15 April 2009

முப்பது வயதுக்காரன்

அன்னையின் முலைப் பாலுண்டு
ஆழ்நிலைத் தியானத்தில்
சூழ்நிலை மறந்து
அமிழ்ந்திருந்தது மழலைப் பருவம்.

வயதொத்த சிறார்களுடன்
வஞ்சனையின்றி விளையாடி
வெஞ்சினம் ஏதுமின்றி
மகிழ்ந்திருந்தது பால்யம்.

பள்ளிப் பாடங்களோடு
சிறுகதை, புதினங்களுடன்
இரவும் பகலும் உறவாடித்
துள்ளி ஓடியது முன்-பதின்பருவம்.

இலட்சியக் கனவுகளுடன்,
தன்னுள் தான் தேடலும்
கைகோர்த்துப் பயணித்து
இனிதாகக் கழிந்தது பின்-பதின்பருவம்.

நல்லதொரு பணி பெற்று
சகோதரக் கடமைகள் முடித்து
நட்பு, காதல்,மனைவி, பிள்ளையென
பூரிப்புடன் நிறைந்தது இளமைப் பருவம்.

பொய்யான இலக்குகளோடு,
தன் பலம் தானறியாது ,
சுயம் மறந்து, சுழலும் எந்திரமாய்
உழலும் இப்பருவத்தை எவ்வாறு வகைப்படுத்த ?

No comments:

Post a Comment