30 April 2012

முதல் மரியாதை

நேற்று மாலை தொலைக்காட்சியில் 'முதல் மரியாதை' படம் பார்த்தேன்.  (எத்தனையாவது தடவை?!).என்னுடைய துவக்கப் பள்ளிப் பருவத்தில் வெளிவந்த படம். பாரதிராஜாவே நினைத்தாலும் இப்போது அவரால் இது போன்ற படத்தைக் கொடுக்க முடியாது. எனக்குத் தெரிந்து நடிகர் திலகம் அவர்கள் over acting ஏதும் செய்யாமல் நடித்த இந்த (ஒரே) படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் முறை போலவே ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம்.
எளிமையான கதை , தொய்வில்லாத திரைக்கதை, அசலான பாத்திரங்கள், எதார்த்தமான சூழல், அளவான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு, இயல்பான நடிப்பு, அர்த்தமுள்ள பாடல் வரிகள், இத்தனைக்கும் மகுடமாய் இளையராஜாவின் இசை என படத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டவை.
ஒரு தலைமுறையின் ரசனையை வளர்த்தெடுத்ததில் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு வகித்தவை இது போன்ற திரைப்படங்கள் தான். மனித உறவின் உளவியல் சிக்கல்களை எழுத்தில் வடித்த கதாசிரியர்களும், அவ்வுணர்வுகளை திரையில் கொணர்ந்த இயக்குனர்களும், அவற்றை பார்வையாளனுக்குள் ஊற்றிய இசையமைப்பாளர்களும் தாங்கள் பெற்ற ஊதியத்திற்காக மட்டுமின்றி , தங்கள் ஆத்ம திருப்திக்காக பணியாற்றியதுதான் காலத்தால் அழியாத படைப்புகளாக நம்முடன் உலவுகின்றன.
ஊர்ப் பெரியவருக்கும் , பரிசல் ஓட்டும் இளம் பெண்ணுக்கும் இடையிலான இனம் புரியாத நேசத்தைக் காட்டிய 'முதல் மரியாதை '-
படிப்பு வாசனையில்லாத முரடனுக்கும், அவனை மனிதனாக்கும் ஆசிரியைக்கும் இடையில் மலரும் அன்பைக் காட்டிய 'கடலோரக் கவிதைகள்'-
புகழ் பெற்ற பாடகிக்கும், அவளது தீவிர ரசிகனுக்கும் இடையில் உருவாகும் உன்னத உறவைக் காட்டிய மகேந்திரனின் , 'ஜானி'-
பொருந்தாக் காமத்தை விரசமில்லாக் காதலுடன் மிக நேர்த்தியாகக் காட்டிய 'சிந்து பைரவி'-
பருவத்தில் தோன்றும் காதல் போன்றதொரு உணர்வை ஆரவாரமில்லாக் கொண்டாட்டத்துடன் காட்டிய 'இதயம்'-
முடிந்து போன முதல் காதலில் இருந்து மீள முடியாத மனைவியை ஆதரிக்கும் கண்ணியமான கணவனைக் காட்டிய 'மௌனராகம்'-
இன்னும் எத்தனை படங்கள் ! எங்கள் தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள் என்று உரத்துச் சொல்வேன்.
நடிகர், நடிகையரின் முகம் தாண்டி மற்ற தொழில் நுட்பப் பின்னணி குறித்த பிரக்ஞையற்ற வெகுஜனக் கூட்டமாகத் தான் இப்படங்களை அனுபவித்தோம்.... கொண்டாடினோம்தொழில் நுட்ப நுணுக்கங்கள் அனைத்தும் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்று சேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் இவற்றை மீண்டும் பார்க்கும் போது , வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே camera angle, lighting, editing, re-recording என அனைத்துத் துறை ஜாம்பவான்களும் திரை மறைவில் தங்கள் பங்களிப்பை மிகத் திறமையாகவும், நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்து அற்புதக் காவியங்களைப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்களுக்கும் , இன்றைய குப்பைகளுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் - Decency. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
'முதல் மரியாதை' தந்த கனத்துடன் channel ஐத் திருப்பினால், 'அடிடா அவளை, வெட்றா அவளை ' என்கிறான் ஒருவன். பதறிப் போய் அடுத்த channel போனால் , 'கொல வெறி...கொல வெறி' என்று அலறுகிறான் இன்னொருவன்.
ஐயோ பாவம் ...இன்றைய இளைஞர்கள்!

No comments:

Post a Comment