20 September 2012

கடவுளின் தரிசனம்



வாரம் ஒரு முறையாவது  இது போன்று சிரிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லையெனில் , நீங்கள் வாழும் வாழ்க்கை Overhaul செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதெனக்  கொள்ளலாம்.


17 September 2012

சிலுவை சுமக்கும் குழந்தைகள்



நீங்கள் தெருவில் செல்லும் போது ,  நாய் ஒன்றை  ஒருவர் .......யால் குத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.பதைபதைத்துப் போய் அவரிடம் அதற்கான காரணம் கேட்கிறீர்கள். 'நான் செய்வதெல்லாம் அதன் நன்மைக்கே.  அது இனிமையாகக் குரைக்க .......யால் குத்திப்  பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் சொல்கிறார். மேலும் 'அது தன்னுடைய நாய் ,  தான் அதற்கு தினமும் உணவிடுவதால் , அதை  என்ன வேண்டுமானாலும்  செய்யும் உரிமை தனக்குள்ளது  ' என்ற பதிலும்   அவரின் உடல் மொழியில் வெளிப்படுகிறது.

இந்தப் பதிலுக்கான உங்களுடைய மனநிலை அல்லது எதிர்வினை எப்படி இருக்கும் ?

சமீபத்தில், பிரபல தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி ஒன்றைக் கண்ட பின் நானும் அது போன்ற மனநிலையில் தான் இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் வழமையான  பார்வையாளராக நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். பெற்றோரால் பெயரிடப்பட்டு, பெற்றோரால் உணவிடப்பட்டு,பெற்றோரால் பாதுகாக்கப்பட்டு வரும்  ஒரு  சிறுவன், பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ,  தனக்கு அளிக்கப்பட்ட கடும் பயிற்சியை மேற்கொண்டு , ஒரு திரைப் பாடலை  மனமுருகப் பாடிக் காண்பித்து  அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டான். அவனைப் பெற்ற இன்பத்தை அவனைப் பெற்றவர்களும் பெற்று விட்டார்கள். சொல்லவொண்ணா இன்பத்தில் திளைத்த அந்தப் பையனின் தந்தை, அவனுக்குப் பயிற்சி கொடுத்த விதத்தைப் பற்றிப் பெருமிதத்தில் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்   , அந்த நாய்  உரிமையாளரின்  பதிலை ஒத்தே இருந்தன.

'அதெப்படி , ஒரு நாயுடன் ஒரு சிறுவனை ஒப்பிடலாம்' என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது. நாய் நன்றாகச் சாப்பிடும், உற்சாகமாக  விளையாடும்  , ஏகாந்தமாய்த் தூங்கும், தன்  மகிழ்ச்சியையும், தேவையையும் தெரிவிக்கக் குரைக்கும். நாய்க்கு கவலை கிடையாது, மன அழுத்தம் கிடையாது.  'அனாவசியமாய் யாரையும் கடிக்கக் கூடாது ' என்ற  , சமூகத்தில் வாழத்  தேவைப்படும் அடிப்படை அறிவைக்  கற்றுக் கொண்டால் போதும். கிடைப்பதற்கரிய மனிதர்களின் பால்ய காலமும் இப்படித்தானே இருக்க வேண்டும். சமூகத்தில் பண்புடன் வாழத் தேவையான அடிப்படைகளைக் கற்றுத் தரும் கல்வியின் பரிமாணத்தையே பல்வேறு காரணங்களைக் காட்டி மாற்றி அமைத்து விட்டோம். அதுவே நாம் நம்  குழந்தைகளுக்கு இழைக்கும் பெரும் அநீதி. தற்போது, இந்தத் தலைமுறையினர் அதிபுத்திசாலிகள் என்று காரணம் சொல்லி , பாட்டு பாடு , ஆட்டம் போடு என்றெல்லாம் விரட்டிக் கொண்டிருக்கிறோம். விரட்டு என்றால் சாதாரண விரட்டு  கிடையாது. மஞ்சு விரட்டு , மாடு  விரட்டெல்லாம் தோற்று விடும்.

பிற கலைகளைக் கற்றல் என்பது , குழந்தைகளின் விருப்பத்தின் பேரில், அவர்களின் மகிழ்ச்சியை  மேம்படுத்தும்  வரையில் தான் சரி. இது போன்ற கடும் போட்டிகள் எல்லாம் ஊடகங்களின் மாய வலைகளாகவும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பேராசையால் அதில்  சிக்கும் விட்டில் பூச்சிகளாகவுமே எனக்குத் தெரிகிறார்கள்.

அந்தச் சிறுவன் பாடி முடித்ததும் , ' பாருங்க...அந்தக் குழந்தையே அழுகிறான்...அனுபவிச்சுப் பாடியிருக்கான்...' என்று ஒருவர் சொல்கிறார். நான் அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். ' அப்பாடா...தப்பிச்சேன்...' என்பது தான் அவன் கண்களில் கசிந்த கண்ணீராக இருந்தது. இவன் தந்தை வெகுளித்தனமாக வெளியே சொல்லி விட்டார். ஆனால் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் இதில் போட்டியிடும் மற்றவர்களும், இனி வரும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வேட்கையோடு ஆயிரக்கணக்கான குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நெஞ்சம் சுடும் உண்மை.

வாரம் இரண்டு மணி நேரம் புவனேஷ் கூட keyboard வகுப்பிற்கு செல்கிறான். 10000 ரூபாய் செலவழித்து வீட்டிலும் keyboard வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், இவை எல்லாம் பிள்ளையின் விருப்பத்தின் பேரில் , அவனது அக மலர்ச்சிக்காகவே ! ஒரு போதும் அவனைக் கட்டாயப்படுத்துவதில்லை.

இதெல்லாம்  negative mindset என்று ஒற்றை சொல்லில் புறந்தள்ளாமல் எனது ஆதங்கத்தைச் சற்றே சிந்தியுங்கள்.

சமீபத்திய புத்தகத் திருவிழாவின் மாலை நிகழ்வில் , விகடனில் 'வட்டியும் முதலும்' எழுதும் எழுத்தாளர் , நண்பர்  திரு. ராஜூ முருகன் ' ஊடகங்களும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தவுடன் , இந்நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய ஆதங்கத்தைத் தான் முதலில் பகிர்ந்து  கொண்டார்.

நான் மட்டும் சடாரென்று எழுந்து நின்று கை தட்டினேன்.


07 September 2012

உங்களுக்குத் தெரியுமா டீச்சர் ?


                                           
எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம்  சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர் ?

-வீரா