28 May 2012

தீராக் கேள்வி- தெளிவான பதில் 4

1)நல்லவர்கள் யார் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அதெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. இதுதான் இந்த வாழ்க்கையின் சுவாரஸ்யம். அதுதான் இந்த வாழ்க்கையை வேகமாக்குகின்ற விஷயம். மரணம் எப்படி தெரிந்து கொள்ள முடியாத விஷயமோ,அதே போல் தான் யார் நல்லவர், எது வரையில் நல்லவர் என்பதும் தெரிந்து கொள்ள முடியாத ரகசிய விஷயம். நானும் நல்லவனாக இருப்பதற்கே முயற்சி செய்து வருகிறேன். இன்னொருவர் முதுகில் குத்தாமல், இன்னொருவரைப் பற்றி இழிவாகப் பேசாமல், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கர்வப்படாமல் , இனிமையாக இருக்கக் கடுமையாக முயற்சிக்கிறேன். இது எளிதான் விஷயம் அல்ல என்பதும் எனக்குப் புரிகிறது. எல்லாத் தெளிவுகளையும் மீறி கர்வம் வர வாய்ப்பிருக்கிறது. அந்தக் கர்வம் கெட்டதாகத்தான் வெளிப்படும். கெட்ட விஷயமாகத்தான் மற்றவரைப் பாதிக்கும்.
2)எனக்கு பொழுதே போகவில்லை. நல்ல பொழுது போக்குக்கு ஒரு விஷயம் சொல்லுங்களேன்.
வீடு சுத்தம் செய்யுங்கள். தினந்தோறும் தரை துடையுங்கள். வாரந்தோறும் அலமாரியைத் துடைத்து , ஒட்டடை அடித்து , மின்விசிறி துடைத்து , விளக்குகள் சுத்தம் செய்து பளிச்சென்று வீட்டை வைத்திருங்கள்.தொட்டியில் சிறிய செடிகள் வளருங்கள். இடமிருப்பின், ஒரு தொட்டியில் மீன்களும் வளர்க்கலாம். சிறியதாய் , தியான ஸ்லோகங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கி , ஒரு நாளைக்கு பலமுறை படியுங்கள். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்று நினைக்கிறேன். எனவே தான், பொழுது போகவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள்.
3)இத்தனை வயது வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். ஒருவன் வாழ்க்கையில் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
புலம்பக் கூடாது.  வீடு வாசல் பற்றி , மனைவி மக்கள் பற்றி ,சாப்பிடும் உணவு பற்றி,ஆரோக்கியம் பற்றி மற்றவரிடம் சொல்லி புலம்பக் கூடாது. எப்படியிருக்கிறாய் என்று கேட்டால் நலமாக இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எதோ இருக்கிறேன் என்று சொல்வதும் புலம்பல்தான். என்ன கிடைத்திருக்கிறதோ , அதை வைத்துத் திருப்தியடைய தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை ரொம்ப ருசியாக அனுபவித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.சற்று விலகல் ஏற்பட்டால் இந்தக் குறை சொல்லும் புத்தி வராது. புலம்பல் இருக்காது. அனுபவிக்க உலகில் நல்ல விஷயங்கள்   நிறைய  இருக்கின்றன. வேதனைகளையும்  கூட இறைவன் கருணை என்று புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை சந்தோஷமானதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment