10 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 1

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கடவுள் உண்டா ?
உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.
அழகு என்பது என்ன ?
கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.
காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?
மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.
பணம் முக்கியமா ?
முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.
வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?
சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
6)பிரார்த்தனை என்பது என்ன ?
கடவுள் என்ற விஷயத்தை வேத விவகாரமாக எடுத்துக்கொண்டு தனக்குள் மூழ்கி, மற்ற எண்ணச்சலனங்களை நிறுத்தி, தான் எது என்பதை அறிந்து கொண்டு தெளிவது மிகுந்த சிறப்புடையது। ஆனால். அது எளிதில்லை. எல்லோராலும் கைகொள்ளும் விஷயமில்லை.
அதற்கு பதிலாய் உலக வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடி அது நிறைவேறுவதற்காக, எங்கும் பரந்து எல்லாமுமாய் இருக்கின்ற இறைவனை நோக்கி கைகூப்பி எனக்கு இதைக் கொடு என்று இறைஞ்சுவது மனிதர்கள் இயல்பு. எது எல்லாமுமாய் எங்குமாய் இருக்கின்ற இறைவன் என்று யோசித்து உள்ளுக்குள்ளே அதைத் தேட முற்படும்போது, தன்னுடைய மனதின் மீது மனம் பலமாகப்படுகிறது ஒரு புள்ளியில் மனம் ஆழ்ந்து நிற்கிறது. அதனால் பதட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படுகிறது. தனக்குள்ளே தானே, தன்னைப்பற்றி யோசித்து, தன்மீது அதிகப்படியான நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
விநாயகா.. வெங்கடாஜலபதி.. மூகாம்பிகைத்தாயே.. என்று கை கூப்புகிற போதே நான் என்னை நோக்கி கைகூப்பி, என்னைப்பற்றி எனக்கே சொல்கிறேன். எனக்கு இது வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்று என்று சொல்கிறபோது அந்த விஷயம் நோக்கி நான் அதிகம் மும்முரமாகிறேன். அதற்காகக் கடுமையாக உழைக்கிறேன்.பிரார்த்தனை என்பது நெஞ்சோடு புலத்தல். தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல். தனக்குத்தானே பேசி தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுதல். தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ளுவதற்கு கடவுள் என்கிற உருவமற்ற, எங்கும் நிறைந்த ஒரு சக்தி மனித குலத்திற்கு அவசியம். இதன் பொருட்டுதான் இந்தக் கடவுளைப்பற்றி பிரசாரம் செய்திருப்பார்களோ, தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பார்களோ, ஆலயம் என்ற ஒரு இடம் கொடுத்திருப்பார்களோ. ஹோமம், யக்ஞ்ம் என்ற நியதியை ஏற்படுத்தியிருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.பிரார்த்தனைதான் உண்மையான ஹோமம்। உடம்புதான் ஆலயம். உள்ளே “தான்” என்று கொள்கின்ற அந்த நினைப்புதான் கடவுள். தன்னை நோக்கி தான் பேசுதலே மிகப்பெரிய மந்திரஜபம்.
தன்னுள் மூழ்கி தான் யாரென்று தேடமுடியாதவரை ஞானிகளும், ஞானிகள் ஏற்படுத்திய மதங்களும் இப்படித்தான் வழிப்படுத்துகின்றன। பிரார்த்தனை செய் என்று தூண்டுகின்றன. செய்வன திருந்தச்செய் என்பது மகா வாக்கியம்.
பிறருக்கான வேலையில் கூட ஏமாற்றுதல் இருக்கலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதில் ஏமாற்றுதல் இருந்தால், அதைவிட முட்டாள்தனம் உண்டா? தான் செய்கின்ற பிரார்த்தனையில் கூட அக்கறையின்மையும் ஒருமுகப்படுத்தலும், கவனமும் இல்லாமலிருப்பின் வாழ்வதில் அர்த்தமுண்டா.என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்

2 comments:

  1. அவருடைய மாத வெளியீடு புத்தகங்களில் நிறைய கேள்வி பதில் வரும். பொருத்தமானதை வெளியிடலாமே!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆலோசனைக்கு நன்றி. தனித் தலைப்பு இட்டாயிற்று. நேரம் கிட்டும் போதெல்லாம் பதிவேற்றம் பண்ணுவதாக உத்தேசம்.

    ReplyDelete