13 April 2009

தோழியின் பிரிவில்...

அது ஒரு கனாக் காலம்.
காரிகையைக் கண்டிருந்தேன்...
அவளை நினைவில் கொண்டிருந்தேன்.
என் நிலை என்னென்று அறியாது
தன்னிலை மறந்திருந்தேன்.

என் கருத்து பொய்யென்று
காலம் எடுத்துரைக்க
கரைந்து போயிருந்தேன்...
கரைந்து உறைந்தே போயிருந்தேன்.
நான் சுத்தமானேன்.

உறைந்த நிலையில்
தெளிந்தது மனது.
தெளிந்த நிலையில்
தெரிந்தது அறிவு.
ஒளிந்திருந்தேன் தனித் தீவில்
உறவுகள் தவிர்த்து.

கல்லூரிக் கனவுலகு
கை காட்டும் தருவாயில்
நிதர்சனக் கள உலகு
கை நீட்டும் தருவாயில்
கை கோர்த்தனர் நண்பர்கள்.
நட்பென்னும் நல்லதொன்றை
நான் எடுத்து அணைப்பதற்குள்
நாள் முடிந்தது - எனினும்
நட்பு தொடர்ந்தது .
நான் இன்னும் சுத்தமானேன்.

அச்சத்துடன் அடி வைத்தேன்
எதிர் நோக்கும் நிஜ வாழ்வில்...
எதிர்ப்பட்ட மனிதரெல்லாம்
எனை ஏய்க்க முற்பட
ஏங்கியது என் மனம்
நல்லதோர் உறவுக்காய்...

நல்லதோர் உறவாய் தோழி நீ வந்தாய்.
நட்பென்று பெயரிட்டேன் நான்.
ஆண்பால் பெண்பால் கடந்து
நட்பால் ஒரு பாலமமைத்தோம்.
அதில் நித்தம் பயணம் செய்தோம்.

கல்லூரியில் தவறிய நட்பை
நங்கை உன்
நல்லெண்ணத்தில் கண்டேன்...
நீ செய்த உதவிக்கு
நன்றி ஏதும் கூறவில்லை.
பிணக்கம் ஏற்பட்டாலும்
இம்மியளவும் பிரியவில்லை.

ரத்த பந்தங்கள் ஒரு நாள்
அர்த்தமற்றுப் போகலாம்.
சுத்தமான நட்பு என்றும்
சுருதி மாறுவதில்லை.

அமாவாசைக்கு முன்தினமே
மனதைத் தேற்றிக் கொள்பவன் நான்...
எதிர்பாரா உன் ஒருநாள்விடுப்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
தாங்கிக் கொண்டேன்...
தாங்கிக் கொள்வேன்
உன் ஒரேயடி விடுப்பையும்...!

என் உணர்வின்
சரியான பரிமாணத்தை
நீ உணர்ந்த நம்பிக்கையில் நான்.

உண்மையைச் சொல்லவா...
நீ என்னை விலகுவதை
நான் இன்னும் நம்பவேயில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்...
என் நினைவிருக்கும் வரை
நான் நினைவிழக்கும் வரை
என் நினைவில் நீயிருப்பாய்.
நினைத்தலில் உள்ள சுகம்
நினைக்கப்படுதலிலும் உண்டு.
ஆகவே
சுய நலக்கரனாய் சொல்கிறேன்...
எனக்காக என்னை நினைத்திரு.

சில மாறுதல்கள்
சில நிறைகளைத் தரலாம்.
சில நிறைகள்
பல குறைகளைத் தரலாம்.
அந்தக் குறைகள்
குரலெடுத்து அழும் சத்தம்
யாருக்கும் கேட்பதில்லை.

யாதொரு துகளும் நம் நட்பிடை வராதிருக்க
அனுதினமும் ஆண்டவனை வேண்டும்

-உன் அன்பு சிநேதிதம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து
(பணியிடம் விட்டு நீங்கிய உயிர்த் தோழியின் நினைவாக )

4 comments:

  1. //யாதொரு துகளும் நம் நட்பிடை வராதிருக்க ,அனுதினமும் ஆண்டவனை வேண்டும்//

    இன்றளவும் உங்கள் நட்பு நீடிக்கிறது என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  2. //ஆகவே
    சுய நலக்கரனாய் சொல்கிறேன்...
    எனக்காக என்னை நினைத்திரு.//
    நேர்மையான வரிகள். நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  3. Nice writing style. keep it up.

    ReplyDelete
  4. அமாவாசைக்கு முன்தினமே
    மனதைத் தேற்றிக் கொள்பவன் நான்...
    எதிர்பாரா உன் ஒருநாள்விடுப்பை
    எப்படி தாங்கிக் கொள்வேன்?

    I liked these lines very much..reminds me of my school days :)

    ReplyDelete