17 August 2011

பசுவின் சிசு

"ஏம்ப்பா....சீக்கிரம் இங்க வாங்களேன் ..."
இன்று அதிகாலை மனைவியின் குரல் கேட்டு பதறியடித்து வெளியே ஓடினேன்.
"இங்க பாருங்க...இதைப் பார்த்தா நாம செஞ்ச பாவமெல்லாம் போயிரும்னு சொல்வாங்க...."
அவள் சுட்டிய இடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு சினைப் பசு கன்று ஈன்று கொண்டிருந்தது. கன்றின் கால் மட்டும் வெளியே தெரிய, ஒருசாயலாக படுத்திருந்த பசுவின் முகம் சலனமற்றும் , சிறு வைராக்கியத்துடனும் இருந்தது. ஒரு உயிரின் ஜனனத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் பதற்றம் மேலிட , எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். சக தோழியின் பிரசவம் போன்று , பெண்களுக்கே உண்டான வாஞ்சையுடன் என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் எல்லாம் சுபமாய் முடிய , புத்தம் புதிய ஜீவன் ஒன்று எங்கள் அனைவரின் முகம் பார்த்தது. சுமை இறக்கிய களிப்புடன் எழுந்த பசு , குட்டியை நாவால் நக்கித் தன் இருப்பைத் தெரியப்படுத்தியது.
இனம் புரியா குதூகலத்துடன் நாங்கள் நகர எத்தனித்த போது , அது வரை படுத்திருந்த கன்று எழுந்து நிற்க முற்பட்டது. உதட்டோரப் புன்னகையுடன் நான் பார்த்துக் கொண்டே நடக்க , சில பல நொடிகளில் எழுந்து நடந்தே விட்டது.
ஆச்சர்யம் மேலோங்க , வீட்டிற்குள் சென்று அன்றைய தினசரியை விரித்தேன். படித்து முடித்தவுடன் ,அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலுமாக வழிந்தோடி விட்டது. பிறந்தவுடன் எழுந்து நடக்கக் கூடிய வரம் மனிதப் பிறவிக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் கல்லூரிக்குக் கிளம்பினேன். தான் பெற்ற சிசுவை , ஆறறிவு உடைய மனிதன் தன் இமை போலக் காப்பான் என்ற படைப்புருவாக்கத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கக் கூடிய, தினசரியில் நான் கண்ட அந்த செய்தி இதுதான்.


'பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.'





No comments:

Post a Comment