30 December 2011

சரிகமபதநி


"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..." - இன்று அதிகாலை என்னிடமிருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.

பள்ளி அரையிறுதி விடுமுறை , கல்லூரி பருவ விடுமுறை, மார்கழிப் பனி , மாக்கோலம் , கிறிஸ்துமஸ் பண்டிகை.................

டிசம்பர் மாதம் என்றதும் சட்டென்று உங்கள் நினைவிற்கு வருவதின் பட்டியல் பெரும்பாலும் இப்படித்தானிருக்கும். இதில் விடுபட்டுப் போன 'மார்கழி மகா உற்சவம்' பற்றிய என்னுடைய ஏக்கம் எழுத்தில் வடிக்க முடியாதது. சென்னையின் தெருக்களில் இசைப் பேராறு கரைபுரண்டோடும் இந்த ' december season' நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறியும் பொழுது இந்த ஏக்கம் பன்மடங்காகிறது.


படிப்பு, வேலை , குடும்பம் ,குழந்தைகள் , வீடு , இன்ன பிற வசதிகள் என சமூகத்தில் மதிப்புடன் வாழத் தேவையானவற்றை அடைந்திருந்தாலும் மனம் அடைய விரும்பும் உச்ச பட்ச சந்தோஷத்தின் எல்லை வரையறுக்க இயலாததாகவும் , இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற தவிப்பு தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. ருசியான உணவு, அமைதி தரும் ஆன்மிகம் , அருமையான புத்தகம் , இனிமையான இசை , ஆகச் சிறந்த திரைப்படம், ஆழமான நட்பு என மகிழ்ச்சி தரும் தளங்களை மனம் தொடர்ந்து பரீட்சித்துக் கொண்டேதானிருக்கிறது. இதில் நான் தவற விட்டதும் , இனிமேல் கைக்கொள்ள முடியாததுமான இசை ஞானத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னுள் சொல்லவொண்ணா துயறேருகிறது.

கேட்கும் நல்ல திரைப்பாடல்களைச் சிலாகிப்பதும் , உற்சாகமான மனநிலையில் அவற்றை அசை போடுவதும் தான் என்னுடைய இசை அறிவின் எல்லை. இசை பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை எவ்வளவு முயற்சித்தாலும் புரிந்து கொள்ள இயலாத பொழுது எனக்கு நேரிட்டிருக்கிற உன்னத உலகத்தின் இழப்பை என்னால் உணர முடிகிறது. கல்யாணியும் , காம்போதியும் , பைரவியும் , பந்துவராளியும் இந்த ஜன்மத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னுடன் உறவாடும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நித்யஸ்ரீயும் , டி.எம்.கிருஷ்ணாவும் , சௌம்யாவும், சுதா ரகுநாதனும் செய்யும் ஆலாபனைகள் என்னுள் வெறும் சப்தங்களாகவே வந்து விழும் பாமர நிலையிலிருக்கிறேன். வர்ணம், கிருதி, கீர்த்தனை , தில்லானா, தரு, தரங்கம், ராகம், தானம், பல்லவி போன்ற பதங்களுக்கு பொருள் தெரிந்து செரிப்பதே பெரும் அறிவு என்றாகிட்டது.


இன்று சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் 'சரிகமபதநி' போடுவதைப் பார்க்கும் போது சற்றுப் பொறாமையாகவே இருக்கிறது. அவ்வப்போது நினைத்துக் கொள்வேன், நாம் தவற விட்டதை, நமக்குத் தவறி விட்டதை , நம் பிள்ளைகளுக்காவது கொடுக்க வேண்டும் என்று. புற ஆதாயத்திற்காக இல்லாவிட்டாலும் அக மலர்ச்சிக்காகவாவது பிள்ளைகளுக்கு முறையான இசையை பழக்கப்படுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி இசை வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். இன்று அதிகாலை இவ்வாறெல்லாம் எண்ணம் பீறிட , அருகில் விளையாடிக் கொண்டிருந்த புவனிடம் கேட்டேன்.

" செல்லம் ... உனக்குப் பிடிச்ச பாட்டை அப்பாக்கிட்ட பாடிக் காட்டு , பார்ப்போம்."

" கொலவெறி...கொலவெறி...கொலவெறி... கொலவெறிடி..."

"புவன்...நீ பெரிய்ய்ய்ய ஆளா வருவடா..."

No comments:

Post a Comment