள் பக்கமிருந்தும் , இவர்களிடமிருந்து விலகி இருப்பான்.இவர்களோடு பேசிச் சிரித்தாலும், இவர்களோடு ஒட்டாது இருப்பான். சமயம் வரும் போது முழு மூச்சாய் எதிர்ப்பான் .
சண்டை போடுகிற தகப்பன் , ஏமாற்றுகின்ற தமையன்,கட்டிப் போடுகின்ற தாய், சுமக்கச் சொல்கின்ற தங்கை, ஏளனம் செய்கின்ற காதலி, இங்கிதம் இல்லாத நண்பர்கள் என்று உலகத்தில் பல வேதனைகள் உண்டு. மறுக்காதே,ஏற்றுக்கொள்.
இவர்களை விட்டு எங்கும் விலக முடியாது.நீ எங்கு போயினும் இதுபோல் எவரோடும் வாழத்தான் வேண்டும்.உன்னைப் போல் உண்டா என்று அவர்களுக்கு தீனி தூக்கிப் போடு. திணறும் அளவுக்குப் பாராட்டு.ஆனால் மனதிற்குள் விலகியே இரு.உன் வேலைகளைக் கவனித்தபடி இரு.
-எழுத்துச் சித்தரின் 'கற்பூர வசந்தம் ' நாவலிலிருந்து

No comments:

Post a Comment