22 July 2012

ஆடும் வரை...


வேஷங்கள் எத்தனை இடினும்
அலுக்காத ஆட்டமிது.
துவேஷங்கள் எத்தனை படினும்
துவளாத ஆட்டமிது.

ரோகங்கள் எத்தனை வரினும்
ருசி குறையா ஆட்டமிது.
துரோகங்கள் எத்தனை சுடினும்
சுருதி குறையா ஆட்டமிது.

மோகங்கள் எத்தனை தீரினும்
துடிப்படங்கா ஆட்டமிது.
சோகங்கள் எத்தனை சூழினும்
சோர்வடையா ஆட்டமிது.

துன்பங்கள் எத்தனை தொடினும்
தளராத ஆட்டமிது.
இன்பங்கள் எத்தனை தரினும்
திகட்டாத ஆட்டமிது.

மனிதர்கள் சில நேரம்
விரும்பாத ஆட்டமிது.
விரும்பாது போனாலும்
விலகாத ஆட்டமிது.

வெற்றியோ தோல்வியோ
ஆடித்தான் ஆகணும்.
வெள்ளென  எந்திருச்சு
ஓடித்தான் தீரணும்!

No comments:

Post a Comment