20 March 2009

தூணிலும் துரும்பிலும் ....


இன்று ஒரு வேலை நிமித்தமாக திருப்பரங்குன்றம் வரை சென்றிருந்தேன். கசகசக்கும் முன் மாலைப் பொழுது. ஆனால் மனம் ஏனோ ஏகாந்தமாய் இருந்தது. மழை பெய்தாலோ, ஏதேனும் கோவிலில் இருந்தாலோ அல்லது நல்ல திரைப்படம் பார்த்தாலோ இருக்கும் மனநிலை.
சென்ற வேலையை முடித்து விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். வெகு நேரமாகியும் எனக்கான பேருந்து வரவில்லையாதலால் தாகம் வாட்டவே, குளிர் பானம் பருகலாம் என அருகிலிருந்த கடையை நோக்கி நகர்ந்தேன். ஏதோ நெருட , என் பணப் பையைத் திறந்து பார்த்தேன். தோன்றிய எண்ணம் சரிதான், சரியாக பதினைந்து ரூபாய் இருந்தது. பேருந்துக்கு ஐந்து , பானத்துக்கு பத்து .

கடையில் யாரோ யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்கள். விரட்டப்பட்டது ஒரு அழுக்கு பிச்சைக்காரன். ம்ஹூம்..பிச்சைக்காரன் என்று கூட சொல்ல முடியாது. நழுவும் ஆடையை உணர முடியாத , தன்னுணர்வு மரத்த ,மனநிலை பிறழ்ந்த ஒரு வளர்ந்த பிள்ளை. பசிக்கிறது என்று கேட்டிருக்கிறான்.புண்ணியவான்கள் விரட்டியிருக்கிறார்கள். அவனோடு சேர்ந்து ஒரு பெண்மணியும் மோசமான வசவுகளை வாங்கிக் கொண்டிருந்தாள். அவனைப் பெற்றவளாக இருக்கக் கூடும்.
சாப்பிட்டு எத்தனை நேரமாயிற்றோ , அவன் பசி தாள முடியாமல் கீழே கிடந்த பிளாஸ்டிக் கப்பை எடுத்து தின்ன முயற்சித்தான். அவனுக்கு உதவ மனமிருந்தும் , அவன் இழி கோல நிலை காரணமாக நான் தயங்கினேன். அந்த அம்மாள் ஒவ்வொருவரிடமாய் கையேந்தி வந்து கொண்டிருந்தாள். வெறுப்பு கலந்த எதிர்மறைத் தலையாட்டல்களே பிச்சையாய் விழுந்து கொண்டிருக்க, என் முறை வருவதற்காய் காத்திருந்து , அவள் வந்தவுடன் பத்து ரூபாயை எடுத்து வேகமாய் நீட்டினேன். எனக்கு நன்றி கூட சொல்லாமல் (குறைந்த பட்சம் ஒரு பார்வை கூட தராமல்) , அந்த அம்மாள் பக்கத்தில் இருந்த கடைக்குள் நுழைந்து "மூணு புரோட்டா" என்றாள். பாவம், இவளும் சாப்பிட்டு நாளாயிற்று போலிருக்கிறது . ஆனால் என் எண்ணம் பொய் ஆகும் வகையில் , புரோட்டவை வாங்கியவுடன் அவனருகில் சென்று அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

அந்த வினாடி அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் விட ஒரு படி உயர்ந்தவனாக என்னை நானே உருவகித்துக் கொண்டேன். குளிர் பானம் குடிக்கும் வேட்கையைத் தியாகம் செய்து அந்தப் பணத்தை தானம் பண்ணும் எந்தவொரு மனிதனுக்கும் வரும் சிறு கர்வம்தான். அந்த திருப்பரங்குன்றம் முருகன் தான் இவர்களுக்கு உதவ என்னை அனுப்பியதாக ஒரு எண்ணமும் எழுந்தது.

அவன் சாப்பிட்ட வேகம் பார்த்து மலைத்து நின்றேன்.அரைகுறையாக முடித்துவிட்டு கையில் ஊற்றப்பட்ட தண்ணீரை மூச்சு விடாது குடித்தான். கண்கள் சொருகி , அந்த அம்மாவை அவன் பார்த்த பார்வை...அப்பப்பா...ஆயிரம் நன்றிகள் உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு பரிமாறப்பட்ட கணம்.

அவன் சாலையின் எதிர்புறம் கடந்து விட, அந்த அம்மாள் நேரே என்னை நோக்கி வந்து சொன்னதுதான் எனது அன்றைய நாளின் படிப்பினையாயிற்று.
"ரொம்ப நன்றி தம்பி...பாவம் இந்த பையன்...யாருன்னு தெரியலே...பசி தாங்க முடியல...என்கிட்டே பஸ்சுக்கு மட்டும்தான் காசிருக்கு...நல்ல வேளை, நீங்க காசு கொடுத்தீங்க...உங்களுக்கு புண்ணியமாப் போச்சு..." --என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து என் எதிர்வினைக்கு காத்திராமல் நகரத் தொடங்கியவளைக் கேட்டேன்.
"அம்மா...நீங்க எங்கிருந்து வர்றீங்க..?"
"திருமங்கலத்திலிருந்து..."

எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் திருமங்கலத்தில் இருக்க மாட்டாரா என்ன?

5 comments:

  1. இது போன்றவர்கள் இருக்கத்தான் உலகில் மழை பெய்கிறது.

    ReplyDelete
  2. So impressive. I was able to see the entire scene as if I was there, nicely narated. This gives great feeling about what this world is all about

    Sasi Sekar K

    ReplyDelete
  3. Sir i have gained subject knowledge when i was near you. Now am sure am going to learn ilakiam and world knowledge form you sir. Thanks for every thing

    ReplyDelete
  4. Sir,

    Slowly am seeing my mind thoughts in your words.. I missed all your blog all this time..

    am not anymore.. Please post more and new sir.

    ReplyDelete
  5. I dont know what to say, sir!! Somewhere in my mind, it 'll get stored permanently!!
    "Hats off" to that lady!
    and thank u for sharing!

    ReplyDelete