28 October 2010

நாரில் பூத்த மலர்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் தன மனைவியின் பிரிவில் எழுதியது ...
என் மனைவியிடம் மனைவிக்கு உரிய இலக்கணங்கள் இருந்தது இல்லை. எங்கள் 46 ஆண்டு இல்லற வாழ்க்கையில் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை . நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் அதுதான் உண்மை. இந்தப் பெருமை என்னைச் சாராது; அவளையே சாரும்.
நான் சில நேரத்தில் கோபத்தில் நெருப்பை உமிழ்ந்தாலும், அவள் அமைதியாக இருந்து விடுவாள். இது என்னைச் செருப்பால் அடித்தது போல் இருக்கும். ' இவளைப் போய்த் திட்டிவிட்டோமே!' என்று நான் இரண்டு நாள் வருத்தப்படுவேன்.
பூ வேண்டும், புடவை வேண்டும் , நகை வேண்டும் என்று அவள் ஒருநாள் கூடக் கேட்டதே இல்லை.
பாலைவனத்துக்கேன்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்கு என்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் என் மனைவி. அவள் போய் விட்டாள். நான் வெறும் பாலைவனமாய் நிற்கிறேன்.
என் மனைவி எனக்குக் கிடைத்த பிறகு நான் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
அவள் நான் கேளாமலே கிடைத்த வரம். அவள் மூலம் இறைவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டான் அவளைத் தவிர ,வேறு யாரும் என்னோடு வாழ்ந்திருக்க முடியாது.
மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும் போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்
என் மனைவி இளமையில் மதுவாக இருந்தாள்;நடுமையில் பாலாக இருந்தாள்; முதுமையில் மருந்தாக இருந்தாள்.
என்னை நேசித்த ஆத்துமாவை ஆத்துமா நேசித்தது. அவள் தனது சுவாசப் பையை அதற்கு உணவாகப் பரிமாறினாள். மூச்சு விடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், கடைசியில் மூச்சை விட்டு விட்டாள்.
என்னதான் உயிர் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தாலும் , ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுகிறது.
அப்படித்தான் அவள் போய் விட்டாள்.
-கவிக்கோ அப்துல் ரகுமான் விகடனில்

No comments:

Post a Comment