27 April 2009

தீராக் கேள்வி - தெளிவான பதில் 2

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கோபமில்லாத நிலையே சக்தி என்று சொல்கிறார் மகாகவி.அப்படியொரு நிலை உண்டா?
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.

எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.

வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்

எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.


`

1 comment:

  1. /தற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
    //

    இதற்கான பதில் மிக அருமையாய் இருக்கிறது

    ReplyDelete