20 August 2010

மனம் மலரட்டும்-1

'காயமே' இது பொய்யடா !
உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுக்குத்தான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும். ஹிப்னாடிசம் மாதிரியானது இது. நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களை யாரும் ஹிப்னாடைஸ் செய்ய முடியும்.இங்கு உலகம் என்பதில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அடங்குவார்கள் ஏன், கடவுளும் கூட இந்தப் பட்டியலில் அடக்கம்தான்! வேதாந்தம் ஒரு படி மேலே போய் , ' யாராலும் உங்களைக் காயப்படுத்த முடியாது' என்று சொல்கிறது. ஆத்மாவாகிய 'நான்' யாரையும் காயப்படுத்துவதில்லை; தானும் காயப்படுவதில்லை என்பது அதன் சாரம்.
கடவுள் நமக்கு ஞாபக சக்தியைக் கொடுத்திருப்பது சுய மதிப்பீடு செய்வதற்காக அல்ல.வாழ்க்கையில் தேவையானவற்றை மறக்காமல் இருப்பதற்காகவே! அதாவது , அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் மறந்து விடாமல் அடையாளம் காண்பதற்காக!
நினைவுகள் நீங்கள் அல்ல. வாழ்க்கையில் சில எண்ணங்களைப் பதிவு செய்து கொள்கிறீர்கள். இவற்றில் சில ரம்மியமாக இருக்கின்றன.வேறு சில நெருடலாக அமைகின்றன.மனம் பக்குவப்பட்டிருந்தால் , வாழ்க்கையில் எல்லாம் ரம்யமாக இருக்காது என்கிற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பக்குவப்பட்டவர்கள் இந்த இருவகையான அனுபவங்களையும் சம நிலையில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த வித குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுவதுமில்லை, மற்றவர் தன்னைக் காயப்படுத்த எந்தச் சூழ்நிலையிலும் அவர் அனுமதிப்பதில்லை. காரணம், ' தன்னிடம் அடுத்தவர்கள் இப்படித்தான் பழக வேண்டும் ' என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே காயப்படுகிறார்கள்.
உங்கள் மீது அடுத்தவர் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? உங்களுக்கு ஏன் அவர் தொந்தரவு கொடுக்க வேண்டும்? உங்களைக் கண்டு ஏன் அவர் மிரள வேண்டும்? உங்களைப் பார்த்து ஏன் அவர் பொறாமைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்த உடனேயே அடுத்தவர் மீது உங்களுக்கு அனுதாபம் ஏற்படத் துவங்கும். அவருடைய இயல்புகளை எளிதில் புரிந்து கொண்டுவிடுவீர்கள். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதயும் கற்றுக் கொண்டு விடுவீர்கள். சில சமயம் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டி வரும்.சில சமயம் அவர்களுடன் ஏதாவது பேச வேண்டி வரும்.சில நேரத்தில் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டி வரும். நீங்கள் காயப்படாத வரையில் உங்கள் விருப்பப்படி எதையும் செய்யலாம்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி

No comments:

Post a Comment