28 December 2011

நான் அறிந்த ஓஷோ


தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி 'சொர்க்கத்தின் வாசலில்' என்ற தலைப்பின் கீழ் பகிரலாம் என்று எண்ணம். தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக,ஏற்கெனவே நான் எழுதிய 'வாழும் அனுபவ'த்தை இங்கு எடுத்தாள்கிறேன்.


மழை ஓய்ந்த பின்னிரவில்

அலை ஓய்ந்த மனதோடு

இதமான குளிர் அறையில்

மிதமான உண்டி முடித்து

உடலுறுத்தா தலையணையில்

வாகாய்த் தலை சாய்த்து

அதிராத பாடலின்

சுகராகப் பின்னணியில்

அவிழாத புதிரவிழ்க்கும்

புதிதாய் ஒரு புதினத்தை

வாசிக்கும் அனுபவமே

வாழும் அனுபவமாம்.


'புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா , ஆம் எனில்.. எப்படி? ' - வாசிப்பனுபவம் இல்லாத அபாக்கியசாலிகளின் மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு பதில் , இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் உள்ளது. அவர்கள் குறைந்த பட்சம் அதையாவது தேடிப் பிடித்து வாசித்துக் கொள்வார்களாக.


நிற்க. இப்பொழுது வாசிப்பிலிருக்கும் புத்தகம் சுவாமி ஆனந்த பரமேஷ்வரர் 'நான் அறிந்த ஓஷோ' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் ஓஷோவின் 200 கேள்வி பதில்கள்-இரண்டாம் பாகம்(charupraba publications). ஓஷோவின் பெரும்பாலான புத்தகங்கள் கேள்வி பதில் வடிவிலானவைதான் என்றாலும் அவையனைத்தும் ஒரே தத்துவத்தை ஆழச் சென்று விளக்குபவையாக இருக்கும். இந்நூலின் சிறப்பென்னவெனில், அடிப்படையில் ஆரம்பித்து ஆழமானது வரை சாமான்யரின் மனதில் தோன்றும் ஐயங்களனைத்திற்கும் படிப்படியாக பதில்கள் (in a flow) தொகுக்கப்பட்டுள்ளன.நான் இது வரை படித்ததில் இது தான் உச்சம். ஓஷோவை அறிந்திராதவர்களுக்கு , ஒரே மூச்சில் அவரின் கருத்துக்களை முழுமையாக உணரும் வகையில், இந்நூல் ஒரு வரப்பிரசாதம். தன்னுள் 'தான்' தேட முனைவோர் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.



கடலின் சில துளிகள் :
- தியானம் என்றால் 'விழிப்புடன் கவனித்தல்' . நீங்கள் விழிப்புடன் எதைச் செய்தாலும் அது தியானமாகும்.நீங்கள் ஒவ்வொரு அடியையும் விழிப்போடும் உணர்வோடும் கவனித்தால் நடப்பது கூட தியானமாகும்.

- மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. அது, துக்கம் வரும் பொழுது அதைப் பூரணமாக அனுபவியுங்கள். அத்துடன் இணைந்து செல்லுங்கள்.

- உடலில் உள்ள ரத்த ஓட்டம், உயிரோட்டம், சுவாச ஓட்டம் அனைத்திற்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு.அதைப் போல வாழ்வுக்கும் நிகழ்காலம் மட்டுமே உண்டு. ஆனால் மனதிற்கு நிகழ்காலம் கிடையாது. இதுதான் பிரச்சினையே ! வாழ்வு என்பது 'இப்பொழுது ,இங்கே' தான் இருக்கிறது. ஆகவே, கூடிய மட்டும், 'இங்கே, இப்பொழுது ' வாழ முயற்சி செய்யுங்கள். மற்றவை எல்லாம் இயல்பாகத் தானே உங்களைத் தேடி வரும்.


-இந்தக் கணத்தில் வாழ்வது என்றால் என்ன? செயல்படும் போது செயலில் மனம் முழுமையாகக் கரைய வேண்டும். செயலற்று இருக்கும் போது எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை வெறுமனே பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!


-உண்மை என்பது ஒரு உயிர்த்தன்மை (Existence) அல்லது ஒரு இருப்பு (Being) அல்லது ஒரு சக்தி ஓட்டம் (Energy process) அல்லது கடவுள்தன்மை(Godliness). ஆனால் அது பொருள்(object) அல்ல. கடவுள் அல்ல! இந்த உண்மை எல்லை இல்லாதது , முடிவு இல்லாதது, எதிலும் எங்கும் இருப்பது. அதனுடைய மொழி மௌனம்தான்.

-எண்ணமற்ற தியானம் ஒன்றே உங்களை உண்மையாக அறிந்து கொள்ள உதவும். நீங்கள் மனதை சாட்சியாக நின்று பார்க்கும் பொழுது ,உங்கள் சக்தி அதன் மூலாதாரத்தை நோக்கிச் செல்கிறது. நீங்கள் உங்கள் மனதை ஒன்றில் வைக்கும் பொழுது ,உங்கள் சக்தி மனதை வலுப்படுத்த செலவாகிறது.முன்னது சக்தி சேமிப்பு; பின்னது சக்தி இழப்பு.


No comments:

Post a Comment